வேலூரில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த ஆட்டோவில் பேட்டரி திருட்டு: சிஎஸ்ஆர் கூட பதிவு செய்யாத வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார்!வேலூர், ஏப். 26-வேலூர் பிஷப் டேவிட் நகரைச் சேர்ந்தவர் தேவசகாயம் (45 ).இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் பணி முடிந்து கடந்த 20ஆம் தேதி (திங்கட்கிழமை) இரவு 11 மணிக்கு தனது வீட்டின் முன்பு வாடகை ஆட்டோவை நிறுத்தி வைத்துவிட்டு தூங்கச் சென்று விட்டார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்தபோது ஆட்டோவில் இருந்த பேட்டரியை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் தேவசகாயம் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்குச் சென்று குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட தெற்கு குற்றப்பிரிவு போலீசார் சிஎஸ்ஆர் கூட வழங்காமல் அவரை அலைகழித்துள்ளனர். இதுநாள் வரை அந்த பேட்டரி திருட்டு போனது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, விசாரணையும் நடத்தவில்லை. சிஎஸ்ஆரும் அவருக்கு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு புகாரை பெற்றால் சிஎஸ்ஆர் தர வேண்டும் என்பது விதி. அந்த விதியை மீறி செயல்படுகின்றனர் தெற்கு காவல் நிலைய போலீசார் என்று சொன்னால் அது மிகையாகாது. இது போன்ற தகவல்கள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் காதுகளில் விழுகிறதா? அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள், மறைக்கப்படும் உண்மை தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வேலையை பார்க்க நியமிக்கப்பட்ட தனிப்பிரிவு போலீசார் என்ன வேலைதான் பார்க்கின்றனர் என்று தெரியவில்லை. இவர்களும் காவல் நிலையத்தில் சீருடை அணிந்து பணியாற்றுபவர்களுடன் சேர்ந்து அவர்கள் தரும் ‘ப’ வைட்டமினுக்கு ஆசைப்பட்டு எந்த தகவலையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் மறைத்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாக இதில் இருந்து தெரிய வருகிறது. பொதுமக்கள் புகாரை கொடுத்துவிட்டு கிணற்றில் போன்ற கல் போன்று கையில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் அலைந்து திரிந்து கொண்டுள்ளனர். இந்த ஒரு விஷயமே அதற்கு உதாரணமாக கொள்ளலாம். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப் பிரிவு போலீசாரை கூண்டோடு மாற்றிவிட்டு புதிய நபர்களை குறிப்பாக உண்மை தன்மையை கண்டறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்பவர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்களும், பாதிக்கப்பட்ட நபர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இது போன்று தொலைந்த ஆட்டோவின் பேட்டரி கிடைக்குமா? கிடைக்காதா? நடவடிக்கை எடுப்பார்களா? எடுக்க மாட்டார்களா? தெற்கு குற்றப்பிரிவு போலீசார் என்பது சிதம்பர ரகசியமாகவே உள்ளது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இனி இதில் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காவல்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இதுபோன்ற செயல்களால் மெல்ல இழந்து வரச் செய்கின்றது இது போன்ற சம்பவங்கள் என்று சொன்னால் அதுதான் நிதர்சனம்.

வேலூர் மாநகராட்சி 3வது வார்டு சி. எம். ஜான் தெரு அருகில் குடிநீருக்கு தவிக்கும் பொதுமக்கள்: கண்டுகொள்ளாத மாநகராட்சி கவுன்சிலர்!வேலூர், ஏப். 26-வேலூர் மாநகராட்சி 3வது வார்டு பர்னீஸ்புரம். இந்த வார்டுக்கு உட்பட்டது சி. எம். ஜான் தெரு. இந்த வீதிக்கு அருகில் மிஷன் காம்பவுண்ட் அமைந்துள்ளது. அதற்கு பக்கத்தில் சர்ச் தெரு ஒன்று உள்ளது. இந்த பகுதியில் மிகவும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பொதுமக்கள், அன்றாடம் காய்ச்சிகள் வாழும் பகுதியாகும். இந்த பகுதியில் குடிநீருக்காக கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர். சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இது குறித்து வேலூர் மாநகராட்சி 3வது வார்டு கவுன்சிலர் திமுகவைச் சேர்ந்த ரவிக்குமாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் அந்த வேண்டுகோளை அலட்சியப்படுத்தியதோடு, தெனாவெட்டாக எனக்கு எப்போது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதுதான் இந்த பகுதிக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருவேன் என்று பதில் அளித்துள்ளார். தண்ணீருக்காக மூன்று தெருக்கள் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை இருப்பதாக பொதுமக்கள் எடுத்துக் கூறியும் அதை காதில் வாங்காமல அலட்சியப் போக்கில் நடந்து கொண்டுள்ளார் கவுன்சிலர் ரவிக்குமார் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. அதே சி.எம்.ஜான் தெருவில் சின்டெக்ஸ் தொட்டி கட்டி குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனால் அந்த சின்டெக்ஸ் தொட்டியை யாரும் அதிக அளவில் பயன்படுத்துவதே கிடையாது. குறிப்பாக அந்த பகுதியில் உள்ள மாடுகளை குளிப்பாட்டுவது மற்றும் இயற்கை உபாதைகளை கழித்து விட்டு கால் கழுவுவது மற்றும் அந்த சின்டெக்ஸ் டேங்க் தொட்டியில் உள்ள குழாயில் ஹோசை சொருகி தங்களது வீடுகளுக்குள் வளர்க்கப்படும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது என்று அநாவசியமாக தண்ணீரை வீணாக்கி வருகின்றனர் சி.எம்.ஜான் தெரு மக்கள் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. சி.எம்.ஜான் தெருவில் வீட்டுக்கு வீடு மோட்டார் பொருத்தி தண்ணீர் செலவு செய்கின்றனர். அத்துடன் அனைத்து வீடுகளுக்கும் மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகமும் இடைவிடாது வீட்டுக்கு வீடு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இதே பகுதியில் சின்டெக்ஸ் டேங்க் அமைத்துக் கொடுத்துள்ளாரே தவிர தண்ணீரே இல்லாத பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை இந்த கவுன்சிலர் ரவிக்குமார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் என்னை கேட்காமல் பத்திரிகையாளர்களை சந்தித்து புகார் கூறுகிறீர்களா? அவர்களையே தண்ணீர் போட்டு கொடுக்க சொல்லுங்கள் என்று தெனாவெட்டாக பதில் கூறுகிறாராம். இவர் ஒரு மக்கள் பிரதிநிதியா? அல்லது ஒரு சைக்கோவா? என்று தெரியவில்லை என்கின்றனர் பொதுமக்கள். மக்கள் பணி செய்வதாகச் சொல்லி தேர்தலில் நின்று மக்களிடம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்று விட்டு இன்று அதே மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெனாவெட்டாக பதிலளிப்பதுடன் இப்போது நான் செய்ய மாட்டேன் என்று அடாவடி பேசுகிறார் இந்த கவுன்சிலர். இது குறித்து இந்த பகுதியில் வாழும் சமூக ஆர்வலர் பாபு என்பவர் கூறுகையில்: இது போன்ற திமிர் பிடித்த கவுன்சிலர்கள் எங்களுக்கு தேவை இல்லை. குறிப்பாக தவித்த வாய்க்கு தண்ணீர் ஊற்றாமல் அலட்சியமாக பதில் கூறுகிறார் இந்த கவுன்சிலர். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களை மிகவும் கேவலமாக நடத்துகிறார். மனிதனை மனிதனாக கூட மதிக்க தெரியாதவர் ஒரு கவுன்சிலரா? என்று கேள்வி எழுப்பியதுடன் தண்ணீர் இல்லாத பகுதிக்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக வேலூர் மாநகராட்சி நிர்வாகம் தண்ணீர் கொடுக்க உடனடியாக வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார். குறிப்பாக பொதுமக்கள் வேண்டுகோளை செவிமடுக்காத இந்த கவுன்சிலர் சமூக ஆர்வலரின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா? என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் இந்த பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு மிஷன் காம்பவுண்டு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தவும் ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது. நிலைமை மோசமாவதற்குள் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த கோடையை சமாளிக்க தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்றும், நாளையும் கணக்கும் இனிக்கும் – கோடைகால குழந்தைகள் கணிதத் திருவிழா 2026!வேலூர், ஏப். 25-6ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன் பெறச் செய்யும் வகையில் கணித திருவிழா சிறப்பு கருத்தாளர்களைக் கொண்டு கணக்கும் இனிக்கும், கணிதத்தை எளிமையான முறையில் கற்கும் செயல்பாடுகள் குறித்து பயிற்சிகள் அளித்தல், எண்களுடன் விளயாடி மகிழ்வோம், செயல் வழி கற்றல், இயற்கையில் கணிதத்தின் வடிவங்களை ஆராய்தல், கணிதத்தை ஒரு சாகசமாக மாற்ற இயற்கையோடு இயைந்த சூழலில், கணிதத்தை எளிமையாகவும் ஆர்வமாகவும் கற்கும் வகையில் இன்று 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் இயற்கை வேளாண் பண்னை இணைந்து கே.வி.குப்பம் ஒன்றியம், காளாம்பட்டு அறிவுத்தோட்டம் வளாகத்தில் கோடைகால குழந்தைகள் கணிதத் திருவிழா பயிற்சி முகாம் நடைபெறுகிறது.குழந்தைகள் கணித விழாவிற்கு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் முத்து சிலுப்பன் அறிவுத்தோட்டத்தின் நிறுவனர் கு.செந்தமிழ்செல்வன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். முன்னதாக மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன், வரவேற்று பேசுகிறார். நிகழ்வுகளை மாவட்ட பொருளாளர் ஆர்.காயத்ரி ஒருங்கிணைத்து பேசுகிறார்.மாவட்ட துணைத்தலைவர்கள் பேராசிரியர் டி.சசிகலா, சா.குமரன், வீரா.குமரன், இணை செயலாளர்கள் என்.கோட்டீஸ்வரி பி.சுகுமாறன் வி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசுகின்றனர்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.திருநாவுக்கரசு குழந்தைகள் கணிதத் திருவிழாவை தொடக்க வைத்து சிறப்புரையாற்றுகிறார். எழுத்தாளர் விழியன், மாநில செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர்.பே.அமுதா, அறிவியல் வெளியீடு ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.வேலூர் யுனியன் வங்கி கிளையின் முதமை மேலாளர் ராஜேஸ்கண்ணா, அறிவுத்தத்தின் இணை நிறுவனர் எஸ்.குணசுந்தரி, மேலாளர் எம்.சதீஷ், வேளாண் பயிற்சியாளர் மாலதி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர். விழா ஒருங்கிணைப்பாளர் பா.ராஜேந்திரன் நன்றி கூறுகிறார்.இரண்டு நாள் பயிற்சி முகாமில் அறிவுத்தோட்டம் சுற்றும் நடைப்பயணம், கண்களை மடி அமர்வு, குழுச் செயல்பாடுகள், அளவீடு குறித்த கலந்துரையாடல், கணிதப் பேச்சு, கணிதக்கதை தென்னை இலையில் கைவினை, டாங்கிராம் மந்திரம், புத்தக வெளியீடு, கணித பாடல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் காணொலி காட்சி வாயிலாக நேற்று நடைபெற்ற நிர்வாககுழு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டதாக மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.