காஞ்சிபுரம் மாவட்டத்தில்திறன் அடிப்படையில் பயிற்சியுடன் வேலைவாய்ப்பு :பழங்குடியின மக்களுக்குகலெக்டர் சினேகா அழைப்பு !காஞ்சிபுரம், ஜூன் 14 -தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ( தாட்கோ ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சியுடன் வேலைவாய்ப்பும் வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்கள் பயன் பெற வேண்டுமென கலெக்டர் சினேகா அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ( தாட்கோ ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தாட்கோ, மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு,கம்ப்யூட்டர், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள், பி.இ., மெக்கானிக்கல் பொறியியல், மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும், மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ, 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 90 நாட்கள் மட்டும் வழங்கப்படும்.மேலும் பெரம்பலூர், சேலம் மாவட்டங்களில் பயிற்சி நடைபெற உள்ளது. தகுதிபெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டங்களில் தங்கி படிப்பதாற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் வழங்கப்படும். அந்நிறுவனத்தின் மூலமாக ஆரம்ப கால மாத ஊதியமாக சுமார் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான ( www.tahdco.com ) என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்; ‘இவ்வாறு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.