ஒடுகத்தூரில் பெண் தூக்கு மாட்டி தற்கொலை!வேலூர், மே 19 -வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த தென்புதூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவரது மனைவி அம்பிகா (30). மணிகண்டன் பெங்களூருவில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இதனால் கணவன் ,மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அம்பிகா வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வேப்பங்குப்பம் போலீஸார் அம்பிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!வேலூர் ,மே 18-வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து மே மாத (வைகாசி) கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடைவிடாது ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இந்த நன்னாளில் முருக பக்தர்களுக்கு வேலூர் செங்குட்டை தொழிலதிபர் அச்சுதன் -அமுதா தம்பதியர் அன்னதானம் வழங்கினர். இந்த அன்னதானத்தில் கேசரி மற்றும் மதிய உணவு தயிர் சாதம், ஊறுகாய் வழங்கப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் வரிசையில் நின்று இந்த அன்னதானத்தை பெற்று உண்டு மகிழ்ந்து தங்களது பசியாற்றி கொண்டனர்.இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அச்சுதன் தனது திருக்கரங்களால் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக முருகன் திருவுருவப் படத்துக்கு மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. இதையடுத்து அன்னதானம் நடந்தது. இந்த அன்னதானத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அச்சுதன் -அமுதா தம்பதியருடன் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் விமரிசையாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் அச்சுதனுக்கு உதவியாக தெலுங்கானா நக்சலைட் தேடுதல் வேட்டை பிரிவு உதவி ஆய்வாளர் ரவி, தொழிலதிபர் நந்தகுமார், முன்னாள் அதிமுக கவுன்சிலர் காட்பாடி செங்கோட்டை குமார், அதிமுக பிரமுகர் சிவாஜி உள்ளிட்டோர் பேருதவி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலைஅ.ம.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் மா.கி.வரதராஜன்,அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் த.வெ.க.,வில் ஐக்கியம் !செய்யாறு, மே 17 -திருவண்ணாமலை அ.ம.மு.க.,வின் வடக்கு மாவட்ட செயலாளர் மா.கி.வரதராஜன், த.வெ.க.,வில் நேற்று இணைந்தார். இவருக்கு, த.வெ.க.,வின் ஒருங்கிணைப் பாளரும் – அமைச்சருமான செங்கோட்டையன் ‘கட்சி வேட்டியை’ வழங்கி தவெகவில் அன்புடன் வரவேற்று இணைத்துக் கொண்டார்.திருவண்ணாமலை அ.ம.மு.க.,வின் வடக்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தவர் மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த மா.கி.வரதராஜன் ( 68 ). இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் மேற்கண்ட பதவியை வகித்து வந்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் அனுபவம் உள்ள இவர், அ.தி.மு.க.,வில் பொறுப்பு வகித்த போது, கடந்த 2006ம் ஆண்டு செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெம்பாக்கம் ஒன்றியக் குழு துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். இதுதவிர, இவருக்கு அ.தி.மு.க.,வில் தொடர்ந்து 5 முறை ஒன்றிய செயலாளராக பதவியும் வழங்கப்பட்டது. இவரது மூத்த – இளைய மகன்களும் அரசியலில் இருந்து வருகின்றனர். மூத்த மகன் வசந்தராஜ் ( 37 ) முன்னாள் ஒன்றிய கவுன்சிலராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இளைய மகன் வினோத் பிசாத் ( 35 ). அ.ம.மு.க.வில் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். மொத்தத்தில் இவரது குடும்பமே அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்பொழுது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் மாற்றம் காரணமாகஅ.ம.மு.க.,வின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர்மா.கி.வரதராஜன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சென்னையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப் பாளரும், அமைச்சருமான செங்கோட்டையனை நேரில் சந்தித்து அவரது முன்னிலையில் த.வெ.க.,வில் தன்னை இணைத்து கொண்டார். இவருக்கு அமைச்சர் செங்கோட்டையன் ‘கட்சி வேட்டியை’ வழங்கி வரவேற்று தவெகவில் இணைத்துக் கொண்டார். மா.கி.வரதராஜனின் இரு மகன்களும் த.வெ.க.,வில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற குடியாத்தம் கங்கை அம்மன் சிரசு திருவிழாவில் அணைக்கட்டு அதிமுக எம்.எல்.ஏ., த.வேலழகன் சுவாமி தரிசனம்!வேலூர், மே 16-வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகாவில் நடைபெற்ற புகழ்பெற்ற குடியாத்தம் கங்கை அம்மன் சிரசு பெருவிழாவில், அதிமுக வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான த.வேலழகன் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, ஆலய நிர்வாகிகள் சார்பில்‌ எம்.எல்.ஏ., த.வேலழகனுக்கு பொன்னாடை போர்த்தி, மலர் மாலை அணிவித்து சிறப்பு கௌரவிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர கழக செயலாளர் ஜெ.கே.என். பழனி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும், மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி, மாவட்ட கழக பொருளாளர் காடை ஜி.பி.மூர்த்தி, பேரணாம்பட்டு நகர செயலாளர் எல்.சினிவாசன், குடியாத்தம் கைத்தறி காவலன் ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சிரசு திருவிழாவை சிறப்பித்தனர்.

வைகாசி அமாவாசைக்காக மேல்மலையனூருக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!வேலூர்,மே 16-வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. இதையொட்டி மே 16 முதல் வேலூர் பேருந்து நிலையத்திலிருந்து 25 பேருந்துகளும், திருப்பத்தூரில் இருந்து 15 பேருந்துகளும், ஆற்காட்டில் இருந்து 15 பேருந்துகளும் என மொத்தம் 55 சிறப்பு அரசு பேருந்துகளை மேல்மலையனூருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இயக்க ஏற்பாடு செய்துள்ளது. பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தால் கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயனடையுமாறு போக்குவரத்து கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.