ரயில் தண்டவாளம் அருகே உள்ள கால்வாயில் விழுந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர்: அவரை மீட்டு காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை!வேலூர், மே 31-வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேவூர் ரயில் நிலையத்திற்கும், திருவலம் ரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள Upline பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் அங்குள்ள கால்வாயில் பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் விழுந்து கிடந்தார்.இதனைப் பார்த்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேர்க்காடு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மயங்கிய நிலையிலேயே இருந்தார். இதனால் அவருடைய பெயர் மற்றும் விலாசம் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் விபத்து வழக்குப் பதிவு செய்து காயமடைந்த நபர் ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? மற்றும் அவர் யார்? , எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் சேர்க்காடு அரசு மருத்துவமனையில் இருந்து அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.