பேரணாம்பட்டு நகரமன்ற கூட்டத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்களை ஒருமையில் பேசும் நகராட்சி ஆணையாளர் மோகன் குமாரை கண்டித்து நகர மன்ற உறுப்பினர்கள் நகர மன்ற கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு!வேலூர், மே 30-வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகரமன்ற கூட்டம் பல மாதங்களாக நடத்தப்படவில்லை. தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு பிறகு முதல் முறையாக நகரமன்றக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நகர மன்ற கூடத்தில் நகர மன்றக் கூட்டம் நடைபெறாமல் நகர மன்ற தலைவரின் அவையில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் பி. பிரேமா வெற்றிவேல் தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத் தலைவர்.ஆலியார் ஜூபேர் அஹமத் முன்னிலை வகித்தார். நகராட்சியில் நகர மன்ற கூட்டத்தில் பெண் நகர மன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் நகர மன்ற கூட்டத்தில் பேசுவது தொடர்ந்து வாடிக்கையாக நடந்து வருகின்றது. இதை கண்டிக்க வேண்டிய நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றி வேல், நகர மன்றத் துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர் அஹமதும், நகராட்சி ஆணையாளர் மோகன்குமாரும் இதை கண்டு கொள்ளாமல் அமைதி காத்து வருகின்றனர். நகராட்சி பெண் கவுன்சிலர்களின் கணவர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றனர். மேலும் நகராட்சி ஆணையாளர் மோகன் குமார் நகராட்சியில் நடைபெறும் ஒரு சில குறைகளையும், கோரிக்கைகளையும், பொதுமக்கள் எடுத்துச் சொன்னால் அதை கண்டு கொள்ளவில்லை. தூய்மை பணியாளர்களை நீ வா போ என்று ஒருமையில் பேசுவதாகவும் புகார் கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்திலேயே இது போன்ற அடாவடிகளும் ,அராஜகங்களும் பேரணாம்பட்டு நகராட்சியில் மட்டுமே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய குழாய் இணைப்புகளை போடும் பொதுமக்களிடம் இருந்து குழாய் இணைப்புக்கான டெபாசிட் தொகையைப் பெற்றுக் கொண்டு அதற்கு ரசீது தராமல் குழாய் இணைப்புகளை நகராட்சி ஆணையாளர் மோகன்குமார் வழங்கி விடுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வேலூர் மாவட்ட நகராட்சிகளின் அதிகாரியிடம் வாய் மொழியான புகார்களை அளித்தும் (RDM0) ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இன்னமும் சொன்னால் பேரணாம்பட்டு நகராட்சியில் செய்யாத வேலைகளுக்கெல்லாம் ரசீது போட்டு பல லட்சங்களை மேற்கண்ட 3 பேரும் கூட்டு கொள்ளை அடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி தானே நேரடியாக வந்து ஆய்வு செய்து ஆராய்ந்து பார்த்தால் பல தில்லுமுல்லு வேலைகள் நடந்திருப்பது வெட்ட வெளிச்சமாக வெளியில் தெரியவரும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் பேரணாம்பட்டு நகராட்சியை திமுக அல்லாத வேறு ஏதாவது ஒரு கட்சி நிர்வாகம் செய்ய வந்தால் பேரணாம்பட்டு நகராட்சி சீரோடும் சிறப்போடும் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மேலும் பேரணாம்பட்டு நகராட்சியில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகளை கண்டித்து ஐந்தாவது வார்டு நகர மன்ற உறுப்பினர். வழக்கறிஞர் சி.அப்துல் ஹமீத் உள்ளிட்ட ஒரு சில நகர மன்ற உறுப்பினர்கள் நகர மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளியே சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில் ஒற்றை யானை அட்டகாசம்: பொதுமக்கள் பீதி!வேலூர், மே 30-காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியில் ஒற்றை யானை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக சுற்றி திரிந்து வருகிறது. இந்த யானை பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் பீதி அடைந்து காணப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வண்டறந்தாங்கல் முதல் தொண்டான்துளசி வரை இந்த ஒற்றை யானை அலைந்து திரிகிறது .இதனால் விவசாயம் செய்துள்ள விவசாயிகளின் பயிர்கள் சேதம் அடைந்து ஒன்றுக்கும் உதவாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சொல்லொனா துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தும் அவர்களும் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இந்த ஒற்றை யானையை விரட்டவும் முடியாமல் என்ன செய்வது என்றும் தெரியாமல் வனத்துறையினர் குழம்பிய நிலையில் காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பொதுமக்களோ தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள தினம் தினம் இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைத்து விட்டு உயிருக்கு அஞ்சி நடுங்கி பயந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்பது வெட்கக்கேடான விஷயமாகும். ஆதலால் பொதுமக்கள் நலன் கருதியும் விவசாயிகள் நலன் கருதியும் இந்த ஒற்றை யானையை அருகில் உள்ள ஆந்திர பிரதேச எல்லையில் விரட்டியடித்து பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வனத்துறை முன்வர வேண்டும் என்பது ஒட்டுமொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக மாறி உள்ளது. வனத்துறை பொதுமக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமா? அல்லது கைகட்டி வழக்கம்போல் வேடிக்கை பார்க்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

திமிரி அருகே வருவாய்த்துறை நிலத்தில் அனுமதியின்றி பாறை தகர்ப்பு வெடி – அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார்!ராணிப்பேட்டை, மே 29-ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுக்கா, திமிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட துர்கம் கிராமத்தில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான நெல்லிமலை காட்டுப் பகுதியில் எந்த அனுமதியும் இல்லாமல் சமூக விரோதிகள் பாறையை வெடி வைத்து தகர்த்து வருவதாக புகார் எழுந்துள்ளது.குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை கொண்டு அதிக அளவில் வெடி துளைகள் போடப்பட்டு பாறைகள் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த்துறை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் மற்றும் வனத்துறையினரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்கள் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை.”அதிகாரிகளுக்கு தெரியாமல் இந்த சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லை. அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” .இந்நிலையில், பத்துரூபாய் இயக்கத்தின் திமிரி ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலாவை கைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட ஆட்சியர், “நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்ததாக அவர் தெரிவித்தார்.மேலும், “அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், திமிரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பொதுமக்களை திரட்டி பத்துரூபாய் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்” எனவும் சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அனுமதியின்றி வெடி வைத்து பாறைகளை உடைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காணாமல் போன மாட்டை தேடிச் சென்ற முதியவரை சரமாரியாக தாக்கி கொலை செய்த பரிதாபம்: நாலு பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலை!வேலூர், மே 29-வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் அடுத்த பழைய வசூரைச் சேர்ந்தவர் ஜே. பாஸ்கரன் (49). இவர் மாடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் இவரது மாடு ஒன்று வழி தவறி காட்பாடி வட்டம், பிரம்மபுரம் அடுத்த சேவூர் அருகே சென்று விட்டது. இதை தேடிக்கொண்டு பாஸ்கரன் சென்றுள்ளார். அப்போது எதிரில் வந்த சேவூரைச் சேர்ந்த பட்டாபி என்பவரிடம் மாடு ஒன்று இந்த பக்கம் ஏதாவது வந்ததா? என்று பாஸ்கரன் கேட்டுள்ளார். மாடு பார்ப்பதா எனக்கு வேலை என்று பட்டாபி கூறியுள்ளார். இதையடுத்து பட்டாபிக்கும் பாஸ்கரனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆனது. இதில் இரு தரப்பிலும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்நிலையில் இந்த தாக்குதல் நடந்து கொண்டிருந்த வேளையில் பட்டாபியின் நண்பர்கள் ஆன மேலும் மூவர் அங்கு வந்து பட்டாபியுடன் சேர்ந்து கொண்டு பாஸ்கரனை கண்மூடித்தனமாகவும், கொடூரமாகவும் தாக்கியுள்ளனர். இதில் மயங்கி அதே இடத்தில் சரிந்த பாஸ்கரனை நான்கு பேரும் தூக்கிக்கொண்டு சென்று அருகில் இருந்த மாட்டுப்பட்டியில் வீசி விட்டுச் சென்று விட்டனர். இந்நிலையில் பட்டாபியின் தந்தை அந்த வழியாக வந்துள்ளார். அவர் மயங்கி கிடந்த பாஸ்கரனுக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பாஸ்கரன் கொண்டு சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கழுத்தில் இருந்த எலும்புகள் நொறுங்கியதால் இவர் உயிர் பிழைப்பது சிரமம் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரிடம் பாஸ்கரன் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அடிதடி வழக்குப் பதிவு செய்து விசாரணையை நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் .இந்நிலையில் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து பாஸ்கரனை கொடூரமாக தாக்கி கொலை செய்த பட்டாபி உள்ளிட்ட சேவூரைச் சேர்ந்த 4 பேரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலியான அரசு பணி நியமன ஆணை நகல் வழங்கிய இராமநாதபுரம் ஆசாமி கைது!வேலூர், மே 29-அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலியான அரசு வேலைக்கான பணி நியமன ஆணை நகல் வழங்கி சுமார் 44 நபர்களிடமிருந்து ரூ. 3,50,000/- வரை பணத்தைப் பெற்று மோசடி செய்து ஏமாற்றியதாக மஞ்சுளா என்பவர் மாவட்ட காவல் துறையில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 30.08.2025 அன்று வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த புகார் மனுவைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். யூ. சிவராமனின் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கோகிலா வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை வலைவீசி தேடி வந்தார். இந்நிலை இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெஸ்டின் (48) த/ பெ. அண்ணாதாசன் என்பவரை கைது செய்து வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிபதி உத்தரவின்படி ஜெஸ்டின் வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டார்.

செய்யாறில் ‘உலக பட்டினி’ தினத்தையொட்டி த.வெ.க., சார்பில் அன்னதானம் வழங்கல்!செய்யாறு, மே 29 -செய்யாறில் ‘உலக பட்டினி’ தினத்தை’யொட்டி த.வெ.க., பொறுப்பாளர் ஏற்பாட்டில் 3 இடங்களில், கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.நாடு முழுவதும் ‘உலக பட்டினி’ தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 28ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. வறுமையை சந்தித்தாலும், மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவருக்கும் மூன்று வேளை உணவு கிடைக்க வேண்டும். அந்த அளவுக்காவது நாடு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ‘உலக பட்டினி’ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.செய்யாறில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 3 இடங்களில் ‘உலக பட்டினி’ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமை வகித்து , பொதுமக்களுக்கு அன்தானம், மோர், பழ ரசங்களை வழங்கினார். செய்யாறு – ஆரணி கூட்டு சாலையில் நடந்த அன்னதான நிகழ்ச்சிக்கு செய்யாறு மத்திய ஒன்றிய செயலாளர் புவனேஸ்வரி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். பொறுப்பாளர்களான அண்ணாதுரை, சாந்தி, பரத்குமார், சதீஷ், நேரு, கௌரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.செய்யாறு பஸ் நிலையத்தில் நடந்த அன்னதான நிகழ்ச்சி செய்யாறு தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ் ஏற்பாட்டில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் அருண், இணைச் செயலாளர்கள் பார்த்திபன், சுரேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் ராகவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.செய்யாறு ஞானமுருகன் கோவில் அருகே நடந்த அன்னதான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனக்காவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.சேதுபதி செய்திருந்தார். இணைச் செயலாளர் சுதர்சன், பொருளாளர் புருஷோத்தமன், துணைச் செயலாளர் குணா உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கியவர்களை பொதுமக்கள் மனதார பாராட்டினர்.

தமிழக அரசு இன்னமும் 6 மாதத்தில் கலைந்து விடும்: பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ் ஆருடம்!வேலூர், மே 29-தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்க மாநில தலைவர் பாபு தலைமையில் நிர்வாகிகள்அனைவரும் கடந்த 26.05.2026 அன்று நிதித்துறை அமைச்சர் மரிய வில்சனை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.அப்பொழுது தற்போதைய பதிவுத்துறை தலைவரும், தலைமை தணிக்கை இயக்குநருமான அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ் குறித்து புகார் மனு ஒன்றை அமைச்சரிடம் அளித்தனர். அதில் கடந்த 18.05.2026 அன்று நிதி அமைச்சராக இருந்த செங்கோட்டையனிடம் பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ் குறித்து புகார்கள் தெரிவித்தனர். அதனால் ஆத்திரமடைந்த அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ் தமிழக அரசை சிறுமைப்படுத்தும் நோக்கில் இந்த ஆட்சி இன்னும் 6 மாதத்தில் கவிழ்ந்து விடும் என்று தெரிவித்துள்ளார். அமைச்சரை யார் யாரெல்லாம் சந்தித்து புகார் மனு அளித்தார்களோ அவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சவால் விட்டு பேசி வருவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் இம்மனுவில் தணிக்கை துறையில் cams மென்பொருள் மூலம் மேற்கொள்ளப்படும் தணிக்கையில் விடுப்புகள் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. 200 கிலோ மீட்டருக்கு மேல் தொலைவில் உள்ள தூரங்களில் பணி அமர்த்துவது, பணியமர்த்தப்பட்ட இடங்களில் பணி செய்ய விடாமல் தடுப்பது மற்றும் பெண் பணியாளர்களை ஒருமையில் திட்டுவது போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது முன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நிதி அமைச்சருக்கு தெரியாமல் தணிக்கை துறையை தனது பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில், உண்மை நிலவரங்களை மறைத்து மறு சீரமைப்பு பணிகள் முடியவில்லை என்ற போலி காரணத்தை காட்டி திரை மறைவு வேலைகள் மூலம் மீண்டும் தலைமை தணிக்கை இயக்குநர் கூடுதல் பொறுப்பை தொடர்வதற்கான ஆணையை அவர் தந்திரமாக பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவருக்கு எதிராக தலைமைச் செயலக நிதித்துறை பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியது, கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தியது போன்ற விவரங்களையும், தொடர்ந்து பணியாளர்கள் விரோதப் போக்கை கடைபிடிப்பது மற்றும் தற்போதைய தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக குறிப்பிட்டு தற்போது தலைமை தணிக்கை இயக்குநராக உள்ள அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ்ஸை தலைமை தணிக்கை துறை இயக்குநர் கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவித்து புதிய தலைமை தணிக்கை இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சர் இவர் மீது என்ன துறைஸ்வ வாரிய்ய நடவடிக்கையை எடுக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வாடிக்கையாளர்கள் பணத்தை சுருட்டிக்கொண்டு ஏமாற்றிய தபால் நிலைய கிளை போஸ்ட் மாஸ்டர் அதிரடி கைது!வேலூர், மே 29-காட்பாடி ஜாப்ராபேட்டை பகுதியில் உள்ள தபால் நிலைய கிளையில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்த சுடர் நிதி என்பவர் வாடிக்கையாளர்களின் பணம் ரூ. 9,32,309/- கையாடல் செய்து ஏமாற்றியதாக காசிநாதன் (தபால் நிலைய உதவியாளர்) என்பவர் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் 26.05.2026 அன்று வேலூர் மாவட்ட குற்றப் பிரிவில் பெறப்பட்ட புகார் மனுவை போலீசார் விசாரித்தனர். இதனையடுத்து தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கோகிலா வழக்குப் பதிவு செய்து லத்தேரி பகுதியைச் சேர்ந்த சுடர் நிதி க/பெ.சக்திவேல் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுடர் நிதியை காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் சுடர் நிதி வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய பெண்கள் சிறையில் காவலில் அடைக்கப்பட்டார்.