அனக்காவூர் கிழக்கு, மேற்கு ஒன்றியத்தில் எடப்பாடி பழனிசாமியின்72வது பிறந்தநாள் விழா!செய்யாறு, மே 13 -திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அனக்காவூர் கிழக்கு – மேற்கு ஒன்றியத்தின் சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் – செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் முக்கூர் சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி, ஞானமுருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகத்துடன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.கோவில் வளாகத்தில் 108 தேங்காய் உடைத்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அனக்காவூர் கிழக்கு – மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சி.துரை, பையூர் சிவராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது.இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க., நிர்வாகிகள், நகர செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் அரங்கநாதன், மாவட்ட பொருளாளர் ஆலத்தூர் சுப்புராயன், பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அருணகிரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

காட்பாடி வி டி கே நகர் ரயில்வே கேட் மூடல்: பராமரிப்பு பணிகள் தீவிரம்!வேலூர், மே 13-காட்பாடி வி டி கே நகர் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே சமதளக் கடப்பு (Level Crossing), பராமரிப்புப் பணிகள் காரணமாக 12ம் தேதி முழுவதும் மூடப்படுகிறது.ரயில்வே பணியாளர்கள் அந்தப் பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இரவு பணிகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கிட அனுமதிக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காட்பாடி அடுத்த பொன்னையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: கடை உரிமையாளர் அதிரடி கைது!வேலூர், மே 13-வேலூர் மாவட்டம், பொன்னை – சோளிங்கர் சாலையில் அமைந்துள்ள டி. ஆர்.குப்பம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக காட்பாடி டிஎஸ்பி விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், காட்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடங்களில் போலீசார் தீவிரமாக தேடியதில் குட்கா பொருட்கள் சிக்கின. சிக்கிய குட்கா பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1.50 லட்சம் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக குட்கா விற்பனையில் ஈடுபட்ட கடைக்கு சீல் வைத்து கடையின் உரிமையாளர் பாண்டுரங்கன் மீது பொன்னை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த தகவல் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காட்பாடியில் தமிழக வெற்றி கழகத்தோடு கைகோர்த்து காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!வேலூர், மே 12-தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.அந்த வகையில், வேலூர் மாவட்டம், காட்பாடியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் பிரம்மாண்ட வெற்றி விழா கொண்டாடப்பட்டது.காட்பாடி – சித்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்ட விழாவிற்கு ஒன்றிய தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய தலைவர் இளங்கோவன் முன்னிலை வகிதார். தமிழக வெற்றி கழகத்தின் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கால்நடை மருத்துவமனை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளிப்பு!வேலூர், மே 12-வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுக்கா, எர்த்தாங்கல் ஏரியான் பட்டி கிராமத்தைச் சுற்றி 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த கோரிக்கை மனுவில் பொதுமக்கள் கூறியிருப்பதாவது: அந்த கிராமத்தில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆடு, மாடு கோழி மற்றும் கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள். இந்த மக்கள் கூலித் தொழில், விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த பகுதி மக்களுக்கு கால்நடை மருத்துவமனை 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் எங்கள் பகுதிக்கு கால்நடை மருத்துவமனை கட்டாயம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமியிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மனு மீது விசாரணை செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளார்.

கே. வி. குப்பம் வட்டாட்சியர் மர்ம மரணம்: போலீசார் தீவிர புலன் விசாரணை!வேலூர், மே 12-வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் வட்டாட்சியராக கே. பலராமன் (40 )பணியாற்றி வந்தார். இவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.குடியாத்தம் வட்டம், எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன். இவர் வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தேர்தலின் போது கே. வி. குப்பம் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தேர்தலில் அவர் சிறப்பாக பணியாற்றினார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ( 9ஆம் தேதி) இரவு பலராமன் அவரது உடலில் பலத்த காயங்களுடன் வீட்டில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மர்ம மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பலராமனுக்கு மனைவி சுகன்யா, இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் வருவாய்த்துறையினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.