திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை குடியிருப்பு நண்பர்கள் 30-ஆண்டுகளுக்கு பின்னர் சந்திப்பு: நெகிழ்ச்சி கொண்டாட்டம்!திருப்பத்தூர்,ஜூலை7வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம், கேதாண்டப்பட்டியில் பழமை வாய்ந்த 50 ஆண்டுகளை நெருங்கும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை உள்ளது. இதில் அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்களுக்கு குடியிருப்புகள் உள்ளன. அந்த குடியிருப்பில் வசித்த அந்தக் கால பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக், பொறியியல் படித்த மாணவர்கள் தற்போது தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள், என பல்வேறு துறைகளில் அரசு பணிகளில் இருந்து வருகின்றனர்.இவர்களின் சந்திப்பு (நண்பர்கள் ஒன்று கூடல் விழா) நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை திருமண மண்டபத்தில் நடந்தது.இந்நிகழ்வுக்கு 89தில் வாணியம்பாடி முன்னாள் தினமலர் நிருபரும், தற்போதைய வேலூர் மாவட்ட மூத்த பத்திரிக்கையாளர் கே.எம். வாரியார் தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி மேலாளர் யோகசுந்தரம் வரவேற்றார். ஜான்சன்&ஜான்சன் பிரிவு ஒரகடம் மேலாளர் விஜயகுமார், தொழிலதிபர் வீரமணிகண்டன், மஸ்கட்டில் பொறியாளராக பணிபுரியும் லட்சுமிகாந்த், பொறியாளர் வெங்கடேஷ், தொழிலதிபர்கள் டி.கே.ரவி, கேபிள் லோகநாதன், வெள்ளியங்கிரி, திருப்பத்தூர் சர்க்கரை ஆலை பணியாளர்கள் சங்கர், வி.வி.செல்வராஜ, பார்த்தீபன்,, மற்றும் மகேந்திரன், ராஜேந்திரன், ஹரி, ரமேஷ், வெங்கட், கிரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கந்துவட்டி விடும் தமிழ்நாடு அரசு மின்வாரிய ஊழியர் :வீடு புகுந்து ஆட்டோ தொழிலாளிக்கு கொலை மிரட்டல்!வேலூர், ஜூலை 6-வேலூரை சேர்ந்தவர் அருள் பிரகாசம். இவர் தமிழ்நாடு அரசு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் உப தொழிலாக கந்துவட்டி விடும் தொழிலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு செல்வதை காட்டிலும் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து விட்டு அதை திரும்ப வசூல் செய்வதும், கொடுப்பதும்தான் இவரது 24 மணி நேர வேலையாக இருந்து வருகிறது. இவர் தொமுசவில் இருந்து கொண்டு திமுகவின் பெயரை தவறாக பயன்படுத்தி இவர் முறைகேடாக நடந்து வருவதாக பொதுமக்கள் தரப்பிலும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் கூறப்படுகிறது. இதே போன்று வேலூர் பிஷப் டேவிட் நகரைச் சேர்ந்த தேவசகாயம் என்பவருக்கு கந்துவட்டிக்கு ரூபாய் 5 ஆயிரத்தை கொடுத்துவிட்டு தற்போது ரூ.50 ஆயிரம் தரவேண்டும் என்று அடாவடியாக அவரிடம் பணம் கேட்பது, தொந்தரவு செய்து வருவதுடன் அவரது வீட்டிற்கு மது போதையில் சென்று நள்ளிரவு 12 மணி அளவில் தகராறு செய்வது, நான் கதவை இழுத்துப் பூட்டி விட்டு சென்று விடுவேன் என்று அவருக்கு கொலை மிரட்டல் விடுப்பது என்று சில விருப்பத்தகாத செயல்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார. அவர் மது போதையில் செல்லும்போது தனக்கு துணையாக மூன்றிலிருந்து நான்கு பேர் வரை அடியாட்களை தன்னுடன் அழைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அவர் மீது ஏற்கனவே வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை வட்டாரம் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள சிவராமன் கந்துவட்டி கொடுமையில் இருந்து ஆட்டோ தொழிலாளியை காப்பாற்ற கடும் நடவடிக்கையை விரைந்து எடுக்க உத்தரவிட வேண்டும் என்பதே தேவசகாயம் குடும்பத்தினரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. நள்ளிரவு நேரத்தில் முதியவர்கள் மற்றும் பெண்கள், இளம் பெண்கள் உள்ள வீட்டிற்கு வந்து அந்த வீட்டின் கதவைத் தட்டி இவ்வாறு ரகளையில் ஈடுபடுவதை தொடர்ந்து வழக்கமாக வைத்துள்ளார் இந்த அருள் பிரகாசம். அத்துடன் இல்லாமல் ஒரு படி மேலே சென்று மதுபோதையில் இருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். குறிப்பாக சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தேவசகாயம் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த கொடூர தாக்குதலுக்கு பின்புலமாக கிருஷ்ணமூர்த்தி செயல்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆட்டோ ஓட்டுநராக சித்தேரி மற்றும் பாகாயம் பகுதியில் வேலை செய்து வருகிறார். இவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் விட்டுவி ட்டது. இதற்கு அடிப்படை காரணம் என்றும் கூறப்படுகிறது .தட்டிகேட்டால் இப்படி அடியாட்களை ஏவி விட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு வழக்கின் பின்னணியில் பல்வேறு முன்விரோத செயல்கள் பின்புலமாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது .காவல்துறை இதுபோன்ற கந்துவட்டிக்காரர்களை கைது செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பகது வெட்கக்கேடான விஷயமாக உள்ளது பொதுமக்களுக்கு உதவ வேண்டியவர்கள் இது போன்ற கட்டப்பஞ்சாயத்தை செய்பவர் கந்துவட்டி விடுபவருக்கு நாசக்கரம் நீட்டுகிறது இது மிகவும் நாட்டில் ஆபத்தான நிலைக்கு கொண்டு போய்விடும் என்பதும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் நிம்மதியாக வாழ விடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. நகரில் ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக வேலூர் தெற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து அருள் பிரகாசத்தை கைது செய்து உரிய விசாரணை நடத்தி அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் இவர்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறி உள்ளது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமனின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆங்கிலேயர்களை அலறவிட்ட குடியாத்தத்தின் மறைக்கப்பட்ட மாவீரர் – தியாகி பாரத் ஆதிமூலம்!வேலூர், ஜூலை 6-இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பேசும்போது மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர், ராஜாஜி, திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் போன்ற தலைவர்களின் பெயர்கள் முதலில் நினைவுக்கு வருகின்றன. ஆனால், தங்கள் ஊரிலேயே அமைதியாக வாழ்ந்து, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்து போராடிய எண்ணற்ற தியாகிகளின் வரலாறு இன்னும் முழுமையாக வெளிச்சத்துக்கு வரவில்லை. அத்தகைய மறைக்கப்பட்ட வீரர்களில் ஒருவர் குடியாத்தத்தைச் சேர்ந்த தியாகி பாரத் எம்.ஆதிமூலம்.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் 1913-ஆம் ஆண்டு பிறந்த ஆதிமூலம், சிறு வயதிலேயே விடுதலை உணர்வால் ஈர்க்கப்பட்டார். தனது குடும்பம் நடத்திவந்த சாராய வியாபாரத்தை ஏற்க மறுத்த அவர், ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். சித்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞர்களை ஒருங்கிணைத்து, கள்ளுக்கடை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.ஆங்கிலேய அரசின் தகவல் தொடர்பை சீர்குலைக்கும் வகையில், தபால் மற்றும் தந்தி அலுவலகங்களின் தொலைபேசி கம்பிகளை இரவு நேரங்களில் துண்டித்த துணிச்சலான செயல்களிலும் அவர் பங்கேற்றார். இதனால் ஆங்கிலேய காவல்துறை அவரைத் தேடி பலமுறை வீட்டுக்கு வந்தபோதும், சாதுரியமாக தப்பித்து போராட்டத்தைத் தொடர்ந்தார்.பின்னர் பெங்களூருக்குச் சென்ற ஆதிமூலம், அங்கும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ஆங்கிலேய குதிரைப்படையினரை திணறடிக்கும் வகையில் சிறுதானியங்களை வீசி அவர்களின் நகர்வைத் தடுத்த சம்பவங்கள் அவரது துணிச்சலை வெளிப்படுத்துகின்றன. 1942-ஆம் ஆண்டு “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் பங்கேற்றதற்காக 16 மாதங்கள் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது பின்னாளில் கர்நாடக முதல்வராகவும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்த நிஜலிங்கப்பாவுடன் சிறை வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டார்.பேட்மின்டன் போட்டியில் ஒரு ஆங்கிலேய அதிகாரியை வென்ற சம்பவமும் அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. பின்னர் அந்த அதிகாரி உயர்பதவிக்கு வந்ததும், ஆதிமூலத்தை கர்நாடக மாநிலத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்ற உத்தரவிட்டதாக குடும்பத்தினர் நினைவுகூர்கின்றனர். இதனால் அவரது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.குடியாத்தத்தில் குடியேறிய பிறகும் அவர் ஓய்வெடுக்கவில்லை. சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டார். 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது குடியாத்தம் தென் இந்தியன் சில்க்ஸ் மில்ஸில் தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணியிலும் முக்கிய பங்காற்றினார்.சுதந்திரத்திற்குப் பிறகு அரசியலை அதிகாரத்திற்கான கருவியாக அல்ல, மக்களுக்கான சேவையாகவே ஆதிமூலம் கருதினார். பெருந்தலைவர் காமராஜரின் குடியாத்தம் இடைத்தேர்தல் வெற்றிக்காக உழைத்ததோடு, கல்வி, சமூகப்பணி, விவசாயம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார்.’பாரத் மெக்கானிக்கல் ஒர்க்ஸ்’ என்ற நிறுவனத்தை உருவாக்கி, கரும்பு ஆலை இயந்திரங்கள், விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களை உற்பத்தி செய்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு துணையாக இருந்தார். தொழிலாளர்களின் நலனிலும் அக்கறை கொண்டு, தொழிற்சங்கம் அமைப்பதற்கே அனுமதி அளித்த அவரது ஜனநாயக மனப்பான்மை அக்காலத்திலேயே முன்னோடியான சிந்தனையாக இருந்தது.பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்துதல், இலவச தொலைபேசி பயன்பாடு, அன்னதானம், மாணவர்களிடம் தேசப்பற்றை வளர்த்தல், கோயில் திருப்பணிகள், கல்வி நிறுவனங்களில் தேசியக் கொடியேற்றுதல் என மக்கள் சேவையை வாழ்வின் இறுதி வரை தொடர்ந்தார்.1991-ஆம் ஆண்டு அவர் மறைந்தபோதும், ஆயிரக்கணக்கான மக்கள் தன்னார்வமாக திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தியது, அவர் மக்களின் மனதில் பெற்றிருந்த இடத்தை எடுத்துக்காட்டுகிறது.இன்று சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய வரலாறு பேசப்படும் நிலையில், உள்ளூர் அளவில் போராடி, சிறை சென்றும், சொத்துகளை இழந்தும், தன்னலமின்றி வாழ்ந்த ஆதிமூலம் போன்ற வீரர்களின் வரலாறு புதிய தலைமுறைக்கு சென்றடைவது காலத்தின் தேவை.இந்த நோக்கத்திலேயே அவரது பேரனும் சமூக ஆர்வலருமான தி.நந்தகுமார், பல ஆண்டுகள் தகவல்களைத் திரட்டி “ஆங்கிலேயர்களை அலறவிட்ட தியாகி பாரத் ஆதிமூலம்” என்ற நூலை எழுதியுள்ளார். குடும்ப ஆவணங்கள், வரலாற்றுத் தகவல்கள், மூத்தோரின் நினைவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூல், ஒரு குடும்ப வரலாறு மட்டுமல்ல; மறக்கப்பட்ட ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் தியாகத்தை மீண்டும் சமூக நினைவில் பதியச் செய்யும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது.மறக்கப்பட்ட தியாகிகளை நினைவுகூர்வதும், அவர்களின் சேவையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும் நமது கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றும் முயற்சியாகவே இந்த நூல் அமைந்துள்ளது.

டெல்லியில் இருந்து பறந்து வேலூர் வந்த புறாவுக்கு பரிசு!வேலூர், ஜூலை 6-டெல்லியில் இருந்து பறந்து வேலூர் வந்த புறாவுக்கு பரிசளித்ததை பார்த்து மகிழ்ந்த புறா வளர்ப்பாளர்கள்.ஓமர் புறா ரேசில் திருச்சி மற்றும் டெல்லியில் இருந்து திறக்கப்பட்ட வேலூர் புறா பரிசு பெற்றது. வேலூர் மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் தண்டா என்கின்ற தண்டபாணி மற்றும் சீனிவாசன் ஆகியோர் புறாக்கள் வளர்க்கும் உரிமையாளர் முருகானந்தம் மற்றும் பாஸ்கரன் ஆகியோருக்கு கோப்பையை வழங்கி பாராட்டினர். இந்த நிகழ்வின் போது விழா நடத்துனர்களான செந்தில், விக்கி, விஜய், அர்ஜூன், காதர், தாது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குடியாத்தம் பிரம்மாஸ் வித்யாலயா பள்ளியிலிருந்து வெளியில் வந்து சாலையில் பைக்கில் சென்ற மாணவர் மீது கைப்பந்து விழுந்து படுகாயம்!வேலூர்,ஜூலை 5-வேலூர் மாவட்டம், குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை மல்லப்பன் நகரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் கஜேந்திரன். இவர் பிளஸ் டூ தேர்வு எழுத கடந்த 3ம் தேதி வேலூர் நகருக்கு சென்று விட்டு தேர்வு முடிந்ததும் மீண்டும் மோட்டார் பைக்கில் வீட்டுக்கு குடியாத்தம் நோக்கி திரும்பி கொண்டு இருந்தார். அப்போது பிற்பகல் சுமார் 2.30 மணி அளவில் குடியாத்தம் ரயில் நிலையம் மேம்பால இறக்கத்தில் வரும்போது எதிரில் உள்ள பிரம்மாஸ் வித்யாலயா பள்ளியில் இருந்து வெளியே வந்து கைப்பந்து ஒன்று விழுந்தது. அது கஜேந்திரன் வந்த மோட்டார் சைக்கிள் மீது சக்கரத்தில் விழுந்து சிக்கியது. இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கஜேந்திரனின் தந்தை முருகையன் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று தனது மகனை சேர்த்துள்ளார். இந்த குடியாத்தம் பிரம்மாஸ் வித்யாலயா பள்ளிக்கு என விளையாட்டு மைதானம் இல்லை என்று கூறப்படுகிறது. இதில் மாணவ, மாணவிகள் விளையாடினால் இப்படி கைப்பந்து மற்றும் கால்பந்து பள்ளியில் இருந்து வெளியில் வந்து சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் மீது விழுந்து விபத்துக்களை தொடர்ந்து ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒரு நிரந்தர நடவடிக்கையை கல்வித்துறை மற்றும் காவல்துறை மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் உரிய விசாரணை நடத்தி பொதுமக்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் நிகழாத வண்ணம் வழிவகை செய்து தர வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.விலை மதிப்பில்லாத மனித உயிர்களை இந்த பிரம்மாஸ் வித்யாலயா பள்ளி காவு வாங்குவதற்குள் ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் ,வாகன ஓட்டிகளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இது பொதுமக்களின் நலன் கருதி மட்டுமே இந்த செய்தி வெளியிடப்படுகிறதே தவிர எந்த காழ்ப்புணர்ச்சியும், எவ்வித முகாந்திரமும் இல்லாமல் இந்த செய்தி வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளிக்கென தனியாக விளையாட்டு மைதானத்தை ஏற்படுத்தி ஒதுக்குப்புறமாக வைத்து விளையாட வழிவகை செய்ய வேண்டும் என்று ஒற்றை கோரிக்கையை குடியாத்தம் பகுதி மக்கள் விடுத்துள்ளனர் .தற்போது இந்த விபத்து குறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் ஆய்வாளரிடம் முருகன் தனது மகன் விபத்தில் சிக்கியது எப்படி என்று புகார் மனுவை முறைப்படி கொடுத்துள்ளார். இந்த புகார் மனுவின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குடியாத்தம் நகர காவல் துறை உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமா? அல்லது இந்த புகார் மனுவை உதாசீனப்படுத்தி கண்டும் காணாமல் விட்டுவிடுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பள்ளிக்காக பொதுமக்கள் இல்லை, பொதுமக்களுக்காகத்தான் பள்ளி என்பதையும் இந்த பிரம்மாஸ் வித்யாலயா பள்ளி நிர்வாகம் உணர வேண்டும் என்பது இதன் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.