ஆங்கிலேயர்களை அலறவிட்ட குடியாத்தத்தின் மறைக்கப்பட்ட மாவீரர் – தியாகி பாரத் ஆதிமூலம்!வேலூர், ஜூலை 6-இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றைப் பேசும்போது மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர், ராஜாஜி, திருப்பூர் குமரன், வாஞ்சிநாதன் போன்ற தலைவர்களின் பெயர்கள் முதலில் நினைவுக்கு வருகின்றன. ஆனால், தங்கள் ஊரிலேயே அமைதியாக வாழ்ந்து, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்து போராடிய எண்ணற்ற தியாகிகளின் வரலாறு இன்னும் முழுமையாக வெளிச்சத்துக்கு வரவில்லை. அத்தகைய மறைக்கப்பட்ட வீரர்களில் ஒருவர் குடியாத்தத்தைச் சேர்ந்த தியாகி பாரத் எம்.ஆதிமூலம்.ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் 1913-ஆம் ஆண்டு பிறந்த ஆதிமூலம், சிறு வயதிலேயே விடுதலை உணர்வால் ஈர்க்கப்பட்டார். தனது குடும்பம் நடத்திவந்த சாராய வியாபாரத்தை ஏற்க மறுத்த அவர், ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். சித்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளைஞர்களை ஒருங்கிணைத்து, கள்ளுக்கடை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.ஆங்கிலேய அரசின் தகவல் தொடர்பை சீர்குலைக்கும் வகையில், தபால் மற்றும் தந்தி அலுவலகங்களின் தொலைபேசி கம்பிகளை இரவு நேரங்களில் துண்டித்த துணிச்சலான செயல்களிலும் அவர் பங்கேற்றார். இதனால் ஆங்கிலேய காவல்துறை அவரைத் தேடி பலமுறை வீட்டுக்கு வந்தபோதும், சாதுரியமாக தப்பித்து போராட்டத்தைத் தொடர்ந்தார்.பின்னர் பெங்களூருக்குச் சென்ற ஆதிமூலம், அங்கும் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ஆங்கிலேய குதிரைப்படையினரை திணறடிக்கும் வகையில் சிறுதானியங்களை வீசி அவர்களின் நகர்வைத் தடுத்த சம்பவங்கள் அவரது துணிச்சலை வெளிப்படுத்துகின்றன. 1942-ஆம் ஆண்டு “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் பங்கேற்றதற்காக 16 மாதங்கள் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது பின்னாளில் கர்நாடக முதல்வராகவும், அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்த நிஜலிங்கப்பாவுடன் சிறை வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்டார்.பேட்மின்டன் போட்டியில் ஒரு ஆங்கிலேய அதிகாரியை வென்ற சம்பவமும் அவரது வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக அமைந்தது. பின்னர் அந்த அதிகாரி உயர்பதவிக்கு வந்ததும், ஆதிமூலத்தை கர்நாடக மாநிலத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்ற உத்தரவிட்டதாக குடும்பத்தினர் நினைவுகூர்கின்றனர். இதனால் அவரது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.குடியாத்தத்தில் குடியேறிய பிறகும் அவர் ஓய்வெடுக்கவில்லை. சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டார். 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபோது குடியாத்தம் தென் இந்தியன் சில்க்ஸ் மில்ஸில் தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணியிலும் முக்கிய பங்காற்றினார்.சுதந்திரத்திற்குப் பிறகு அரசியலை அதிகாரத்திற்கான கருவியாக அல்ல, மக்களுக்கான சேவையாகவே ஆதிமூலம் கருதினார். பெருந்தலைவர் காமராஜரின் குடியாத்தம் இடைத்தேர்தல் வெற்றிக்காக உழைத்ததோடு, கல்வி, சமூகப்பணி, விவசாயம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தனது வாழ்நாளை அர்ப்பணித்தார்.’பாரத் மெக்கானிக்கல் ஒர்க்ஸ்’ என்ற நிறுவனத்தை உருவாக்கி, கரும்பு ஆலை இயந்திரங்கள், விவசாய உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்களை உற்பத்தி செய்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு துணையாக இருந்தார். தொழிலாளர்களின் நலனிலும் அக்கறை கொண்டு, தொழிற்சங்கம் அமைப்பதற்கே அனுமதி அளித்த அவரது ஜனநாயக மனப்பான்மை அக்காலத்திலேயே முன்னோடியான சிந்தனையாக இருந்தது.பொதுமக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்துதல், இலவச தொலைபேசி பயன்பாடு, அன்னதானம், மாணவர்களிடம் தேசப்பற்றை வளர்த்தல், கோயில் திருப்பணிகள், கல்வி நிறுவனங்களில் தேசியக் கொடியேற்றுதல் என மக்கள் சேவையை வாழ்வின் இறுதி வரை தொடர்ந்தார்.1991-ஆம் ஆண்டு அவர் மறைந்தபோதும், ஆயிரக்கணக்கான மக்கள் தன்னார்வமாக திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தியது, அவர் மக்களின் மனதில் பெற்றிருந்த இடத்தை எடுத்துக்காட்டுகிறது.இன்று சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய வரலாறு பேசப்படும் நிலையில், உள்ளூர் அளவில் போராடி, சிறை சென்றும், சொத்துகளை இழந்தும், தன்னலமின்றி வாழ்ந்த ஆதிமூலம் போன்ற வீரர்களின் வரலாறு புதிய தலைமுறைக்கு சென்றடைவது காலத்தின் தேவை.இந்த நோக்கத்திலேயே அவரது பேரனும் சமூக ஆர்வலருமான தி.நந்தகுமார், பல ஆண்டுகள் தகவல்களைத் திரட்டி “ஆங்கிலேயர்களை அலறவிட்ட தியாகி பாரத் ஆதிமூலம்” என்ற நூலை எழுதியுள்ளார். குடும்ப ஆவணங்கள், வரலாற்றுத் தகவல்கள், மூத்தோரின் நினைவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூல், ஒரு குடும்ப வரலாறு மட்டுமல்ல; மறக்கப்பட்ட ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் தியாகத்தை மீண்டும் சமூக நினைவில் பதியச் செய்யும் வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது.மறக்கப்பட்ட தியாகிகளை நினைவுகூர்வதும், அவர்களின் சேவையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும் நமது கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றும் முயற்சியாகவே இந்த நூல் அமைந்துள்ளது.