அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் அச்சம்; மது அருந்தும் கூட்டத்தால் பாதுகாப்பு கேள்விக்குறி – போலீசார் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!ராணிப்பேட்டை, ஜூன் 30-ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனிப்பேட்டை 3வது கண் பாதை பகுதியில், 10க்கும் மேற்பட்டோர் சாலையோரம் அமர்ந்து மது அருந்தி வருவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனால் பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் இரவு நேர பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.அரக்கோணம் காவல்துறை முறையாக வாகன ரோந்து மேற்கொள்ளவில்லை எனவும், இதன் காரணமாகவே இதுபோன்ற சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும், பலமுறை காவல் நிலையத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து போலீசார் முறையான ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும், குறிப்பிட்ட நேரங்களில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை அரசு பொருட்காட்சியில் கீதம் இசை நிகழ்ச்சி கோவை வ உ சி மைதானத்தில் கடந்த சில வாரங்களாக தமிழக அரசின் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது அதில் தினம் தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன நேற்று சனிக்கிழமை கோவை நா லோகுவின் கீதம் இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பாடகர்கள் லோகு தாமரைச்செல்வி பிரகாஷ் கீதா கங்காதரன் விநாயகம் ராமலிங்கம் பன்னீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு பழைய புதிய பாடல்களை பாடி அசத்தினர் இந்த நிகழ்ச்சியை பொருட்காட்சி வந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர் நிகழ்ச்சிகளை தாமரைச்செல்வி தொகுத்து வழங்கினார்

கஞ்சா விற்பனை செய்த மதுரை இளைஞர் கைது!வேலூர், ஜூன் 29-வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் ரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள மறைவான இடத்தில் கஞ்சாவை இளைஞர் ஒருவர் விற்பனை செய்வதாக குடியாத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குடியாத்தம் போலீசார் அந்த ரயில்வே மேம்பாலம் அருகில் விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கண்டுபிடித்தனர். பின்னர் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர் மதுரை சின்னப்பாண்டி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் சின்னபாண்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம்!வேலூர்,ஜூன் 29-வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் நேற்று (28.06.2026) முன்னாள் மாணவர் சங்கக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி கணிதவியல் துறைத் தலைவர் முனைவர் செ. கருணாநிதி தலைமை தாங்கினார். இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் ஆ. தாமரை வரவேற்றார்.முன்னாள் மாணவர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் முனைவர் ந. கெஜலட்சுமி, முனைவர் மு. மலர்விழி, தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் கல்பனா மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் பா. சம்பத்குமார், முனைவர் என். குமரகுரு, முனைவர் சரஸ்வதி, முனைவர் கலைவாணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.1964 முதல் 2025 வரை கல்லூரியில் பயின்ற 150-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரியின் உள்கட்டமைப்பு மேம்பாடு, கல்வித் தர உயர்வு, தற்போதைய மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர். கல்லூரியின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து உறுதுணையாக இருப்பதாக முன்னாள் மாணவர்கள் உறுதியளித்தனர்.மேலும், முன்னாள் மாணவர்களான எஸ்.எஸ். ரமேஷ்குமார், பாலாறு மருத்துவமனை மோகன், கருணாநிதி, ஆசிரியர்கள் பரசுராமன், பிரகாசம், முத்துக்குமார், சிவபிரகாசம், சமூக ஊடகங்களில் கல்வி- வேலைவாய்ப்பு விழிப்புணர்வாளர் மற்றும் செய்தி துறை மூத்த பத்திரிக்கையாளர், பண்பாளர் பாரத் நந்தகுமார் மற்றும் வணிகவரித் துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கல்லூரியில் பயின்ற மலரும் நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த கல்லூரி நிர்வாகத்திற்கும், நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த பேராசிரியர்களுக்கும் முன்னாள் மாணவர்கள் நன்றியைத் தெரிவித்தனர்.

சாலையில் நடந்து சென்றவர் ஆட்டோ மோதி பரிதாப பலி! வேலூர் , ஜூன் 28-வேலூர் மாவட்டம் ,குடியாத்தம் சிறு வங்கியைச் சேர்ந்தவர் லிவிகுமார் (62) .கூலித் தொழிலாளி. இவர் வீட்டில் இருந்து மேல்பட்டி ரோட்டில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வேகமாக வந்த ஆட்டோ நிலைதடுமாறி அவர் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இதை யடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் மாவட்ட ஆட்சியர் வாகனத்தை சிறை பிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்!வேலூர், ஜூன் 27-வேலூர் மாவட்ட ஆட்சியர் வாகனத்தை வேலூர் வடக்கு காவல் நிலையத்தின் முன்பாக சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் புதிய மீன் மார்க்கெட் அருகில் மூன்று நாட்களுக்கு முன்பாக சைதாப்பேட்டையில் உள்ள முஸ்லிம் வாலிபர்களுக்கும், கன்சால்பேட்டையில் உள்ள முஸ்லிம் வாலிபருக்கும் இரவு சுமார் 10 மணிக்கு முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரும் சரமாரியாக கத்தியால் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் காவல் துறையினர் ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்ததாகவும், இன்னொரு தரப்பினருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு முன்பாக கன்சால்பேட்டையைச் சேர்ந்த முஸ்லிம் வாலிபர்களும், பெண்களும் சேர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் நடந்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் வாகனத்தை சிறைபிடித்து ஒரு தலைப்பட்சமாக காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று முஸ்லிம் பெண்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரை பார்த்து முறையிட்டு கூச்சலிட்டனர்.அதற்கு மாவட்ட ஆட்சியர் சட்டப்படி சரியான நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.பிறகு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் திடீர் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கலந்து சென்றனர்.