வேட்டைக்கு சென்ற இருவர் கைது: இரண்டு நாட்டு துப்பாக்கிகள், 26 தோட்டாக்கள் பறிமுதல்வேலூர், ஜூன் 8-வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே வனவிலங்குகளை சிலர் வேட்டையாடுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் மேல்பட்டி காவல் துறையினர் குடியாத்தம் அருகே உள்ள வனப் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க இருவர் நாட்டுத் துப்பாக்கிகளுடன் திரிந்து கொண்டிருந்தனர். இவர்களை பின்தொடர்ந்து சென்ற காவல் துறையினர் அவர்களை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அவர்கள் வன விலங்குகளை வேட்டையாடச் சென்றது உறுதி யானது. இதை தொடர்ந்து காவல் துறையினர் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அத்துடன் அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட கொண்டு வந்த இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் 26 தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மேல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழங்குடியின மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கிய சமூக சேவகர்!வேலூர், ஜூன் 8-வேலூர் மாவட்டம், குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட காளியம்மன்பட்டி சாமியார் மலையில் உள்ள அன்னை சோனியா காந்தி நகரில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களைச் சார்ந்த 35 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.காளியம்மன்பட்டி இளைஞர்கள் சார்பில் ஆண்டுதோறும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.இதன்படி, காளியம்மன்பட்டி அன்னை சோனியா காந்தி நகரில் வசிக்கும் பழங்குடியின குடும்பங்களைச் சேர்ந்த 35 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா 7.6.2026 அன்று நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை சமூக ஊடகங்களில் கல்வி, வேலைவாய்ப்பு விழிப்புணர்வு தகவல்களை அளித்து வரும் சமூக சேவகர் தி. நந்தகுமார் வழங்கி வாழ்த்தி பேசினார்.

செதுக்கரை மலை உச்சியில் உள்ள ஆகாய லிங்கேஸ்வரர் சிவலிங்கம் சமூக விரோதிகளால் உடைப்பு!வேலூர், ஜூன் 8-வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள செதுக்கரை மலை உச்சியில் ஆகாய லிங்கேஸ்வரர் சமேதரராக அமையப் பெற்றுள்ளது. நூற்றாண்டுகளாக பலர் இந்த மலை உச்சியில் உள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வருகின்றனர். இந்த மலையில்9 சித்தர்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இந்த மலை மீது உள்ள ஆகாய லிங்கேஸ்வரர் மற்றும் நந்திகேஸ்வரர் ஆகிய சிலைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூகவிரோதிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை அறிந்த இந்து முன்னணியினரும், செதுக்கரை மலையைச் சுற்றியுள்ள சிவ பக்தர்களும் ; இந்துக்களும் ஒன்றிணைந்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.இதில் மாவட்ட ,நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குடியாத்தம் பிரம்மாஸ் சிபிஎஸ்சி பள்ளியில் கல்வித்துறை ஆய்வு நடத்த வேண்டும் :மாவட்ட ஆட்சியருக்கு அகில பாரத மக்கள் சக்தி இயக்கம் புகார் மனு அளிப்பு!வேலூர், ஜூன் 7-வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆர். எஸ். ரோடு அருகில் பிரம்மாஸ் சிபிஎஸ்இ பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 850 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தாளாளர் ஆர். பி. செந்தில். இவர் ஒரு அரசியல் பிரமுகராக உள்ளார். இப்பள்ளியின் பின்புறத்தில் தீப்பெட்டி சம்பந்தமான மிகப்பெரிய தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் வேலை மற்றும் உற்பத்தி செய்து வருபவர்களை பிரம்மாஸ் பள்ளியில் இருக்கும் லைவ் கேமராவில் பார்த்து தொழிற்சாலையில் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களையும் கண்காணித்து வருகிறார் செந்தில். ஒரு பள்ளியை நிர்வகிக்கும் பள்ளி நிர்வாகம் பள்ளி மாணவர்களை மட்டும் கண்காணிக்க வேண்டும். ஆனால் இந்த பள்ளி நிர்வாகம் சட்டத்திற்கு புறம்பாக பள்ளியின் பின்புறத்தில் உள்ள தீப்பெட்டி தொடர்பான தொழிற்சாலையை நடத்தி வருகிறார் கேமரா மூலம் கண்காணிப்பு செய்து வருகிறார்.மேலும் இந்த பள்ளியின் கிளைப் பள்ளிகள் குடியாத்தம் பகுதியில் மட்டும் தரணம்பேட்டை, கூட நகரம் மற்றும் பல்வேறு இடங்களில் குறைந்தது ஐந்து கிளை பள்ளிகள் வைத்து பிரம்மாஸ் பேரிலேயே இயங்கி வருகிறது. மேலும் ஒரு சிபிஎஸ்சி பள்ளி என்று இருந்தால் கிளை எதுவும் இருக்கக் கூடாது என விதி உள்ளது. ஆனால் இந்தப் பள்ளியில் பிரம்மாஸ் என்ற பெயரில் குடியாத்தம் பகுதியிலேயே பல்வேறு கிராமங்களில் பிரம்மாஸ் கிளை பள்ளிகள் உள்ளன. இவர் அரசியல் பிரமுகர் என்பதால் முன்னர் இருந்த திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பள்ளியின் நிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்து வந்தது. மேலும் இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் யாராவது இது தொடர்பான சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மனு அனுப்பினால் மனு அனுப்பியுள்ள சமூக ஆர்வலர்களை இவர் மிரட்டுவது மற்றும் அவர்களை பயமுறுத்தும் வகையில் காவல்துறையில் இருக்கும் சில உயர் அதிகாரிகளை வைத்து மிரட்டுவது மற்றும் பள்ளியின் நிர்வாகம் ஒரு அரசியல் பிரமுகர் என்பதால் அவரிடம் இருக்கும் அடியாட்களை வைத்து மிரட்டுவதும், துன்புறுத்துவதும் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களையும் செய்து வருவதை இவர் தொடர்கதையாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த பள்ளிக்கு கல்வி துறையில் உள்ள ஒரு குழுவினை அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெட்ட வெளிச்சத்துக்கு வரும். மேலும் இந்த பள்ளியின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகளையும், மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணம் அரசு நிர்ணயத்துள்ள கல்வி கட்டணத்திற்கு மேல் கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது என்பது ஒரு கூடுதல் அதிர்ச்சி தகவலாகும். எனவே இப்பள்ளியின் வெளிப்புறத்தில் உள்ள அரசு நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டணத் தொகையை தகவல் பலகையில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது அரசு விடுத்துள்ள உத்தரவு ஆகும். ஆனால் இப்பள்ளியில் தகவல் பலகையில் இதுநாள் வரையில் எவ்விதமான தகவலும் எழுதுவதில்லை, எழுதப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தாங்கள் நேர்மையான அதிகாரிகளை அனுப்பி இந்த பள்ளியில் ஆய்வு செய்தால் இங்கே என்னென்ன குறைகள் மற்றும் ஊழல்கள் நடைபெறுகிறது என்பது தெரியவரும். எனவே இந்த மனுவின் உண்மை நிலையை கண்டுபிடித்து பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு எந்தவித இடர்பாடும் இல்லாமல் இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்துக் கொடுக்குமாறு அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என இந்த அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ம.சி.கார்த்திக் ஜி ,வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ்க்கு புகார் மனுவை அனுப்பியுள்ளார். இந்த புகார் மனுவின் மீது மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது . மாவட்ட நிர்வாகம் என்ன செய்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கணியம்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலி!வேலூர், ஜூன் 7-திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவாஜி(38). இவர் இருசக்கர வாகனத்தில் வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கணியம்பாடி அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சிவாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கணியம்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு இறந்து கிடந்த சிவாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கணியம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாஜி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் ‘பார் கவுன்சில்’ தேர்தல்: போட்டியின்றி தலைவர் – துணைத் தலைவர் தேர்வு !காஞ்சிபுரம், ஜூன் 7 -காஞ்சிபுரம் ‘பார் கவுன்சிலர்’ தேர்தலில் தலைவர் – துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகில் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ‘பார் அசோசியஷன் சங்கம்’ உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ‘பார் கவுன்சிலில் தேர்தல் நடத்தப்பட்டு, தலைவர் – துணைத் தலைவர் – செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். வெற்றி பெற்றவர்கள் பொறுப்பாளர்களாக அறிவிப்பார்கள். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்றைய தினத்தன்று ‘பார் கவுன்சில் ஆஃப் இந்தியா’ தேர்தல் நடத்த காஞ்சிபுரம் ‘பார் கவுன்சிலுக்கு தடை விதித்தது.இந்த தடையை எதிர்த்து வழக்கறிஞர் கார்த்திக் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ‘பார் கவுன்சில்’ தேர்தல் நடத்த அனுமதி வழங்குமாறு வாதாடினார். உயர்நீதிமன்ற அமர்வு இரண்டு நீதிபதிகள் மனுவை விசாரித்து தேர்தல் நடத்தி தலைவர் – துணைத் தலைவர் – செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்து அறிவிப்பு செய்ய வேண்டும் என, ஆணை பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து காஞ்சிபுரம்’பார் அசோசியேஷன் சங்க தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் யார் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டனர்.இதில் புதிய தலைவர் ஜெகன், துணைத்தலைவர் கார்த்திக் போட்டியின்றி வெற்றி பெற்றனர். அதை தொடர்ந்து செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில், 408 வாக்காளர்களை கொண்ட இந்த தேர்தலில், 277 வாக்குகள் பதிவாகியது. செயலாளர் பதவிக்கு சத்யா தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து துணை தலைவர் பதவிக்கு செல்வமணியும், பொருளாளர் பதவிக்கு யுவராணியும் தேர்வு செய்யப்ட்டனர். நூலகர் விஷ்ணு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ‘பார் கவுன்சிலில்’ உள்ள வழக்கறிஞர்கள் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!வேலூர், ஜூன் 7-வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் அடிப்படைத் தேவைகள் சரிவர செய்து தரப்பட்டுள்ளதா? பயணிகள் சிரமம் இன்றி வந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதா? கழிப்பறைகள் சுத்தமாக வைத்து பராமரிக்கப்படுகிறதா உள்ளிட்ட அடிப்படை தேவைகள் மற்றும் கட்டமைப்புகள் சரிவர உள்ளதா? என பேருந்து நிலையத்தை சுற்றி சுற்றி பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார் வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ். அவருடன் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர். அத்துடன் பேருந்து நிலையத்தில் உள்ள ஓடுதளம் மற்றும் கழிப்பறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குப்பைகள் சேரக்கூடாது. பேருந்து நிலையத்தில் உள்ள ஓடுதளத்தில் உள்ள பள்ளங்களை உடனடியாக அடைக்கவும் அவர் அப்போது உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பாலாஜி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கல்!வேலூர், ஜூன் 7-வேலூர் ஆபீஸர்ஸ் லைனில் உள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் திருமலைக்கோடி ஸ்ரீ புரம், அரியூர் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பாலாஜியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட நாயுடுகள் சங்கத் தலைவர் 7 ஜி முரளிதரன் திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் பக்தர்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த எளிய நிகழ்ச்சியில் போளூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.