காட்பாடி கல்புதூர் பகுதியில் கெங்கையம்மன் கோயில் திருவிழாவில்இளைஞர்களிடையே மோதல்: ஒருவர் அடித்துக் கொலை- கொலையாளிகள் 9 பேர் கைது- 6 பேருக்கு போலீஸ் வலை!வேலூர், ஜூன் 26-காட்பாடி கல்புதூர் பகுதியில் நடைபெற்ற கெங்கையம்மன் கோயில் திருவிழாவின் போது கல்புதூர், வண்டறந்தாங்கல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவேறு பிரிவு இளைஞர்களுக்கு இடையே முன்விரோதம் தொடர்பாக கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது உருட்டு கட்டைகள், இரும்பு ராடுகளால் தாக்கி கொண்டனர். இந்த மோதலின் போது தினகரன் என்ற இளைஞரை ரௌடி ஜானி உட்பட ஒரு கும்பல் விரட்டி சென்று அடித்து கொலை செய்து அருகில் இருந்த தரை கிணற்றில் வீசி விட்டு சென்று விட்டனர். இந்நிலையில் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த இளைஞர் தினகரன் முகத்தில் காயங்களுடன் கல்புதூர் பகுதியில் கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இறந்தவர் உடலை காட்பாடி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 15 பேர் மீது காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை தொடர்பாக ரௌடி கௌதம்(எ) ஜானி, நரசிம்மன், ஜீவா உட்பட 9 குற்றவாளிகளை காட்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 6 குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

வேலூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கத்தின் சார்பில் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் சீரமைப்பு!வேலூர், ஜூன் 25-ரோட்டரி டிஸ்ட்ரிக் 3231 மூலம் ரோட்டரி வேலூர் ஏஞ்சல்ஸ் சங்கத்தின் சார்பாக, காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவு நீர் வடிகால் வசதி, கழிப்பறை சீரமைப்பு மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டது. இதன் நிறைவு விழா பிற்பகல் 11:30 மணிக்கு நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆளுநர் சுரேஷ் தலைமையில், காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் சுதாகர் சிறப்பு விருந்தினராகவும் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை சரளாவும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் ரோட்டரி டிஸ்ட்ரிக் செயலாளர் கஜேந்திரன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். வேலூர் ரோட்டரி லிட்டரசி சேர்மன் அருளரசி மகிழ்வான பள்ளி பற்றிய விளக்க உரையினை வழங்கினார். விழாவில் இறுதியாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த வேலூர் ஏஞ்சல்ஸ் சங்கத்தின் தலைவர் விஜயபாரதி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட ஆளுநர் மற்றும் சிறப்பு விருந்தினர் ஏற்புரை வழங்கினர். தலைமை ஆசிரியை நன்றி தெரிவித்து பேசினார். இறுதியாக. இப்பள்ளி மகிழ்வான பள்ளியாக அறிவிக்கப்பட்டது. (ஹேப்பி ஸ்கூல்)ஏஞ்சல்ஸ் சங்கத்தின் செயலாளர் கவிதா நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏஞ்சல்ஸ் சங்கத்தின் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

லஞ்சம் வாங்கிய காட்பாடி பள்ளிக்குப்பம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவர் கைது!வேலூர்,ஜூன் 25-லஞ்சம் வாங்கிய காட்பாடி பள்ளிக் குப்பம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவர் வெங்கடலட்சுமியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், அக்கிரெட்டிபுதூரைச் சேர்ந்தவர் ரங்கன். இவர் தனது 3 குழந்தைகளுக்கு மருத்துவ சான்றிதழ் கேட்டு காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகை தந்தார். அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவர் வெங்கடலட்சுமியை சந்தித்து தனது குழந்தைகளுக்கு மருத்துவ சான்றிதழ் கேட்டார். அதற்கு வெங்கடலட்சுமி ஒரு குழந்தைக்கு தலா ரூ. 300 வீதம் 3 குழந்தைகளுக்கும் ரூபாய் 900 தர வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். ஆனால் இந்த பணத்தை கொடுக்க விருப்பமில்லாத ரங்கன் நேரடியாக வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு மருத்துவர் வெங்கடலட்சுமி லஞ்சம் கேட்பது குறித்து தகவல் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கொடுத்த ரூபாய் 900 ஐ ரசாயனம் தடவிய நிலையில் கொண்டு வந்து அரசு மருத்துவர் வெங்கடலட்சுமியிடம் ஒப்படைத்தார். அப்போது அந்த பணத்தை அவர் வாங்கி தனது பையில் வைத்துக்கொண்டார். இதை கண்காணித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்து மருத்துவர் வெங்கடலட்சுமியை கையும் களவுமாக கைது செய்து அவரை நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் வேலூர் தொரப்பாடி அரசு மகளிர் சிறையில் காவலில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காட்பாடியில் தூய்மை பணியாளர்களுக்கு சுகாதார அலுவலர் அறிவுரை வழங்கல்!வேலூர்,ஜூன் 25-வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 1வது மண்டலம், காட்பாடி பகுதியில் சுகாதார ஆய்வாளர் டாக்டர் கே. சிவக்குமார் தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது வீடு வீடாகச் செல்லும் தூய்மைப் பணியாளர்களின் பணி மற்றும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து வாங்கும் பணியை சரியாக செய்கின்றார்களா? என ஆய்வு செய்தார். குறிப்பாக பொதுமக்களிடம் இருந்து புகார் வராத வகையில் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அப்போது அவர்களுக்கு டாக்டர் சிவக்குமார் தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.

பொதுமக்கள் புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம்: அரசு அலுவலர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்- காட்பாடியில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் கோட்டாட்சியர் அறிவுரை!வேலூர், ஜூன் 24-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த ஜமாபந்தி நிறைவு விழா 23ம் தேதி காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை வேளையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வருவாய் தீர்வாய அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான அ. செந்தில்குமார் தலைமை வகித்தார்.இந்நிகழ்வில் காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி, துயர் துடைப்பு வட்டாட்சியர் சந்தோஷ்குமார், துணை வட்டாட்சியர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் தமிழ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இளங்கோவன், பவிதா, திலீப்குமார், கோபி, லாவண்யா மற்றும் கிராம உதவியாளர்கள் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த ஜமாபந்தியின்போது பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க அலுவலர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பேரில் வருவாய் நிர்வாகம் தொடர்பான பணிகள் மற்றும் மக்கள் குறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி மொத்தம் 70 பயனாளிகளுக்கு ரூ. 46 லட்சத்து தொன்னூற்று ஆயிரத்து இருநூற்று நாற்பத்தி நான்கு மதிப்பீட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உட்பிரிவு ஐந்து, பட்டா மாற்றம் ஒன்று, இலவச வீட்டு மனை பட்டாக்கள் 31 ,சமூக பாதுகாப்பு திட்டம் 20, பரப்பு திருத்தம் 7, வேளாண்மை துறை சார்பில் 4, மாற்றுத்திறனாளிகள் சார்பில் இரண்டு என நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு கோட்டாட்சியர் செந்தில்குமார் வழங்கினார். இதில் சிறப்புரையாற்றி பேசிய கோட்டாட்சியர் செந்தில்குமார், இங்கு எந்த பணிகள் நடைபெற வேண்டும் என்றாலும் இடைத்தரகர்களை குறிப்பாக புரோக்கர்களை நாடாதீர்கள். பொதுமக்கள் நேரடியாக தொடர்புடைய அரசு அலுவலர்களை நாடி தங்களது பணிகளை முடித்து செல்லுங்கள். வீணாக உங்களது பணத்தை புரோக்கர்களிடம் கொடுத்து இழக்க வேண்டாம். குறிப்பாக எந்த பணி என்றாலும் முடித்து தருவதற்கு அரசு அலுவலர்கள் தயாராக உள்ளனர். பொதுமக்கள் அரசு அலுவலர்களை நன்கு பயன்படுத்தி பயன் பெறுங்கள் என்று அவர் அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை துணை வட்டாட்சியர் சிவக்குமார் தொகுத்து வழங்கினார். விவசாயிகள் தங்களது புதிய ரக நெல்மணிகளை அறிமுகம் செய்து சக விவசாயிகளுக்கு விதைகளாக வழங்கினர். இதில் விவசாயிகள் சார்பில் பள்ளிக்குப்பம் நரசிம்மன், லட்சுமணன், புண்ணியகோட்டி உள்ளிட்ட பல விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த ஜமாபந்தி கடந்த 17ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை சிறப்புடன் நடைபெற அனைத்து பணிகளையும் சிறப்பாக முடித்துக் கொடுத்த காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரிக்கு அனைவரும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர் .மேல் பாடி வருவாய் ஆய்வாளர் பிரபு நன்றி கூறினார். இந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.