பொதுமக்கள் புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம்: அரசு அலுவலர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்- காட்பாடியில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் கோட்டாட்சியர் அறிவுரை!வேலூர், ஜூன் 24-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாய ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த ஜமாபந்தி நிறைவு விழா 23ம் தேதி காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை வேளையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வருவாய் தீர்வாய அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான அ. செந்தில்குமார் தலைமை வகித்தார்.இந்நிகழ்வில் காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி, துயர் துடைப்பு வட்டாட்சியர் சந்தோஷ்குமார், துணை வட்டாட்சியர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் தமிழ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் இளங்கோவன், பவிதா, திலீப்குமார், கோபி, லாவண்யா மற்றும் கிராம உதவியாளர்கள் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்த ஜமாபந்தியின்போது பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க அலுவலர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பேரில் வருவாய் நிர்வாகம் தொடர்பான பணிகள் மற்றும் மக்கள் குறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி மொத்தம் 70 பயனாளிகளுக்கு ரூ. 46 லட்சத்து தொன்னூற்று ஆயிரத்து இருநூற்று நாற்பத்தி நான்கு மதிப்பீட்டில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உட்பிரிவு ஐந்து, பட்டா மாற்றம் ஒன்று, இலவச வீட்டு மனை பட்டாக்கள் 31 ,சமூக பாதுகாப்பு திட்டம் 20, பரப்பு திருத்தம் 7, வேளாண்மை துறை சார்பில் 4, மாற்றுத்திறனாளிகள் சார்பில் இரண்டு என நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு கோட்டாட்சியர் செந்தில்குமார் வழங்கினார். இதில் சிறப்புரையாற்றி பேசிய கோட்டாட்சியர் செந்தில்குமார், இங்கு எந்த பணிகள் நடைபெற வேண்டும் என்றாலும் இடைத்தரகர்களை குறிப்பாக புரோக்கர்களை நாடாதீர்கள். பொதுமக்கள் நேரடியாக தொடர்புடைய அரசு அலுவலர்களை நாடி தங்களது பணிகளை முடித்து செல்லுங்கள். வீணாக உங்களது பணத்தை புரோக்கர்களிடம் கொடுத்து இழக்க வேண்டாம். குறிப்பாக எந்த பணி என்றாலும் முடித்து தருவதற்கு அரசு அலுவலர்கள் தயாராக உள்ளனர். பொதுமக்கள் அரசு அலுவலர்களை நன்கு பயன்படுத்தி பயன் பெறுங்கள் என்று அவர் அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை துணை வட்டாட்சியர் சிவக்குமார் தொகுத்து வழங்கினார். விவசாயிகள் தங்களது புதிய ரக நெல்மணிகளை அறிமுகம் செய்து சக விவசாயிகளுக்கு விதைகளாக வழங்கினர். இதில் விவசாயிகள் சார்பில் பள்ளிக்குப்பம் நரசிம்மன், லட்சுமணன், புண்ணியகோட்டி உள்ளிட்ட பல விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த ஜமாபந்தி கடந்த 17ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை சிறப்புடன் நடைபெற அனைத்து பணிகளையும் சிறப்பாக முடித்துக் கொடுத்த காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரிக்கு அனைவரும் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர் .மேல் பாடி வருவாய் ஆய்வாளர் பிரபு நன்றி கூறினார். இந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.