காட்பாடி தாராபடவேடு மண்டல அலுவலகத்தில் வேலூர் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு!வேலூர், மே 31-வேலூர் மாநகராட்சி காட்பாடி மண்டலம் 1, தாராபடவேடு மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் இரா. லட்சுமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தூய்மை பணியாளர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். அத்துடன் வீடு வீடாகச் செல்லும் தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தனித்தனியாக தரம் பிரித்து வாங்கும் பணியையும் அவர் ஆய்வு செய்தார். பொதுமக்களிடமிருந்து புகார் வராத வகையில் தூய்மைப் பணியாளர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனவும் அவர் அப்போது அறிவுறுத்தினார். இந்த திடீர் ஆய்வின் போது காட்பாடி 1வது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் சிவக்குமார் உடன் இருந்தார்.

ரயில் தண்டவாளம் அருகே உள்ள கால்வாயில் விழுந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர்: அவரை மீட்டு காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை!வேலூர், மே 31-வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேவூர் ரயில் நிலையத்திற்கும், திருவலம் ரயில் நிலையத்திற்கும் இடையில் உள்ள Upline பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் அங்குள்ள கால்வாயில் பலத்த காயங்களுடன் மயக்க நிலையில் விழுந்து கிடந்தார்.இதனைப் பார்த்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேர்க்காடு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் மயங்கிய நிலையிலேயே இருந்தார். இதனால் அவருடைய பெயர் மற்றும் விலாசம் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் விபத்து வழக்குப் பதிவு செய்து காயமடைந்த நபர் ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? மற்றும் அவர் யார்? , எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் சேர்க்காடு அரசு மருத்துவமனையில் இருந்து அவர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா கோலாகலம்!வேலூர், மே 30-வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி கடந்த காலத்தில் திமுக வசம் இருந்தது. இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வசம் இருந்த அணைக்கட்டு தொகுதி அதிமுக கைக்கு மாறியது. இதையடுத்து இந்த அலுவலகத்தின் மொத்த பொறுப்பும் அதிமுகவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் மு. க .ஸ்டாலினின் உருவப்படம் அகற்றப்பட்டது. இதையடுத்து அந்த அலுவலகத்தை தூய்மைப்படுத்தி மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர்களான எம் .ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அலுவலகத்தின் திறப்பு விழா 29.5.2026 வெள்ளிக்கிழமை அன்று நடந்தது. இந்த அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியின் அலுவலகத்தை வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் வேலழகன் தனது திருக்கரங்களால் திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். பொதுமக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது குறைகளை மனுக்களாகவோ அல்லது இந்த அலுவலகத்தில் பணியில் உள்ள ஊழியர்களிடமோ வழங்கி தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கேட்டு பெறலாம் என்று அப்போது அவர் தெரிவித்தார். பொதுமக்களுக்கு சேவை செய்வதே அதிமுகவின் தலையாய கடமையாகும். இதனையே எங்களது முன்னாள் தமிழக முதல்வர்கள் மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவரது வழியை பின்பற்றி தற்போது பொதுச்செயலாளராக அதிமுகவை நிர்வகித்து வரும் எடப்பாடி பழனிச்சாமி வழியில் குறைகளை பொதுமக்களுக்கு இல்லாமல் செய்வதே அதிமுகவின் தலையாய கடமை ஆகும். அதனையே இந்த அணைக்கட்டு தொகுதியில் நாங்கள் செய்து வருகிறோம் என்று பெருமிதத்துடன் அதிமுக எம்எல்ஏ வேலழகன் தெரிவித்தார். இந்த திறப்பு விழாவில் ரிப்பன் வெட்டியும் ,மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும் தனது பணியை முறைப்படி சட்டமன்ற அலுவலகத்தில் தொடங்கியுள்ளார் அதிமுக எம்எல்ஏ வேலழகன். எம் எல் ஏ வேலழகன் பணி சிறக்க அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி அலுவலகத் திறப்பு விழாவை முன்னிட்டு நடந்த இந்த எளிய விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. அத்துடன் தேநீர் விருந்தும் அளித்து உபசரிக்கப்பட்டது. பொதுமக்கள் இந்த அலுவலகத்தை பயன்படுத்தி தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அதிமுக எம்எல்ஏ வேலழகன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரணாம்பட்டு நகரமன்ற கூட்டத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்களை ஒருமையில் பேசும் நகராட்சி ஆணையாளர் மோகன் குமாரை கண்டித்து நகர மன்ற உறுப்பினர்கள் நகர மன்ற கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு!வேலூர், மே 30-வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகரமன்ற கூட்டம் பல மாதங்களாக நடத்தப்படவில்லை. தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு பிறகு முதல் முறையாக நகரமன்றக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நகர மன்ற கூடத்தில் நகர மன்றக் கூட்டம் நடைபெறாமல் நகர மன்ற தலைவரின் அவையில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் பி. பிரேமா வெற்றிவேல் தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத் தலைவர்.ஆலியார் ஜூபேர் அஹமத் முன்னிலை வகித்தார். நகராட்சியில் நகர மன்ற கூட்டத்தில் பெண் நகர மன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் நகர மன்ற கூட்டத்தில் பேசுவது தொடர்ந்து வாடிக்கையாக நடந்து வருகின்றது. இதை கண்டிக்க வேண்டிய நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றி வேல், நகர மன்றத் துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர் அஹமதும், நகராட்சி ஆணையாளர் மோகன்குமாரும் இதை கண்டு கொள்ளாமல் அமைதி காத்து வருகின்றனர். நகராட்சி பெண் கவுன்சிலர்களின் கணவர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றனர். மேலும் நகராட்சி ஆணையாளர் மோகன் குமார் நகராட்சியில் நடைபெறும் ஒரு சில குறைகளையும், கோரிக்கைகளையும், பொதுமக்கள் எடுத்துச் சொன்னால் அதை கண்டு கொள்ளவில்லை. தூய்மை பணியாளர்களை நீ வா போ என்று ஒருமையில் பேசுவதாகவும் புகார் கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்திலேயே இது போன்ற அடாவடிகளும் ,அராஜகங்களும் பேரணாம்பட்டு நகராட்சியில் மட்டுமே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய குழாய் இணைப்புகளை போடும் பொதுமக்களிடம் இருந்து குழாய் இணைப்புக்கான டெபாசிட் தொகையைப் பெற்றுக் கொண்டு அதற்கு ரசீது தராமல் குழாய் இணைப்புகளை நகராட்சி ஆணையாளர் மோகன்குமார் வழங்கி விடுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வேலூர் மாவட்ட நகராட்சிகளின் அதிகாரியிடம் வாய் மொழியான புகார்களை அளித்தும் (RDM0) ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இன்னமும் சொன்னால் பேரணாம்பட்டு நகராட்சியில் செய்யாத வேலைகளுக்கெல்லாம் ரசீது போட்டு பல லட்சங்களை மேற்கண்ட 3 பேரும் கூட்டு கொள்ளை அடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி தானே நேரடியாக வந்து ஆய்வு செய்து ஆராய்ந்து பார்த்தால் பல தில்லுமுல்லு வேலைகள் நடந்திருப்பது வெட்ட வெளிச்சமாக வெளியில் தெரியவரும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் பேரணாம்பட்டு நகராட்சியை திமுக அல்லாத வேறு ஏதாவது ஒரு கட்சி நிர்வாகம் செய்ய வந்தால் பேரணாம்பட்டு நகராட்சி சீரோடும் சிறப்போடும் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மேலும் பேரணாம்பட்டு நகராட்சியில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகளை கண்டித்து ஐந்தாவது வார்டு நகர மன்ற உறுப்பினர். வழக்கறிஞர் சி.அப்துல் ஹமீத் உள்ளிட்ட ஒரு சில நகர மன்ற உறுப்பினர்கள் நகர மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளியே சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலில் ஒற்றை யானை அட்டகாசம்: பொதுமக்கள் பீதி!வேலூர், மே 30-காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கல் பகுதியில் ஒற்றை யானை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக சுற்றி திரிந்து வருகிறது. இந்த யானை பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் பீதி அடைந்து காணப்படுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வண்டறந்தாங்கல் முதல் தொண்டான்துளசி வரை இந்த ஒற்றை யானை அலைந்து திரிகிறது .இதனால் விவசாயம் செய்துள்ள விவசாயிகளின் பயிர்கள் சேதம் அடைந்து ஒன்றுக்கும் உதவாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் சொல்லொனா துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தும் அவர்களும் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இந்த ஒற்றை யானையை விரட்டவும் முடியாமல் என்ன செய்வது என்றும் தெரியாமல் வனத்துறையினர் குழம்பிய நிலையில் காணப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பொதுமக்களோ தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள தினம் தினம் இரவு நேரங்களில் தூக்கத்தை தொலைத்து விட்டு உயிருக்கு அஞ்சி நடுங்கி பயந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்பது வெட்கக்கேடான விஷயமாகும். ஆதலால் பொதுமக்கள் நலன் கருதியும் விவசாயிகள் நலன் கருதியும் இந்த ஒற்றை யானையை அருகில் உள்ள ஆந்திர பிரதேச எல்லையில் விரட்டியடித்து பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வனத்துறை முன்வர வேண்டும் என்பது ஒட்டுமொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக மாறி உள்ளது. வனத்துறை பொதுமக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமா? அல்லது கைகட்டி வழக்கம்போல் வேடிக்கை பார்க்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

திமிரி அருகே வருவாய்த்துறை நிலத்தில் அனுமதியின்றி பாறை தகர்ப்பு வெடி – அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார்!ராணிப்பேட்டை, மே 29-ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தாலுக்கா, திமிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட துர்கம் கிராமத்தில் வருவாய்த்துறைக்குச் சொந்தமான நெல்லிமலை காட்டுப் பகுதியில் எந்த அனுமதியும் இல்லாமல் சமூக விரோதிகள் பாறையை வெடி வைத்து தகர்த்து வருவதாக புகார் எழுந்துள்ளது.குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை கொண்டு அதிக அளவில் வெடி துளைகள் போடப்பட்டு பாறைகள் உடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வருவாய்த்துறை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் மற்றும் வனத்துறையினரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்கள் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை.”அதிகாரிகளுக்கு தெரியாமல் இந்த சம்பவங்கள் நடக்க வாய்ப்பில்லை. அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” .இந்நிலையில், பத்துரூபாய் இயக்கத்தின் திமிரி ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலாவை கைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட ஆட்சியர், “நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்ததாக அவர் தெரிவித்தார்.மேலும், “அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், திமிரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பொதுமக்களை திரட்டி பத்துரூபாய் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும்” எனவும் சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.அனுமதியின்றி வெடி வைத்து பாறைகளை உடைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காணாமல் போன மாட்டை தேடிச் சென்ற முதியவரை சரமாரியாக தாக்கி கொலை செய்த பரிதாபம்: நாலு பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலை!வேலூர், மே 29-வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் அடுத்த பழைய வசூரைச் சேர்ந்தவர் ஜே. பாஸ்கரன் (49). இவர் மாடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் இவரது மாடு ஒன்று வழி தவறி காட்பாடி வட்டம், பிரம்மபுரம் அடுத்த சேவூர் அருகே சென்று விட்டது. இதை தேடிக்கொண்டு பாஸ்கரன் சென்றுள்ளார். அப்போது எதிரில் வந்த சேவூரைச் சேர்ந்த பட்டாபி என்பவரிடம் மாடு ஒன்று இந்த பக்கம் ஏதாவது வந்ததா? என்று பாஸ்கரன் கேட்டுள்ளார். மாடு பார்ப்பதா எனக்கு வேலை என்று பட்டாபி கூறியுள்ளார். இதையடுத்து பட்டாபிக்கும் பாஸ்கரனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஆனது. இதில் இரு தரப்பிலும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்நிலையில் இந்த தாக்குதல் நடந்து கொண்டிருந்த வேளையில் பட்டாபியின் நண்பர்கள் ஆன மேலும் மூவர் அங்கு வந்து பட்டாபியுடன் சேர்ந்து கொண்டு பாஸ்கரனை கண்மூடித்தனமாகவும், கொடூரமாகவும் தாக்கியுள்ளனர். இதில் மயங்கி அதே இடத்தில் சரிந்த பாஸ்கரனை நான்கு பேரும் தூக்கிக்கொண்டு சென்று அருகில் இருந்த மாட்டுப்பட்டியில் வீசி விட்டுச் சென்று விட்டனர். இந்நிலையில் பட்டாபியின் தந்தை அந்த வழியாக வந்துள்ளார். அவர் மயங்கி கிடந்த பாஸ்கரனுக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பாஸ்கரன் கொண்டு சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கழுத்தில் இருந்த எலும்புகள் நொறுங்கியதால் இவர் உயிர் பிழைப்பது சிரமம் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரிடம் பாஸ்கரன் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அடிதடி வழக்குப் பதிவு செய்து விசாரணையை நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் .இந்நிலையில் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து பாஸ்கரனை கொடூரமாக தாக்கி கொலை செய்த பட்டாபி உள்ளிட்ட சேவூரைச் சேர்ந்த 4 பேரை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.