மெட்டுக்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்!வேலூர், ஆக.16-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், மெட்டுக்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவி அனிதா இளங்கோவன் தலைமையில் நடந்தது. ஊராட்சி எழுத்தர் சரவணன் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார். மெட்டுக்குளம் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்தும், பொதுமக்கள் கூறிய கருத்துக்களும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அடிப்படை தேவைகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை உள்ளிட்ட வசதிகள் தன்னிறைவு பெற்றதாகவும் கூறப்பட்டது. இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை கிராம சபையில் தெரிவித்தனர்.கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிராம சபை கூட்டம் நிறைவு பெற்றதும் அனைவருக்கும் மதிய உணவு அளித்து உபசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேலூரில் 13 பனை மற்றும் 4 ஈச்ச மரங்கள் தீ வைத்து அழிப்பு:மாவட்ட ஆட்சியர், – மரங்களை அழித்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!வேலூர், ஆக. 15-வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ரங்காபுரம் – காட்பாடி தாலுகா பிரம்மபுரம் பாலாற்றின் குறுக்கே இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் அண்மையில் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், சாலைப் பணிகளை மேற்கொண்ட நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் தரப்பினர், சாலையிலிருந்து சுமார் 100 அடி தொலைவில் இருந்த 13 பனை மரங்கள் மற்றும் 4 ஈச்ச மரங்களை வெட்டி தீ வைத்து அழித்துள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதன் காரணமாக சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து வந்த 13 பனை மரங்களும், 4 ஈச்ச மரங்களும் கருகி சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பனை மரம் தமிழ்நாட்டின் மாநில மரமாக விளங்குவதுடன், நிலத்தடி நீர் பாதுகாப்பு, மண் அரிப்பு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல ஆண்டுகள் பராமரித்து வளர்க்க வேண்டிய மரங்களை தேவையின்றி அழித்திருப்பது மனிதநேயமற்ற செயல் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கு எதிரான செயலாகவும் கருதப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்புச் சட்டம், 1994 (Tamil Nadu Preservation of Palmyrah Trees Act, 1994), இந்திய வனச் சட்டம், 1927 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 ஆகிய சட்டங்களின்படி உரிய அனுமதியின்றி பனை மரங்களை வெட்டுதல், சேதப்படுத்துதல் அல்லது அழித்தல் குற்றமாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் இதனைக் கண்டும் காணாமல் முற்றிலுமாக வேடிக்கை பார்த்த கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வேலூர் தாசில்தார் மீதும் கடுமையான நடவடிக்கைகளும், அபராதம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.எனவே, இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ் உடனடியாக விசாரணை நடத்தி, மரங்களை அழித்தவர்களை அடையாளம் கண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் குறைந்தபட்சம் 100 பனை மரக்கன்றுகள் மற்றும் 50 ஈச்ச மரக்கன்றுகள் நடவு செய்து, இதற்கு நஷ்ட ஈடாக குறைந்தபட்சம் 50 லட்சம் அபராதம் விதித்து அரசு செலுத்த உத்தரவிட வேண்டியும், தற்போது நடும் மரங்களை அவற்றை பராமரிக்க நெடுஞ்சாலைத் துறை மற்றும் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கீ.வ.குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின்’தேச உணர்வு’ ஊர்வலம்!வேலூர், ஆக. 15-ஆக.15.08.2026 – இந்திய திருநாட்டின் 80 -ஆம் ஆண்டு சுதந்திர தின திருநாளாகும்.அந்த திருநாளை இந்தியர்கள் அனைவரும் மகழ்ச்சியுடன்கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில்,வேலூர் மாவட்டம்,கீ.வ.குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் அக.14-அன்று ஒன்றிணைந்து’தேச உணர்வு!’ என்கிற ஓர் தேசப்பற்றை வெளிப்படுத்தும் உன்னதமான ஊர்வலத்தை பள்ளி தலைமை ஆசிரியர்.சாந்தி தலைமையில் நடத்தினர்.கீ.வ.குப்பம் வட்டாட்சியர்.பாலச்சந்திரன் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.உதவி தலைமை ஆசிரியர்கள். சங்கீதா,ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாணவிகள், இன்னுயிர் தந்து நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தந்த தேசத் தலைவர்களின் புகைப்படங்களையும்,தேசியக்கொடிகள் மற்றும்மூவர்ண பலூன்களை கைகளில் ஏந்தி,தேச பக்தி கொண்ட வீர முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலம் வந்தனர்.மேல்மாயில் சாலையிலுள்ள பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு,கீ.வ.குப்பம் பேருந்துநிலையம் கடந்து,காவல் நிலையம் வரைசென்று ஊர்வலம் மீண்டும்பள்ளியை வந்தடைந்தது.இந்நிகழ்வில்,கீ.வ.குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர், ,பள்ளி கட்டட குழு பொருளாளர் நந்தகோபால், ஆசிரியர்கள் பப்பீனா, அருள் ஜோதி, ராதா, கலைவாணி, கணகேஸ்வரி, அமுதவல்லி,ஷோபா மற்றும் மகிழு முற்ற மாணவ அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை ஆசிரியர் சீனிவாசன் வாசிக்க மாணவிகள் அனைவரும் உறுதிமொழியை ஏற்றனர்.மாணவிகள் மேலும்,விடுதலைக்கு வித்திட்ட தலைவர்களின் உருவங்களில் மாறு வேடம் அணிந்து,பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.தேசிய ஒருமைப்பாட்டு ஊர்வலத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மகிழ் முற்ற மாணவ அமைச்சர்கள் செய்திருந்தனர்.

காட்பாடியில் நடந்த விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தை புறக்கணிப்பு செய்த விவசாயிகள்: காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி மீது அடுக்கடுக்கான புகார்களை கூறும் விவசாய சங்கங்கள்!வேலூர்,ஆக.15-வேலூர் மாவட்டம், காட்பாடி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் காட்பாடி தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் மகேஸ்வரி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சிறிது நேரம் கூட இருக்கையில் அமராமல் கூட்டத்தை புறக்கணித்துவிட்டு அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகள் தரப்பில் கூறப்பட்ட புகார்கள் விவரம் வருமாறு: காட்பாடி பகுதியில் வேளாண் கோட்ட அலுவலகம் இல்லை. வேளாண் துணை இயக்குநர் மற்றும் வேளாண் கோட்ட அலுவலர் போன்ற பதவிகளுக்கு இதுவரை பொறுப்பாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர், நிரந்தரமாக யாரையும் அரசு நியமிப்பதில்லை. விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து புகார் தெரிவித்தால் அதிகாரிகள் நேரில் அழைத்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதில்லை. அலட்சியப் போக்குடனும், தெனாவெட்டுடனும் செயல்படுகின்றனர். அரசு அலுவலகங்களில் யாரும் லஞ்சம் கொடுக்க தேவையில்லை என்று தமிழக அரசின் உத்தரவுக்கு பிறகு விவசாயிகளின் குழந்தைகள் கல்லூரி படிப்புக்கு சேர வருமானம், சாதி, இருப்பிடம், முதல் பட்டதாரி உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கு தாலுகா அலுவலகத்திற்குச் சென்றால் அலைக்கழிக்கப்படுகின்றனர். விவசாயிகளை ஒரு சராசரி மனிதர்களாக கூட வட்டாட்சியர் மகேஸ்வரி மதிப்பது கூட கிடையாது. கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் கையெழுத்திட்ட பின்னர் பல நாட்களாக எங்களது குழந்தைகளின் கல்வி சான்றிதழ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவை காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி மேசையின் மீது கிடப்பில் போடப்பட்டு பத்து நாட்களுக்கும் மேலாக சான்றிதழ்கள் வழங்கப்படாமல் உள்ளது கண்டிக்கத்தக்கது. இதுநாள் வரை இதுபோன்று காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் நடந்ததே கிடையாது. அத்துடன் மாதாந்திர விவசாயிகள் கூட்டங்கள் சரியாக நடத்தப்படுவதில்லை. விவசாயிகள் பிரச்சனை குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. அதைப்பற்றி கண்டு கொள்வதே இல்லை. இவ்வாறு அலட்சிய போக்கில் நடந்து கொள்கிறார் வட்டாட்சியர் மகேஸ்வரி. குறிப்பாக விவசாயிகள் கொடுக்கும் புகார்களை அலட்சியத்துடன் கையாள்வதுடன் அவர்களை ஒருமையில் பேசுவது, நீங்கள் என் மீது புகார் கொடுத்தால் கூட என்னை ஒன்றும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. நீங்கள் எங்கு வேண்டுமென்றாலும் போய் புகார் கொடுத்துக் கொள்ளுங்கள். ஏன் தமிழக முதல்வரிடம் கூட கொடுங்கள். என்னை முதல்வர் கூட ஒன்றும் செய்ய இயலாது என்று தெனாவெட்டாக பதில் அளிக்கிறார் இந்த வட்டாட்சியர் மகேஸ்வரி என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. காட்பாடியில் விவசாயிகளின் நலனுக்காக நாற்றுப்பண்ணை அமைக்க வேண்டும். பூமி ஆதார் எனப்படும் விவசாயிகளின் தனித்துவ அடையாள அட்டை வழங்க காலதாமதம் ஆகி வருகிறது. இதில் வருவாய்த் துறையினர் மெத்தனப் போக்கை கடைபிடிக்கின்றனர். கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தால் அவர்கள் சங்கம் அமைத்துள்ளனர். அதனால் அவர்கள் மீது எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் என்னால் எடுக்க இயலாது என்று கூலாக பதில் அளிக்கிறார் கோட்டாட்சியர் ராம்குமார். ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள உள்ளிபுதூர் பகுதியில் அமைந்துள்ள மாங்கூழ் தொழிற்சாலையின் கழிவுநீர் விவசாய நிலங்களில் பாய்ந்து ஓடி கலப்பதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வள்ளிமலை, கொல்லப்பள்ளி பகுதியில் உள்ள ஏரி மதகுகளை சீரமைக்க வேண்டும். மா விவசாயிகளின் நலனுக்காக மாங்கூழ் தொழிற்சாலையை இந்த பகுதியில் அமைக்க வேண்டும். அதேபோன்று கணியம்பாடி பகுதியில் செயல்படும் கல்குவாரிகளை தடுத்து நிறுத்த வேண்டும். குறிப்பாக இந்த பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. இதனால் எலாநினோ தாக்கம் குறையும் வரை தற்போது கல்குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கடந்த காலங்களில் காட்பாடி வருவாய் வட்டாட்சியராக வருபவர்கள் அவர்களை தனியாக அழைத்துப் பேசி அவர்களது குறைகளை தீர்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது வட்டாட்சியராக வந்துள்ள மகேஸ்வரியின் போக்கு மிகவும் விவசாயிகளுக்கு எதிரான போக்காக மாறி உள்ளது. அவரது விவசாயிகளின் விரோதப் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் விவசாயிகளை ஒன்று திரட்டி மாவட்ட அளவில் போராட்டம் நடத்தக்கூட விவசாயிகள் சங்கங்கள் தயங்காது என்று தெரிவித்துள்ளனர். இவ்வாறு பல்வேறு புகார்கள் வட்டாட்சியர் மகேஸ்வரி மீது கூறப்பட்டும் அவர் மீது மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்துவது ஆரோக்கியமானதாக இருக்காது என்று விவசாயிகள் தரப்பிலும், சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் ஆய்வாளர் மன்றம் சார்பில் நிதி அமைச்சருக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பு!வேலூர், ஆக. 14-நேற்று 13.8.26 அன்று உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் ஆய்வாளர் மன்றம் சார்பில் மாண்புமிகு நிதியமைச்சரை நேரில் சந்தித்து பட்ஜெட் தாக்கல் செய்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் உள்ளாட்சி நிதி தணிக்கை துறையின் சிறப்பு தணிக்கை அறிக்கையினை மாண்புமிகு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கும், அதுகுறித்து சட்டசபையில் பேசி தணிக்கை துறைகளுக்கு கௌரவம் அளித்தமைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. அத்துடன் CAMS ல் தற்போது விடுப்பு எடுத்தால் தணிக்கை பணி நீட்டிப்பு செய்ய நடவடிக்கை எடுத்தது, மாற்றுத் திறனாளிகளுக்கு பணித்திட்டம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொண்டது மற்றும் தொலைதூர பணி திட்டங்களை ஒரு சில மாவட்டங்களில் மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொண்டது குறித்து,வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொலைதூர பணித்திட்டங்களை விரைவில் மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் ஆய்வாளர் மன்றத்தின் கோரிக்கையின் படி அனைத்து தணிக்கையாளர்களுக்கும் விரைவில் மடிக்கணினிகள் வழங்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ஆர்.பாபு, பொதுச் செயலாளர் சீனி செந்தில், ஆய்வாளர் மன்ற மாநில தலைவர் பா.ஐயப்பன், பொதுச் செயலாளர் இ.பிரகாஷ், பொருளாளர் க.தாமரைச்செல்வன் (ம) துணைத் தலைவர் த.ஞானவேல் ஆகியோர் இந்த அமைச்சரை நேரில் சந்தித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்வாறு தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் ஆய்வாளர் மன்றத்தின் மாநில மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.