செய்யாறில் உதவும் கரங்கள் -அகர்வால் மருத்துவமனையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் !செய்யாறு, ஜூலை 13 -செய்யாறு உதவும் கரங்களும் – நவலடி நிதி நிறுவனம் – சென்னை அகர்வால் மருத்துவமனையும் இணைந்து, ஏழை – எளிய மக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.செய்யாறில் உதவும் கரங்கள் என்ற அமைப்பு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் ஒவ்வொரு மாதமும் 2வது ஞாயிற்றுக்கிழமையில் ஏழை – எளிய மக்கள் பயன் பெறும் வகையில் கண், காது – மூக்கு – தொண்டை, இதயம், பொதுமருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை இலவசமாக அளித்து வருகிறது. இதுதவிர, இந்த அமைப்பு மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்களால் கைவிடப்பட்ட முதியோர்கள் ‘இருக்கும் இடம் தேடி’ தினமும் உணவு வழங்கி வருகிறது. இந்த செயல் செய்யாறு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.நேற்று முன் 2ம் சனிக்கிழமை செய்யாறு கோபால் தெருவில், செய்யாறு உதவும் கரங்கள் – நவலடி நிதி நிறுவனம் – ஸ்ரீ பரணி பைனான்ஸ் மற்றும் சென்னை அகர்வால் மருத்துவமனை ஆகியவை ஒன்றிணைந்து பொது மக்களுக்கு இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது.முகாமை செய்யாறு உதவும் கரங்கள் நிறுவனரும், ஒருங்கிணைப்பாளருமான ஆதிகேசவன் தொடங்கி வைத்தார். தலைவர் ரவிபாலன், செயலாளர் சண்முகம், பொருளாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.300க்கும் மேற்பட்ட செய்யாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கண் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 20க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக சென்னை அகர்வால் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர். இந்த மேல் சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் செய்யாறு உதவும் கரங்கள் ஏற்கின்றது. இந்த இலவச கண் சிகிச்சை முகாம் ஏழை – எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கி உபசரிக்கப்பட்டது.

கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு ரூ.40 லட்சம் ஏமாற்றிய அணைக்கட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கோட்டி(எ) கோவேந்தன் கைது!வேலூர்,ஜூலை12-வேலூர் குட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா (48). இவர் தனது சொத்து பிரச்சனையை தீர்த்து வைக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அணைக்கட்டு மாவட்ட செயலாளர் கோட்டி என்கிற கோவேந்தன் மற்றும் சந்தோஷ் ஆகியோரிடம் ரூபாய் 40 லட்சம் ரொக்கப் பணத்தை வழங்கியுள்ளார். இதை வாங்கிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக கூறி ரூ. 40 லட்சத்தை திருப்பித் தராமல் ஷீலாவை அலை கழித்து உள்ளனர். அத்துடன் பணத்தை திருப்பித் தராமல் இருவரும் சேர்ந்து ஷீலாவை ஏமாற்றி இழுத்தடித்து உள்ளனர். இது குறித்து பலமுறை பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு கேட்டு ஓய்ந்து போன ஷீலா பொறுத்தது போதும் என பொங்கியெழுந்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வேலூர் தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அணைக்கட்டு மாவட்ட செயலாளர் கோட்டி என்கிற கோவேந்தன் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் இருவரும் வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து போக்குவரத்தை சீர்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேலூர் ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புக்கு களப்பணியாளர்களுக்கு ஆட்சியர் தலைமையில் பயிற்சி!வேலூர், ஜூலை 12-வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கு மாற்றுத்திறனாளிகளின் தரவுகளை துல்லியமாக கணக்கெடுக்கும் வகையில் பயிற்சி மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் தலைமையில் அளிக்கப்பட்டது. களப்பணியாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்கி கையடக்க கணினிகளை வழங்கி, மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தரவுகளை முழுமையாகவும், துல்லியமாகவும் சேகரித்து அரசின் நலத்திட்டங்கள் பயனாளிகளை விரைவாகச் சென்றடைய உறுதுணையாக செயல்படுமாறு அறிவுறுத்தி பயிற்சி வழங்கினார். இந்நிகழ்வில் மாநில திட்ட மேலாளர் (பயிற்சி மற்றும் தகவல் தொடர்பு) எஸ். ராஜராஜன், மாநில திட்ட மேலாளர் (தகவல் தொழில்நுட்பம்) ஆர். சௌந்தர் ராஜன், மாநில திட்ட அலுவலர் (சமுதாய மறுவாழ்வு சேவை) எஸ். அரவிந்த் பரத்வாஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச. பாபு, இளநிலை பதிவு அலுவலர் (JRO) இனியன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்னர்.

விடுதலை போராட்ட மாவீரன் அழகு முத்துக்கோனின் திருவுருவப் படத்திற்குதரணிவேந்தன் எம்.பி., – முன்னாள் எம்.எல்.ஏ., ஜோதி மாலை அணிவித்து மரியாதை !செய்யாறு, ஜூலை 12 -தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட ‘மாவீரன் அழகுமுத்துக்கோனின்’ 269வது பிறந்தநாளையொட்டி, வெம்பாக்கத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி ஆகியோர் தலைமையில் தி.மு.க.,வினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.தமிழகத்தைச் சேர்ந்தவர் அழகு முத்துக்கோன். இவர் கடந்த ‘200 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னோடி மாவீரராக திகழ்ந்தவர். இவரது 269வது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தி.மு.க.,வின் மத்திய ஒன்றியம் சார்பில், மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில், இவரது திருவுருவப் படத்தை மலர்களால் அலங்கரித்து, நிகழ்ச்சி ஏற்பாடுகளை வெம்பாக்கம் யாதவ சமூதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பூபாலன், பால்காரர் முனியன், தட்சிணாமூர்த்தி, மணி பிள்ளை, நாகூரான், கமல் ஆகியோர் விமரிசையாக செய்திருந்தனர்.ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன், செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி ஆகியோர் தலைமையில் தி.மு.க.,வினர் அழகு முத்துக்கோனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர்களான ஜே.சி.கே.சீனிவாசன், தினகரன், வெம்பாக்கம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் ராஜி, மாவட்ட பிரதிநிதிகள் பெருமாள், சிவப்பிரகாசம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அண்ணாமலையின்புதிய கட்சிக்கான தினமும் ஒரு நிகழ்ச்சி: செய்யாறில் சரவணன் தலைமையில் நடந்து வருவதாக தகவல் !செய்யாறு, ஜூலை 11 -அண்ணாமலை தொடங்கியுள்ள புது கட்சி தொடர்பாக செய்யாறில் தினமும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. ‘போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்’ என்ற வாசகங்கள் அடங்கிய ‘ஸ்டிக்கரை’ ஆட்டோக்களில் ஒட்டும் பணியில் தொண்டர்கள் நேற்று ஈடுபட்டனர்.செய்யாறு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அண்ணாமலை கட்சியில் இணையதளம் மூலமாக விரைவாக இணைந்து வருகின்றனர். இதற்கான விழிப்புணர்வை செய்யாறு வெங்கட்ராயன் பேட்டை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் – அண்ணாமலை தொடங்கியுள்ள புது கட்சியின் தொண்டருமான சரவணன் தலைமையில், இளம் தொண்டர்கள் ஒத்துழைப்புடன் தினமும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ‘மாறுவோம் மாற்றுவோம்’ – இளைஞர்கள் அழிவதற்கு காரணமாக இருந்து வரும் போதைப் பழக்கத்தை ‘தமிழகத்தை விட்டு விரட்டியடிப்போம்’ என்ற வாசகங்கள் அடங்கிய ‘ஸ்டிக்கரை’ 40க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஒட்டி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.செய்யாறு பெரியார் சிலை அருகே நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பஜார் வீதி வரை சென்றது. ‘ஸ்டிக்கர்’ ஒட்டப்பட்ட ஆட்டோக்கள் அணி வகுத்தபடி சென்று, தொண்டர்கள், போதை ஒழிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். அண்ணாமலையின் புது கட்சி தொடர்பாக தினமும் ஒரு நிகழ்ச்சி சரவணன் ஏற்பாட்டில் நடத்தப்படுவதால், புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!வேலூர் ,ஜூலை 11-வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து ஜூலை மாத (ஆனி) கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடைவிடாது ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இந்த நன்னாளில் முருக பக்தர்களுக்கு வேலூர் செங்குட்டை தொழிலதிபர் அச்சுதன் -அமுதா தம்பதியர் அன்னதானம் வழங்கினர். இந்த அன்னதானத்தில் கேசரி மற்றும் மதிய உணவு வெஜ் பிரியாணி சாதம், கத்தரிக்காய் கொஸ்து வழங்கப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் வரிசையில் நின்று இந்த அன்னதானத்தை பெற்று உண்டு மகிழ்ந்து தங்களது பசியாற்றி கொண்டனர்.இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அச்சுதன் தனது திருக்கரங்களால் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக முருகன் திருவுருவப் படத்துக்கு மலர்களால் அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. இதையடுத்து அன்னதானம் தொடர்ந்து நடந்தது. இந்த அன்னதானத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அச்சுதன் -அமுதா தம்பதியருடன் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் விமரிசையாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் அச்சுதனுக்கு உதவியாக தெலுங்கானா நக்சலைட் தேடுதல் வேட்டை பிரிவு உதவி ஆய்வாளர் ரவி, தொழிலதிபர் நந்தகுமார், முன்னாள் அதிமுக கவுன்சிலர் செங்குட்டை குமார் பேருதவி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரியலூர் மாவட்டத்தில், உள்ள கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு வீடுகள் தோறும் குடிநீர் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராமப்பகுதிகளில் ஒரு சிலர் வீட்டு குடிநீர் இணைப்புகளில் விதிகளுக்கு புறம்பாக மின் மோட்டார் பொருத்தி நீர் உறிஞ்சுவதால், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் தடையின்றி வழங்கிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, குடிநீர் குழாய்களில் மின்மோட்டார் பொருத்தியுள்ள வீட்டு உரிமையாளர்கள் மின்மோட்டாரை உடனடியாக துண்டித்து அப்புறப்படுத்திட தெரிவிக்கப்படுகிறது. தவறினால் அவர்களது மின்மோட்டார் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுவதோடு, குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, தெரிவித்துள்ளார்.