தமிழக அரசு இன்னமும் 6 மாதத்தில் கலைந்து விடும்: பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ் ஆருடம்!வேலூர், மே 29-தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்க மாநில தலைவர் பாபு தலைமையில் நிர்வாகிகள்அனைவரும் கடந்த 26.05.2026 அன்று நிதித்துறை அமைச்சர் மரிய வில்சனை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.அப்பொழுது தற்போதைய பதிவுத்துறை தலைவரும், தலைமை தணிக்கை இயக்குநருமான அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ் குறித்து புகார் மனு ஒன்றை அமைச்சரிடம் அளித்தனர். அதில் கடந்த 18.05.2026 அன்று நிதி அமைச்சராக இருந்த செங்கோட்டையனிடம் பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ் குறித்து புகார்கள் தெரிவித்தனர். அதனால் ஆத்திரமடைந்த அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ் தமிழக அரசை சிறுமைப்படுத்தும் நோக்கில் இந்த ஆட்சி இன்னும் 6 மாதத்தில் கவிழ்ந்து விடும் என்று தெரிவித்துள்ளார். அமைச்சரை யார் யாரெல்லாம் சந்தித்து புகார் மனு அளித்தார்களோ அவர்கள் மீது பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சவால் விட்டு பேசி வருவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் இம்மனுவில் தணிக்கை துறையில் cams மென்பொருள் மூலம் மேற்கொள்ளப்படும் தணிக்கையில் விடுப்புகள் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. 200 கிலோ மீட்டருக்கு மேல் தொலைவில் உள்ள தூரங்களில் பணி அமர்த்துவது, பணியமர்த்தப்பட்ட இடங்களில் பணி செய்ய விடாமல் தடுப்பது மற்றும் பெண் பணியாளர்களை ஒருமையில் திட்டுவது போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது முன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நிதி அமைச்சருக்கு தெரியாமல் தணிக்கை துறையை தனது பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில், உண்மை நிலவரங்களை மறைத்து மறு சீரமைப்பு பணிகள் முடியவில்லை என்ற போலி காரணத்தை காட்டி திரை மறைவு வேலைகள் மூலம் மீண்டும் தலைமை தணிக்கை இயக்குநர் கூடுதல் பொறுப்பை தொடர்வதற்கான ஆணையை அவர் தந்திரமாக பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவருக்கு எதிராக தலைமைச் செயலக நிதித்துறை பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியது, கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தியது போன்ற விவரங்களையும், தொடர்ந்து பணியாளர்கள் விரோதப் போக்கை கடைபிடிப்பது மற்றும் தற்போதைய தமிழக அரசுக்கு எதிராக செயல்படுவதாக குறிப்பிட்டு தற்போது தலைமை தணிக்கை இயக்குநராக உள்ள அருண் சுந்தர் தயாளன் ஐஏஎஸ்ஸை தலைமை தணிக்கை துறை இயக்குநர் கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவித்து புதிய தலைமை தணிக்கை இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சர் இவர் மீது என்ன துறைஸ்வ வாரிய்ய நடவடிக்கையை எடுக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வாடிக்கையாளர்கள் பணத்தை சுருட்டிக்கொண்டு ஏமாற்றிய தபால் நிலைய கிளை போஸ்ட் மாஸ்டர் அதிரடி கைது!வேலூர், மே 29-காட்பாடி ஜாப்ராபேட்டை பகுதியில் உள்ள தபால் நிலைய கிளையில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வந்த சுடர் நிதி என்பவர் வாடிக்கையாளர்களின் பணம் ரூ. 9,32,309/- கையாடல் செய்து ஏமாற்றியதாக காசிநாதன் (தபால் நிலைய உதவியாளர்) என்பவர் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் 26.05.2026 அன்று வேலூர் மாவட்ட குற்றப் பிரிவில் பெறப்பட்ட புகார் மனுவை போலீசார் விசாரித்தனர். இதனையடுத்து தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் கோகிலா வழக்குப் பதிவு செய்து லத்தேரி பகுதியைச் சேர்ந்த சுடர் நிதி க/பெ.சக்திவேல் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுடர் நிதியை காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் சுடர் நிதி வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய பெண்கள் சிறையில் காவலில் அடைக்கப்பட்டார்.

செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ரூ. 1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டிய தவெக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம்!வேலூர் ,மே 27 -தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் அமைச்சர்கள் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு மருத்துவமனைகள், கல்குவாரிகள், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கட்சி நிர்வாகிகள் ஆய்வு நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் வேலூர் மாவட்டம், கணியம்பாடி தவெக கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையிலான நிர்வாகிகள் லோகேஷ், ஈஸ்வரன் உள்ளிட்டோர் செங்கல் சூளை உரிமையாளர்களை மிரட்டி மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த 22ஆம் தேதி செங்கல் சூளை பகுதிக்குச் சென்றி ருந்த தவெக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. அன்றைய தினமே தவெக நிர்வாகிகள் மீது செங்கல் சூளை உரிமையாளர்கள் வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பதிலுக்கு தவெகவினர் இந்த பகுதிகளில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடைபெறுகிறது. இதனை தடுக்கவே நாங்கள் சென்றோம். மாமூல் எதுவும் கேட்கவில்லை என புகார் அளித்தனர். இந்த சம்பவம் திடீர் சர்ச்சையை ஏற்படுத்தியது. செங்கல் சூளை உரிமையாளர்களிடம் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டும், மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக கணியம்பாடி தாலுகா கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கி தவெக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக தவெக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடுதல் கூடாது. தங்களின் எல்லை என்ன என்பதை அறிந்து தவெகவினர் செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடுதலோ, ஆய்வுகள் மேற்கொள்ளவோ கூடாது .பொது மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எவ்வித இடையூறும் இன்றி கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் .கட்சியின் பெயரையோ அல்லது கட்சி பதவிகளையோ பயன்படுத்தி எவரும் தன்னிச்சையான அதிகார மையங்களாக செயல்படக்கூடாது. குறிப்பாக அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும்போது கட்சியின் மாண்பை குறைக்கும் வகையில் எவ்வித செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என கட்சி தலைமை வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், செங்கல் சூளையில் பணிபுரிபவர்கள், பொதுமக்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கணியம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 2 5 ஆம் தேதி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதையடுத்து வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலந்து சென்றனர் .இந்நிலையில் தவெக நிர்வாகி விஜயகுமார் மீது தவெக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குடியாத்தம் பிச்சனூர்பேட்டை கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த கோரி புதிய நீதிக் கட்சி சார்பில் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளிப்பு!வேலூர், மே 27-வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம், பிச்சனூர்பேட்டை கங்காதர சாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிந்துவிடம் புதிய நீதி கட்சியின் நகரச் செயலாளர் மற்றும் கைத்தறி காவலன் எஸ். ரமேஷ், பள்ளி கல்விக் குழு முன்னாள் துணைத் தலைவர் கோ. ஜெயவேலு ஆகியோர் மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து விட்டு கோரிக்கை மனு அளித்தனர். இந்தப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திக் கோரி பல்வேறு போராட்டங்கள், பல அரசியல் தலைவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்து வருகின்றார் புதிய நிதி கட்சியின் நகர செயலாளர் கைத்தறி காவலன் எஸ் ரமேஷ். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அவர் இந்த பள்ளியை தரம் உயர்த்தாமல் ஓய மாட்டேன் என்பதில் உறுதியோடும் பொதுமக்களுக்கு ஏதாவது தன்னால் இயன்றது செய்ய வேண்டும் என்றும் பணியாற்றி வருகிறார். கல்விக் கண்ணை திறந்த கர்ம வீரர் காமராஜர் போட்டியிட்ட இந்த தொகுதியில் மேலும் ஒரு பள்ளியை தரம் உயர்த்துவதற்காக தொடர்ந்து போராடி வருகிறார் இந்த போராளி எஸ் ரமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தொடர் முயற்சி தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் நிறைவேறும் என்பது திண்ணம். இம்முறை பள்ளியை தரம் உயர்த்தியே தீருவோம் என்ற கொள்கையுடனும், லட்சியத்துடனும் அவர் செயல்பட்டு வருகிறார். இம்முறை அவரது எண்ணம் ஈடேறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றே சொல்லலாம். தற்போது குடியாத்தம் தொகுதி எம்எல்ஏவிடம் மனு அளித்த போது ரமேஷூடன் குடியாத்தம் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர், தமிழக வெற்றி கழக நகர செயலாளர் இளங்கோ மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மது அருந்தியதை மனைவி கண்டித்ததால் சோகம்: ராணுவ வீரர் தூக்கு மாட்டி தற்கொலை!வேலூர், மே 27-காட்பாடி அடுத்தபொன்னை மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் குமார் ( 30). இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்த இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிருத்திகா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.விடுப்பில் ஊருக்கு வந்த விக்னேஷ்குமார்மது அருந்திவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விக்னேஷ் குமார் மது அருந்தியதால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் மனமுடைந்து காணப்பட்ட விக்னேஷ்குமார் வீட்டின் படுக்கையறைக்குச் சென்று கதவை தாழிட்டு கொண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக் கண்ட அவருடைய தாய்உடனடியாக உறவினர்களின் உதவியுடன் அவரை மீட்டு பொன்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் விக்னேஷ்குமார் ஏற்கனவே வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து பொன்னை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விக்னேஷ் குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கே. வி. குப்பம் அடுத்த காவனூரில் பாதாள கால்வாய் அமைப்பதை தடுத்து நிறுத்த கோரி பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டம்!வேலூர், மே 26-வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த காவனூர் பகுதியில் பாண்டியன் மதகு கால்வாயில் நீரை விடுவதற்கு ஏரியிலிருந்து பாதாள கால்வாய் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த புதிய கால்வாய் தெருவின் மத்தியில் செல்கிறது. இதனால் அருகில் உள்ள வீடுகள் சேதம் அடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது போக்குவரத்து, குடிநீர் ஆகியவற்றுக்கு கடும் இடையூறு ஏற்படும் என ஊர் மக்கள் கருதுகின்றனர். இதனால் பாதாளத்தில் கால்வாய் அமைக்கும் பணியை நிபந்தனைகள் இல்லாமல் நிறுத்த வேண்டும் என கிராம பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனையும் மீறி பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நீர்வளத்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்களை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதனால் அந்த பகுதியில் திடீரென பதட்டம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கே. வி. குப்பம் தொகுதி எம்எல்ஏ தென்றல் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்ததுடன் பாதாள கால்வாய் அமைக்கும் பணியை தடைபடாது நடைபெற ஏற்பாடுகளை செய்தார். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் திடீர் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்!வேலூர்,மே 26-வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் வே. ரா. சுப்புலட்சுமி தலைமை வகித்தார். அவர் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியருடன், மாவட்ட வருவாய் அலுவலர் மா. சிவசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பூ. காஞ்சனா, துணை ஆட்சியர் (பயிற்சி) கணேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கணியம்பாடியில் தவெக நிர்வாகியை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!வேலூர்,மே 26-வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கணியம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்கள் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கோட்டாட்சியர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் சமரசம் அடையாத செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ,பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில கோட்டாட்சியரிடம் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து தவெக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் சுமார் 2 மணி நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கணியம்பாடி பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதும், திடீர் பரபரப்பு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.