‘எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி’தி.மு.க., ஒன்றிய செயலாளர் என்.சங்கர் புகழாரம் !செய்யாறு, ஆக. 8 -செய்யாறு அடுத்த வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுதினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.வெம்பாக்கம் அடுத்த கனிகலுப்பை கிராமத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே. கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். கிராம நுழைவுவாயிலில் நிறுவப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அப்பொழுது வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் பேசியதாவது; ‘தமிழகத்தில் 7 முறை முதல்வராக பதவி வகித்தவர் முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி. இவரால், கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்களால் இன்றும் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர்.‌ தமிழகத்தில் புதியதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க., அரசு அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக கொடுக்கும் என கூறியுள்ளது. ஆனால், ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் 50 காசை கூடுதலாக உயர்த்தி விட்டு, இலவச மின்சாரத்தை கொடுக்கிறோம் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை. ஏமாற்று வேலையை செய்து வருகிறது இந்த புதிய அரசு;’ இவ்வாறு ஒன்றிய செயலாளர் என்.சங்கர் நிகழ்ச்சியில் பேசினார். இதையடுத்து மாவட்ட துணைத் தலைவர் எம்.கே. கார்த்திகேயன் பேசும்போது; ‘தி.மு.க., ஒரு ஆலமரம் போன்றது. ஆலமரம் பட்டுப் போனாலும் விழுதுகள் தாங்கிப் பிடிக்கும். அதுபோல தமிழகத்தில் தி.மு.க., மீண்டும் மலரும். அதுவரை காத்திருப்போம்; ‘இவ்வாறுஎம்.கே.கார்த்திகேயன் பேசினார். இதைத் தொடர்ந்து கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க., பொறுப்பாளர்களான பிரபு, அமல்ராஜ், தியாகு, சின்னதுரை, தர்மலிங்கம், துரை உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்.