செய்யாறில் குப்பை கிடங்காக மாறிவரும் ‘வாணிய குளத்தை’மீட்கக் கோரி காமராஜர் நகர் பொது மக்கள் சப் – கலெக்டரிடம் புகார் மனு!செய்யாறு, ஆக. 6 -செய்யாறு காமராஜர் நகரில் ‘குப்பை கிடங்கு – கழிவுகள் கொட்டும் இடமாக’ மாறி வரும் வாணிய குளத்தை மீட்க வேண்டும் என, பொதுமக்கள் செய்யாறு சப் – கலெக்டரிடம் புகார் மனுவை கொடுத்துள்ளனர்.செய்யாறில் அமைந்துள்ளது காமராஜர் நகர். இங்கு பழமையான வாணியக்குளம் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் கரைகளைச் சுற்றி 20க்கும் மேற்பட்ட வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். எஞ்சியுள்ள குளத்தை கழிவுநீர் – கழிவுப் பொருட்கள், குப்பைகளையும் கொட்டி கொஞ்சம் கொஞ்சமாக மூடி தூர்ந்து போகச் செய்து வருகின்றனர்.இந்த நிலை தொடர்ந்தால் குளமே காணாமல் போய்விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த குளத்தை முழுமையாக மீட்க வேண்டும் என, காமராஜர் நகரைச் சேர்ந்த பொது மக்கள் நேற்று செய்யாறு சப் – கலெக்டர் அம்பிகா ஜெயினிடம் புகார் மனுவை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது; ‘திருவத்திபுரம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாணியக்குளம் குப்பை கொட்டும் கிடங்காக மாறிவிட்டது. இந்த குளத்தை மீட்டெடுத்தால் இங்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தே இருக்கும். இங்குள்ள ஆக்கிரமிப் பாளர்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்து குளத்தை முழுமையாக மீட்டெடுத்து, நடைபாதை, பூங்கா உள்ளிட்ட வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply