பேருந்தில் குழந்தையின் கையில் இருந்த தங்கக் காப்பை திருடிய பலே பெண்மணி கைது!விழுப்புரம், ஜூன் 23-பஸ் ஏறும் போது 2 வயது குழந்தையின் கையில் இருந்த தங்க காப்பை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த சின்னகோட்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ஜெயப்பிரியா (26). இவர் நேற்றுமுன்தினம் நண்பகல் 12:00 மணியளவில் செஞ்சியில் இருந்து கணக்கன்குப்பம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு செல்வதற்கு தனது 2 வயது குழந்தையுடன் தனியார் பஸ்சில் ஏறினார். அப்போது ஜெயப்பிரியாவின் பின்னால் இருந்த புதுச்சேரி, நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி மேரி (56) குழந்தையின் கையில் இருந்த 1 சவரன் தங்கக் காப்பை கழற்றியுள்ளார். இதைப் பார்த்த ஜெயப்பிரியா கூச்சல் போட்டதும் அருகில் இருந்தவர்கள் மேரியை பிடித்தனர். இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேரியை கைது செய்தனர்.