காட்பாடியில் மது போதையில் உணவகத்தை அடித்து நொறுக்கிய நேபாளத் தொழிலாளர்கள்: கைது செய்யாமல் தப்பி ஓடிய போலீஸார்!வேலூர், மே 3-வேலூர் மாவட்டம், காட்பாடி கல்புதூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகத்தை, அங்கேயே பணிபுரியும் நேபாள நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம், காட்பாடி கல்புதூர் பகுதியில் முரளி என்பவருக்குச் சொந்தமான ‘MRM பாஸ்புட் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் நேபாள நாட்டைச் சேர்ந்த பரத், வாஞ்சி, சோட்டு ஆகிய மூன்று பேர் தொழிலாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.நேற்று முன்தினம் (மே 1) தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மது அருந்திவிட்டு போதையில் கடைக்கு வந்த அந்த மூன்று தொழிலாளர்களும்அங்கிருந்த தட்டுகள், சமையல் உபகரணங்கள் மற்றும் கண்ணாடிப் பொருட்களை சரமாரியாக அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்துள்ளனர்.இந்தத் தாக்குதலில் கடையில் இருந்த சுமார் ரூ. 50,000 மதிப்பிலான பொருட்கள் முழுமையாகச் சேதமடைந்தன. கடையில் பொருட்களை அடித்து நொறுக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட மூன்று பேரையும் மடக்கிப் பிடித்து காட்பாடி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தவுடன், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமல் போலீசார் மெத்தனமாகச் செயல்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அங்கிருந்து தப்பியோடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. போலீசாரின் இந்த அணுகுமுறை பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.வெளிநாட்டிலிருந்து பிழைப்பு தேடி வந்து, தங்களுக்கு வாழ்வாதாரம் கொடுத்த கடையையே அடித்து நொறுக்கிய செயல் கண்டிக்கத்தக்கது. அவர்கள் வெளிநாட்டவர்கள் என்பதற்காகத் தப்பிக்க விடக்கூடாது. உரிய விசாரணை நடத்தி, சேதத்திற்குத் தக்க இழப்பீடு பெற்றுத் தருவதோடு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்ட காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.