வேலூர் மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் நாகராஜ்!வேலூர், ஜூன் 17-வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சியின் 1-வது மண்டலத்தில் பணியாற்றி வரும் சில வருவாய் ஆய்வாளர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதே மாநகராட்சிக்குள் நான்கு மண்டலங்களில் மாறி மாறி பணியாற்றி வருவது குறித்து பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.1-வது மண்டலத்தில் வருவாய் அலுவலராக (ARO) பணியாற்றி வரும் நாகராஜ் மற்றும் கழிஞ்சூரைச் சேர்ந்த கணக்காளர் பத்மநாபன் ஆகியோர் நீண்டகாலமாக வேலூர் மாநகராட்சியிலேயே பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. நாகராஜ் மீது பல்வேறு புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், அவற்றின் மீது இதுவரை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், கணக்காளர் பத்மநாபன் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, சிபாரிசுகள் செய்து வருவதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.இவர்களின் பணிக்காலத்தில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு தங்களது உறவினர்களின் பெயரில் சொத்துக்கள் சேர்த்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையை வெளிக்கொணர, சம்பந்தப்பட்ட அலுவலர்களின் பணிப்பதிவுகள், சொத்து விவரங்கள் மற்றும் வருவாய் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், நீண்டகாலமாக ஒரே மாநகராட்சியில் பணியாற்றுவதால் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நாகராஜ் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வேலூர் மாநகராட்சி நிர்வாகம், சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்கள் மற்றும் தமிழக அரசு விரிவான உரிய விசாரணை நடத்திட வேண்டும். அந்த விசாரணையில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டால் நாகராஜ் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மாநகராட்சி நிர்வாகமும் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தவெக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கல்!வேலூர், ஜூன் 16-வேலூர் மேற்கு மாவட்டம் 34 வது வார்டு அரசமரப்பேட்டையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு, வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையிலும், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். எம்.வினோத் கண்ணன் முன்னிலையிலும், ஸ்கூல் பேக் மற்றும் நோட்டுப் புத்தகங்கள், பள்ளி கல்வி உபகரணங்கள் என்று சுமார் 300 மாணவ, மாணவிகளுக்கு 34 வது வார்டு தவெக நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பசுமாத்தூர் ஊராட்சியில் நடந்துள்ள ஊழல்களை விசாரிக்க அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு!வேலூர்,ஜூன்16-வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் வட்டம், பசுமாத்தூர் கிராமத்தில் பல ஊழல்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதனை பற்றிய உண்மை தன்மையை வெளிக்கொண்டு வர பசுமாத்தூரைச் சார்ந்த சமூக ஆர்வலர் ஜெயந்தன் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 2(j) மற்றும் 2(f) ன் படி கள ஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த 17.03.2025 அன்று மனு செய்திருந்தார். இந்த மனுவினை பெற்றுக்கொண்ட பொது தகவல் அலுவலர் சாந்தி 30 நாட்கள் முடிந்தும் ஜெயந்தன் என்பவருக்கு தேதி மற்றும் நேரம் ஒதுக்கி தரவில்லை. பொது தகவல் அலுவலர் சாந்தி எந்த பதிலும் தராத காரணத்தால் கடந்த 24.04.2025 அன்று முதல் மேல் முறையீடு மனு செய்தார் ஜெயந்தன். ஊழலுக்கு துணையாக இருந்ததால் முதல் மேல் முறையீடு அலுவலரும் கள ஆய்வு செய்ய தேதி மற்றும் நேரம் ஒதுக்கி தரவில்லை. இதனால் கடந்த 13.06.2025 அன்று இரண்டாம் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஜெயந்தன் மனுவை பெற்றுக் கொண்ட தமிழ்நாடு தகவல் ஆணையம் வழக்காக பதிவு செய்தது. வழக்குப் பதிவு செய்த பின் பொது தகவல் அலுவலர் கடந்த 14.11.2025 அன்று ஆவணங்களை பார்வையிட மட்டும் அனுமதி அளித்தார். ஜெயந்தன் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவே துணை பொது தகவல் அலுவலருக்கு கடிதம் ஒன்றை அளித்து அதன் பின்னர் கடந்த 23.12.2025 அன்று பசுமாத்தூரில் கள ஆய்வு செய்து ஆவணங்களை பார்வையிட மட்டும் அனுமதி கொடுத்தார். இந்நிலையில் மீண்டும் ஜெயந்தன் என்பவர் ஆட்சேபனை தெரிவிக்கவே மீண்டும் கடிதம் ஒன்றை அளித்தார். அதில் கடந்த 23.12.2025 ல் கள ஆய்வு செய்யவும், ஆவண நகல்களை பெறவும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கள ஆய்வு செய்து ஜெயந்தன் என்பவர் தேவையான ஆவணங்களின் நகல்களை கேட்டுள்ளார். இதற்கிடையே ஆவணங்களை தருவதாகச் சொல்லிவிட்டு 6 மாதங்கள் முடிந்த பிறகும் இன்று வரை ஆவணங்களின் நகல்களை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பசுமாத்தூர் கிராமத்தில் நடைபெற்ற ஊழல்களை மறைக்கவே ஊராட்சி செயலாளர் சரவணன், தலைமையிடத்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர்/ பொது தகவல் அலுவலர் சாந்தி மற்றும் மேல் முறையீட்டு அலுவலர்/ வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன்பாபு ஆகியோர் இணைந்து தகவல்களை தர மறுக்கிறார்கள். ஊழல் நடைபெறாமல் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையுடன் அனைத்து துறைகளும் செயல்பட வேண்டும் என்பதற்காகவே தகவல் பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இவர்களை போன்ற அதிகாரிகள் ஊழல் செய்யும் ஆட்சியாளர்களுடன் இணைந்து ஊழல் செய்வது என்பது வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. தற்போது ஊழலை ஒழிக்க வந்துள்ள அரசின் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் இதில் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஜோசப் விஜய் தலைமையிலான அரசு இதுபோன்ற ஊழல் நடந்துள்ள ஊராட்சிகளில் கடுமையான நடவடிக்கை எடுத்த தவறு செய்பவர்களை தண்டித்தால் தான் இது மற்ற ஊராட்சிகளில் தவறு செய்யாமல் இருப்பதற்கும் தவறு செய்வதற்கு சற்று யோசிக்கும் நிலைக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் உள்ளிட்ட நபர்கள் வருவார்கள். ஆதலால் இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். பசுமத்தூரில் எடுக்கும் நடவடிக்கை அனைத்து ஊராட்சிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.