கொச்சி, ஜூலை 27:
தொழிற்சங்கங்களில் பெண்களின் தலைமைத்துவம், பிரதிநிதித்துவம் மற்றும் தாக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் “பெண் தொழிற்சங்கங்கள்: தலைமைத்துவம், பிரதிநிதித்துவம் மற்றும் தாக்கத்தை உருவாக்குதல்” என்ற தலைப்பில் இருநாள் பயிற்சிப் பட்டறை இன்று கேரள மாநிலம் கொச்சியில் தொடங்கியது.
இந்தப் பட்டறை ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கொச்சி காக்கநாட்டில் உள்ள நொவோட்டல் கொச்சி இன்போபார்க் வளாகத்தில் நடைபெறுகிறது. இன்று காலை 9.30 மணி முதல் நிகழ்வுகள் தொடங்கின.
இந்தப் பயிற்சியை சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் தொழிற்சங்கத் தலைமை நிர்வாகிகள் மற்றும் பெண் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
பெண் சமத்துவத்தை தொழிற்சங்க அமைப்புகளில் வலுப்படுத்துவது, பெண்களின் தீர்மான எடுக்கும் அதிகாரத்தை உயர்த்துவது மற்றும் தொழிலாளர் இயக்கங்களில் அவர்களின் பங்களிப்பை அதிகரிப்பது போன்ற அம்சங்கள் குறித்து இந்த நிகழ்வில் சிறப்பு அமர்வுகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு பிரதிநிதித்துவம்:
இந்த முக்கியப் பயிற்சி முகாமில், தமிழ்நாட்டில் இருந்து சி.ஐ.டி.யு (CITU) தொழிற்சங்கத்தின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் B. சத்யா பங்கேற்றுத் சங்கத்தின் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உள்ளார்.
இந்தப் பயிற்சிப் பட்டறை ஜூலை 28 மாலை 5 மணியளவில் நிறைவடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். நிகழ்வின் ஏற்பாடுகளை ‘ஒருங்கிணைந்த மாநாடு மற்றும் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம்’ மேற்கொண்டு வருகிறது. ILO நிர்வாகப் பிரிவு அதிகாரிகள் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புப் பணிகளைக் கவனித்து வருகின்றனர்















Leave a Reply