அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா கோலாகலம்!வேலூர், மே 30-வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி கடந்த காலத்தில் திமுக வசம் இருந்தது. இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வசம் இருந்த அணைக்கட்டு தொகுதி அதிமுக கைக்கு மாறியது. இதையடுத்து இந்த அலுவலகத்தின் மொத்த பொறுப்பும் அதிமுகவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் மு. க .ஸ்டாலினின் உருவப்படம் அகற்றப்பட்டது. இதையடுத்து அந்த அலுவலகத்தை தூய்மைப்படுத்தி மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர்களான எம் .ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அலுவலகத்தின் திறப்பு விழா 29.5.2026 வெள்ளிக்கிழமை அன்று நடந்தது. இந்த அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியின் அலுவலகத்தை வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் வேலழகன் தனது திருக்கரங்களால் திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். பொதுமக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்களது குறைகளை மனுக்களாகவோ அல்லது இந்த அலுவலகத்தில் பணியில் உள்ள ஊழியர்களிடமோ வழங்கி தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கேட்டு பெறலாம் என்று அப்போது அவர் தெரிவித்தார். பொதுமக்களுக்கு சேவை செய்வதே அதிமுகவின் தலையாய கடமையாகும். இதனையே எங்களது முன்னாள் தமிழக முதல்வர்கள் மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவரது வழியை பின்பற்றி தற்போது பொதுச்செயலாளராக அதிமுகவை நிர்வகித்து வரும் எடப்பாடி பழனிச்சாமி வழியில் குறைகளை பொதுமக்களுக்கு இல்லாமல் செய்வதே அதிமுகவின் தலையாய கடமை ஆகும். அதனையே இந்த அணைக்கட்டு தொகுதியில் நாங்கள் செய்து வருகிறோம் என்று பெருமிதத்துடன் அதிமுக எம்எல்ஏ வேலழகன் தெரிவித்தார். இந்த திறப்பு விழாவில் ரிப்பன் வெட்டியும் ,மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும் தனது பணியை முறைப்படி சட்டமன்ற அலுவலகத்தில் தொடங்கியுள்ளார் அதிமுக எம்எல்ஏ வேலழகன். எம் எல் ஏ வேலழகன் பணி சிறக்க அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி அலுவலகத் திறப்பு விழாவை முன்னிட்டு நடந்த இந்த எளிய விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. அத்துடன் தேநீர் விருந்தும் அளித்து உபசரிக்கப்பட்டது. பொதுமக்கள் இந்த அலுவலகத்தை பயன்படுத்தி தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அதிமுக எம்எல்ஏ வேலழகன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.