வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு வந்த பகிரங்க வெடிகுண்டு மிரட்டல்: ஆட்சியர் அலுவலகத்தில் தீவிர சோதனை!வேலூர்,ஏப்.29-வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆட்சியர் தங்கும் இல்லம் ஆகிய இரண்டு இடங்களில் ஆர் .டி. எக்ஸ்., பாம் வைத்துள்ளதாகவும் அது இன்று (ஏப்ரல் 28) வெடிக்கும் என மாவட்ட ஆட்சியரின் இ-மெயிலுக்கு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர் குழுவினர் ஆட்சியர் அறை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அறை மற்றும் ஆட்சியர் அலுவலகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அதேபோன்று ஆட்சியர் தங்கும் இல்ல பகுதிகளில் தீவிர வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. ஆனால் எங்கும் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து இந்த வெடிகுண்டு மிரட்டலை அனுப்பிய மர்ம நபர் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.