அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் குடியாத்தம் தனி தொகுதி வேட்பாளர் தபிதாள் வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப்.14-புரட்சித்தாய் சின்னம்மா வி.கே. சசிகலா ஆசியோடு, வேலூர் மாவட்டம், குடியாத்தம் தனி சட்டமன்ற தொகுதியில் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் தபிதாள் குடியாத்தம் நகரில் வீதி வீதியாகச் சென்று வாக்குகளை சேகரித்தார்.வாக்கு சேகரிப்பின் போது டீச்சர்ஸ் காலனி பகுதியில் கரும்பு ஜூஸ் தயாரித்து வாக்காளர்களுக்கு வழங்கி நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.டீச்சர்ஸ் காலனி, பாண்டியன் நகர், ஆர். எஸ். நகர், பலமனேர் சாலை, பிச்சனூர், சித்தூர் கேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தபிதாள் வாக்கு சேகரித்தார்.வேட்பாளருடன் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் அய்யா) நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசால் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு விரிவான அரசாணை வெளியிட தமிழக அரசை தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்!வேலூர், ஏப். 13-தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தி .கா.ரமேஷ் தலைமையில், மாநில கௌரவ தலைவர் சி. ராஜவேலு முன்னிலையில் நடந்தது. இந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் மாவட்ட கௌரவ தலைவர் தாண்டவமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், முனுசாமி, நந்தகுமார், ரவி, மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மதன்குமார் வரவேற்றார். பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மத்திய அரசு பணியாளர்களுக்கு 1.1.2026 முதல் 8வது ஊதியக்குழு அமைத்து அதன் பலன்களை பணியாளர்களுக்கு வழங்க உள்ளது. அதுபோல தமிழக அரசும் உடனடியாக 8வது நிதி குழு அமைத்து 1.1.2026 முதல் பணியாளர்களுக்கு பலன்களை வழங்க தமிழக அரசை இந்த செயற்குழு வேண்டுகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்கத்தால் பணி நிரந்தரம் செய்யப்பட்ட பேரூராட்சி பணியாளர்களுக்கு தற்போது பழைய ஓய்வூதியம் பற்றிய ஒரு அரசாணை ஒன்று வந்துள்ளது. ஆனால் அது அனைத்து பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க தமிழக அரசை இந்த செயற்குழு வேண்டிக் கேட்டுக் கொள்கிறது. அரசு தோட்டக்கலை துறையை விவசாயத்துறையுடன் இணைத்ததால் அவர்களுக்கு கூலி உயர்வு, பணி நிரந்தரம், ஓய்வூதிய பயன்கள் பெற முடியாத நிலையில் உள்ளனர். இது பற்றி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக அனைத்து பயன்களும் வழங்க வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது. தமிழக அரசால் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு விரிவான அரசாணை வெளியிட தமிழக அரசை இந்த செயற்குழு வேண்டுகிறது. 2006 ஆம் ஆண்டில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட பேரூராட்சி பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கும்போது அதே பேரூராட்சியில் 2006 ஆம் ஆண்டு முதல் பணி அமர்த்தப்பட்ட வரித்தண்டலர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களுக்கும் இந்த பழைய ஓய்வூதியம் அளிக்க இந்த செயற்குழு வேண்டுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களை நிரப்ப இந்த செயற்குழு வேண்டுகிறது. காலி பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியாக மாவட்டத் துணைத் தலைவர் ஜெயபால் நன்றி கூறினார். இதை தொடர்ந்து மாநில செயற்குழுவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை மதிய உணவு பரிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரயில் படியில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் தவறி விழுந்து பலி!வேலூர், ஏப். 12-சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (20) .இவர் சேலத்தில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். லோகேஷ் மற்றும் அவரது நண்பர் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த முகமது அலி (18) ஆகிய இருவரும் சென்னையைச் சுற்றிப் பார்ப்பதற்காக மங்களூர் விரைவு ரயிலில் சேலத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டனர்.முன்பக்க பொதுப்பெட்டியில் பயணம் செய்த இருவரும் ரயிலின் படிக்கட்டு ஓரமாக அமர்ந்து தூங்கியபடி பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் காலை ரயில் காட்பாடி மற்றும் சேவூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது எதிர் பாராதவிதமாக லோகேஷ் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்தார்.இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது நண்பர் முகமது அலி வாலாஜா ரயில் நிலையத்தில் இறங்கி இதுகுறித்து தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காட்பாடி ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.