சித்திரை மாத கிருத்திகையை முன்னிட்டு காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்கல்!வேலூர் ,ஏப்.20-வேலூர் மாவட்டம், காட்பாடி செங்குட்டை பகுதியில் திரௌபதி அம்மன் கோயில் எதிரில் சித்தூர்- கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாமியானா பந்தல் அமைத்து ஏப்ரல் மாத (சித்திரை) கிருத்திகையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானம் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இடைவிடாது ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. இந்த நன்னாளில் முருக பக்தர்களுக்கு வேலூர் செங்குட்டை தொழிலதிபர் அச்சுதன் -அமுதா தம்பதியர் அன்னதானம் வழங்கினர். இந்த அன்னதானத்தில் கேசரி மற்றும் மதிய உணவு தயிர் சாதம், ஊறுகாய் வழங்கப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் வரிசையில் நின்று இந்த அன்னதானத்தை பெற்று உண்டு மகிழ்ந்து தங்களது பசியாற்றி கொண்டனர்.இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அச்சுதன் தனது திருக்கரங்களால் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக முருகன் திருவுருவப் படத்துக்கு மலர்களால் அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. இதையடுத்து அன்னதானம் நடந்தது. இந்த அன்னதானத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அச்சுதன் -அமுதா தம்பதியருடன் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் விமரிசையாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் அச்சுதனுக்கு உதவியாக தெலுங்கானா நக்சலைட் தேடுதல் வேட்டை பிரிவு உதவி ஆய்வாளர் ரவி, தொழிலதிபர் நந்தகுமார் பேருதவி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அணைக்கட்டின் அரசன் வேலழகன்!வேலூர், ஏப். 20-அணைக்கட்டின் அரசனாக அதிமுக வேட்பாளர் வேலழகன் முடி சூடுவார் என்று மக்கள் கருதுகின்றனர்.வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மிக முக்கியமான கவனத்தைப் பெற்றுள்ளது.தற்போதைய எம்.எல்.ஏ: திமுகவின் ஏ.பி. நந்தகுமார் மீண்டும் போட்டியிடுகிறார்.இவர் கடந்த 5 ஆண்டுகளில் தான் செய்த வளர்ச்சித் திட்டங்களைக் கூறி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற அவர் முனைப்பு காட்டுகிறார்.அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளான பாஜக, பாமக மற்றும் அமமுக ஆகியவற்றுடன் இணைந்து பலமான கூட்டணியை அமைத்துள்ளது. இத்தொகுதியில் அதிமுகவிற்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதால், திமுகவிற்கு கடும் சவாலாக விளங்குகின்றனர்.அதிமுக சார்பில் டி. வேலழகன்,தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர். வேல்முருகன்,நாம் தமிழர் கட்சி சார்பில் எம். ரவிக்குமார், வி.எஸ். வெங்கடேஷ்,ஆர். சரவணன், புதிய தமிழகம் மற்றும் பல வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.பத்தாண்டுகள் எம்எல்ஏவாக இருந்த ஏ.பி.நந்தகுமார் விளம்பர அரசியலை செய்ததாகவும், சமூக ஊடகங்களில் மட்டுமே தன்னை முன்னிறுத்திக் கொண்டு பயணித்ததாகவும் கூறி மக்கள் குமுறுகின்றனர். ஒருமுறை வென்றால் மறுமுறை அரசியல் வாய்ப்பை இழப்பார் என்றும் இரு முறை வென்றாலும் தேர்தல் களத்திலே காணாமல் போய்விடுவார் என்றும் அணைக்கட்டு தொகுதிக்கு ஒரு ராசி உண்டு. இந்த ராசி எல்லாம் பொய்யாக்கி, ஏ. பி. என். இளஞ்சிங்கம், இளம்புயல் என்றெல்லாம் அடைமொழியோடு வலம் வரும் ஏ. பி. நந்தகுமார் மூன்றாவது முறையாக எம்எல்ஏ ஆகிய இடம் என்ற கனவோடு ‘வைட்டமின் ப’ இரைத்து விடுகிறார். இதையெல்லாம் அறிந்து கொண்ட வேல்அழகன் அதற்கேற்றவாறு தன்னை தயார்படுத்திக் கொண்டு ரித்திஷ், வெங்கடேஷ் என்ற ஐ. டி. ஐடி விங் நிர்வாகி தலைமையில் தனி அணியை அமைத்து ஏ.பி.என்னுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்.இதே நேரத்தில் வேலழகனும், தனது தந்தை தர்மலிங்கம் எம்எல்ஏ ஆகவும், மாவட்ட ஊராட்சி குழு தலைவராகவும் இருந்தபோது அணைக்கட்டு தொகுதிக்கு செய்த சாதனைகளை பட்டியலிட்டு பிரசாரம் செய்து வருகிறார்.அணைக்கட்டு ஒன்றியச் சேர்மனை தேசியக்கொடி ஏற்ற விடாமல் தானே எம்எல்ஏ நந்தகுமார் தானே ஏற்றி வருவதாக தமமுக தலைவர் ஜான் பாண்டியன் கடந்த சில மாதங்களுக்கு முன் வேலூர் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தது அணைக்கட்டு தொகுதி முழுவதும் ஏ.பி.நந்தகுமாருக்கு ஒரு எதிர்ப்பலையை வீசி உள்ளது.மூன்றாவது முறை வெற்றி பெற்றால் அமைச்சர் என்ற கனவோடு அதிமுக கொடுத்ததை விட இரு மடங்கு அதிகமாக அள்ளிக் கொடுத்தாலும் நடிப்பு அரசன் நந்தகுமாரின் நடிப்பை மக்கள் ஏற்க தயாராகவில்லை என்பது நிதர்சன உண்மை. திமுக கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுக வேட்பாளருக்கு பணி புரிந்து கொண்டுள்ளது ஒரு கட்சி.அணைக்கட்டின் அரசன் ஆகிறார் வேலழகன். அங்கு இந்த முறை போர்க்களத்தில் விழப் போகிறார் நந்தகுமார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆனால் உண்மை என்னவோ மே நாலாம் தேதி வரை காத்திருக்க வேண்டும் என்பதுதான் நிதர்சனம்.

வேலூரில் கோடைகால இலவச பயிற்சி முகாம் தொடக்கம்வேலூர் ,ஏப்.19 -தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான இலவச கோடைகால பயிற்சி முகாம் வேலூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடங்கியது. இதில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஹாக்கி ஆகிய ஐந்து விளையாட்டுகள் நடைபெறுகிறது. இப்பயிற்சி முகாமில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், மாணவர் அல்லாத 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பத்திரிகை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நேதாஜி ஸ்டேடியத்திற்கு நேரில் சென்று தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு பயிற்சி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்பூரின் வெற்றி நாயகன் வெங்கடேசன்; இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு!வேலூர், ஏப். 19-தோல் பதனிடும் தொழிலுக்குப் பெயர்பெற்ற திருப்பத்தூர் மாவட்டத்தின் முக்கிய சட்ட மன்ற தொகுதியான ஆம்பூரில் தேர்தலில் விறுவிறுப்பான அரசியல் களமாக மாறியுள்ளது. இந்த தொகுதியின் வெற்றி நாயகனாக பொறியாளர் வெங்கடேசன் வலம் வருகிறார்.தொழிலாளர்கள், கல்வியாளர்கள், விவசாயிகளின் அனைத்து தரப்பு மக்களும் பொறியாளர் வெங்கடேசனை ஆவலோடு வரவேற்கின்றனர்.ஆளும் திமுக தரப்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அ.செ. வில்வநாதன், மூன்றாவது முறையாக மீண்டும் களம் காண்கிறார். இருமுறை வென்றாலும் அவரது குடும்பத்தினருடைய ஆதிக்கம், உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு குடும்பத்தினருடைய தலையீடு, தொழிற்சாலைகளில் அவருடைய ஆதரவாளர்கள் செய்த தகராறுகள் போன்றவை அவருக்கு எதிராக மாற்றி உள்ளது. தோல் தொழிற்சாலைகளிடம் கட்டாய நன்கொடை வசூல் போன்றவற்றால் தொகுதியில் அவருக்கு எதிரான நிலை நிலவுகிறது.இன்ஜினியர், கல்வியாளர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதி, ஜாதி மத பேதம் இன்றி அனைத்து மக்களிடம் அன்போடு பழகும் எளிமையான மனிதர் அதிமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவான சூழல் நிலவுகிறது.ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் முன்னாள் திமுக செயலாளர் அகரம்சேரி சண்முகத்தின் மகன் மாதனூர் ஒன்றிய சேர்மன் ப. ச. சுரேஷ் குமார் திமுகவிலிருந்து விலகி, அதிமுகவுக்கு ஆதரவான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆம்பூர் இன்ஜினியர் வெங்கடேசனுக்கான நற்பெயரும், மாஜி அமைச்சர் கே.சி. வீரமணி தேர்தல் வேகமும், அகரம்சேரி சுரேஷ்குமார் களப்பணியும் ஆம்பூரில் வெற்றி நாயகனாக வெங்கடேசனை அழைத்துச் செல்கிறது.நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாகத் தேர்தல் களத்தைச் சந்திக்கும் வேளையில், இத்தொகுதியில் இம்தியாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் ஆதரவை இவர் பெரிதும் நம்பியுள்ளார்.நாம் தமிழர் கட்சி சார்பில் அஃப்சியா நஸ்ரின் .எஸ் போட்டியிடுகிறார்.பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் வஜீர் அகமது ஜே மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் கரீம் பாஷா போன்ற 16 வேட்பாளர்களும் களத்தில் இருப்பதால், சிறுபான்மையின வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.ஆம்பூர் நகர மன்ற உறுப்பினர், பள்ளி நிர்வாகி, திமுகவில் களப்பணி, 30 ஆண்டுகளாக சமூக சேவை என்று பல்வேறு தனித் திறன்களைக் கொண்ட வெங்கடேசன் தேர்தல் களத்தில் காலை முதல் இரவு வரை அயராத பணியாற்றுகிறார்.செல்லும் இடங்களை எல்லாம் உற்சாகப்படுத்துகிறார்.வேட்பாளர் வில்வநாதனுக்கு எதிரான மக்களின் மனநிலையை தனக்கு சாதகமாக இருப்பது வெங்கடேசனுக்கு பிளஸ் பாயிண்ட். இருமுறை எம்எல்ஏவாக இருந்த வில்வநாதன் கடந்த கடைசி மூன்று ஆண்டுகளில் மக்களிடையே கடுமையான வெறுப்பை சம்பாதித்து உள்ளார் .மாதனூர் ஊராட்சி ஒன்றியம் ஆம்பூர் நகராட்சி என உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் அவரது உறவினர்களை வைத்து ஆதிக்கம் செலுத்தியதால் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.தொழிற்சாலைகளுக்குள் அவருடைய ஆதரவாளர்கள் புகுந்து ரகளை செய்தது, மதிமுகவில் பல ஆண்டுகள் பயணித்து திமுகவுக்கு வந்தவர் உண்மையான திமுக விசுவாசிகளை ஓரங்கட்டியது, ஜாதி அரசியலில் ஈடுபட்டது, மத ரீதியான பாகுபாடுகள் வில்வ நாதனுக்கு எதிரான மனநிலையை திருப்தி உள்ளது.என்னதான் திமுக அரசு திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல நல்ல பெயரை பெற்றிருந்தாலும், வில்வநாதன், அவருடைய உறவினர்களின் கெடுபடியால் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவான சூழ்நிலை திரும்புகிறது.தொகுதியில் பெரும்பாலான மக்கள் வசிக்கும் இஸ்லாமியர்களும் முதலியார் சமூகத்தினரும் உள்ள நிலையில், அவர்களுக்கு கட்சியிலையோ, ஆட்சியிலையோ முக்கிய பொறுப்புகள் வழங்காமல் தான் சார்ந்த சமூகத்தினருக்கு பொறுப்புகள் வழங்கிய வில்வநாதனுக்கு பதிலடி கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர்.ஆம்பூருக்கு வில்லனாகி விட்டார் வில்வநாதன். ஹீரோ ஆகிவிட்டார் வெங்கடேசன்.தோல் தொழிற்சாலைகளின் டாலர் ஏரியா மக்களும், தொழிற்சாலை உரிமையாளர்களின், விவசாயிகளின் பாமர மக்களின் ஆதரவு பெற்ற வெங்கடேசன் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்வது உறுதி என்கின்றனர் மக்கள்.

காட்பாடி தொகுதியில் காரில் இருந்து இறங்கி வந்து துரைமுருகன் வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பு!வேலூர்,ஏப்.18-காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்நிலையில் காட்பாடி வடக்கு ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் துரைமுருகன். அப்போது கீரை சாத்து, மிளகாய்க்குப்பம் , தீயார் குப்பம் ஆகிய பகுதிகளில் தனது காரில் இருந்து இறங்கி வீடு வீடாகச் சென்று தனக்கு ஆதரவு தருமாறு வாக்காளர்களை கேட்டு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்தார். இப்படி வீடு வீடாகச் சென்று ஆதரவு திரட்டிய துரைமுருகனை பார்த்து வாக்காளர்கள் இது புதியதாக உள்ளது என்று முனுமுனுக்கத் தொடங்கினர். குறிப்பாக திமுக அரசின் திராவிட மாடல் சாதனைகளை துரைமுருகன் விளக்கிப் பேசினார். மேலும் கட்சியின் புதிய தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்தில் தனக்கு வாக்களிக்குமாறு அவர் பிரச்சாரம் செய்தார் .காரில் இருந்து இறங்காமல் வாக்கு சேகரித்து வந்த துரைமுருகன் இம்முறை காரில் இருந்து இறங்கி வந்து வீடு வீடாக நடந்து சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டது புதுமையாக உள்ளது என்று காட்பாடி வடக்கு ஒன்றிய வாக்காளர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கே. வி. குப்பம் தனி தொகுதி புரட்சி பாரதம் வேட்பாளர் ஜெகன் மூர்த்தியை ஆதரித்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம்!வேலூர், ஏப்.18-வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் குடியாத்தம் மற்றும் கே. வி .குப்பம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் தனித் தொகுதிகளாகும். இந்நிலையில் வரும் 23ஆம் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கே. வி. குப்பம் தனி தொகுதியில் புரட்சி பாரதம் கட்சியின் வேட்பாளர் ஜெகன் மூர்த்தியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வருகை தந்தார். அவர் வருகை தந்த தகவல் அறிந்து வேலூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் வேலழகன், காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான ராமு ஆகியோர் கே. வி. குப்பத்துக்கு விரைந்து சென்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸை சந்தித்து ஆசி பெற்றனர். இதையடுத்து இருவரும் தங்களது தொகுதிகளான அணைக்கட்டு (வேலழகன்) காட்பாடி (ராமு) ஆகியோர் அவர்களது சொந்த தொகுதிகளுக்கு திரும்பி வந்து தொடர் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டனர். இந்த சந்திப்பின்போது அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.