தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்த நபரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்– பெரும் விபத்து தவிர்ப்பு!வேலூர், ஜூன் 12-காட்பாடி அருகே தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருந்த நபரை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) போலீசார் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றியதால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.நேற்று (11.06.2026) அதிகாலை சுமார் 2.40 மணியளவில், லத்தேரியில் Track Packing Machine பணியை முடித்துவிட்டு திரும்பிய SSE/P.Way விஜய் குமார், கி.மீ. 130/27 பகுதியில் கீழ்பாதை தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருப்பதைக் கண்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். முதலில் கி.மீ. 137 என தகவல் கிடைத்த நிலையில், ASI/RPF காட்பாடி பி. ஆர். முரளி சம்பவ இடத்தை உறுதி செய்து உடனடியாக RRI கேபினை தொடர்புகொண்டு, ஜோலார்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் எண் 13351 தன்பாத்–ஆலப்புழா எக்ஸ்பிரஸை நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.பின்னர் ASI பி. ஆர். முரளி மற்றும் தலைமைக் காவலர் எம். சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்டவாளத்தின் மீது தலை வைத்து படுத்திருந்த நபரை பாதுகாப்பாக அகற்றி அவரது உயிரைக் காப்பாற்றினர். அதன் பிறகு ரயில் தனது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டது.மீட்கப்பட்ட நபர் பி. ராமச்சந்திரன் (46), வேலூரைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவருக்கு ஆரம்பகட்ட மருத்துவ உதவி மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டதுடன், மேல்கட்ட நடவடிக்கையாக மனநல பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் காட்பாடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply