செய்யாறு வட்ட வழங்கல் அலுவலர்களின் ‘அலட்சியம்”140 ரேஷன் கார்டுகள்’ 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடைக்கு மாற்றம் !செய்யாறு, ஜூன் 9 -செய்யாறில் வழக்கத்தில் இருந்த 140 ரேஷன் கார்டுகள் திடீரென 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வேறு ஒரு ரேஷன் கடைக்கு மாற்றப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். செய்யாறு வட்ட வழங்கல் அலுவலரே இதற்கு காரணம் என, பாதிக்கப்பட்ட அறிஞர் அண்ணா நகர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் 10வது வார்டில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா நகர், ( கொடநகர் காலனி ), திருவள்ளுவர் நகர், திருவள்ளுவர் நகர் விரிவாக்க பகுதி, சமாதியான் குளத்தெரு. இங்கு ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள், கடந்த 5 ஆண்டுகளாக அண்ணா நகரில் உள்ள ரேஷன் கடையில்தான் பொருட்களை வாங்கி வருகின்றனர். இது இவர்களுக்கு சுலபமாக இருந்து வந்தது.இந்நிலையில் இங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செய்யாறு மார்க்கெட் பகுதியில் புதியதாக 8ம் நெம்பர் ரேஷன் கடை திறக்கப்பட்டது. பழனி தெரு, முனுசாமி தெரு, பாவாடை மூர்த்தி கோயில் தெரு, கண்ணுகாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களின் ரேஷன் கார்டுகள் மேற்கண்ட புதிய கடைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. ஆனால், இந்த புதிய கடையில் ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அறிஞர் அண்ணா நகர், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 140 ரேஷன் கார்டுகளை ‘சத்தம் இல்லாமல்’ மார்க்கெட் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு மாற்றி உள்ளனர் வட்ட வழங்கல் அதிகாரி மற்றும் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் மற்ற ஊழியர்களும் என்று சொன்னால் அது மிகையாகாது.இத்தகவல் அறிந்த மேற்கண்ட பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். இதுகுறித்து, அறிஞர் அண்ணா நகர் பகுதி மக்கள் கூறியதாவது; ‘எங்கள் பகுதியில் 300 ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த ‘கொரோனா’ காலத்திற்கு முன்பு நாங்கள் பஜாரில் உள்ள ரேஷன் கடையில் தான் பொருட்களை வாங்கச் செல்லுவோம். இது எங்களுக்கு சிரமத்தை கொடுத்து வந்தது. எங்கள் பகுதியிலேயே ரேஷன் கடையை அமைக்க வேண்டும் என, போராடி இந்த ரேஷன் கடையை அண்ணா நகர் பகுதிக்கு கொண்டு வந்தோம். எங்கள் பகுதியில் உள்ள 140 ரேஷன் கார்டுகளை 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செய்யாறு மார்க்கெட் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது எந்த விதத்தில் நியாயம். செய்யாறு வட்ட வழங்கல் அதிகாரியின் அலட்சியத்தாலே இது போன்ற தவறு நடந்துள்ளது.எனவே, இந்த 140 ரேஷன் கார்டுகளை மீண்டும் அறிஞர் அண்ணா நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் மாற்றி கொடுக்க அதிகாரிகள் உடனே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்;’ இவ்வாறு அறிஞர் அண்ணா நகர் பகுதி மக்கள் ஒற்றை கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.