
காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திருட்டு சம்பவம் நடந்ததால் சாலையோர தள்ளுவண்டிக்காரர்களை கடை வைக்க விடாமல் விரட்டியடித்த போலீசார்!வேலூர், ஜூன் 1-வேலூர் மாவட்டம், காட்பாடியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சித்தூர் -கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த வாரம் பூட்டை உடைத்து பள்ளியில் இருந்த 28 லேப்டாப்கள் மற்றும் ரூபாய் 25 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை யாரோ மர்ம ஆசாமிகள் திருடிக் கொண்டு சென்று விட்டனர். செல்லும் போது அந்த அறையில் இருந்த பூட்டை உடைத்ததற்கு பதிலாக மாற்று பூட்டு போட்டுவிட்டுச் சென்றுவிட்ட நூதன சம்பவம் அரங்கேறியுள்ளது. அத்துடன் பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராக்களின் ஹார்ட் டிஸ்கையும் அவர்கள் கைப்பற்றிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளியில் திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க காட்பாடி சித்தூர்- கடலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் தள்ளு வண்டிகளில் கடை வைத்துள்ளவர்களை அழைத்து இனிமேல் யாரும் இங்கு கடை நடத்த கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர் காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன், நிலைய எழுத்தர் வினோத். இதுநாள் வரை உழைத்து பிழைப்பு நடத்தி வந்த தள்ளுவண்டிக்காரர்களை விரட்டி அடித்துள்ளனர் போலீசார். இங்கு கடைகளை வைத்துள்ளவர்கள் 40 ஆண்டுகள், 30 ஆண்டுகள், 20 ஆண்டுகள் என இதை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். பள்ளியில் நடந்த திருட்டுக்கும் தள்ளு வண்டிகளில் வியாபாரம் செய்வோருக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் உள்ளது. கடைகளை அடைக்குமாறு போலீசார் வியாபாரிகளை தொந்தரவு செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பள்ளியில் நடந்த திருட்டுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது சிதம்பர ரகசியமாக உள்ளது. தள்ளுவண்டிக்காரர்களை அப்புறப்படுத்திய காவல் துறை கடைகளை காலி செய்யுமா?. தள்ளுவண்டிக்காரர்களை காவல் துறை ஏளனமாக பார்க்கிறதா என்ற கேள்வி எழுகிறது அனைவரது உள்ளங்களிலும் என்று சொன்னால் அது மிகையாகாது. பாவம் ஒரு இடம் பழி ஒரு இடம் என்ற ரீதியில் இந்த திருட்டு வழக்கு சென்று கொண்டுள்ளது. உழைத்து பிழைப்பு நடத்தி வருகிறவர்களை தொந்தரவு செய்கிறபடியினால் குற்றம் பெருகவே வாய்ப்பு அதிகம் உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் இந்த பிரச்சனையை உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களின் வாழ்வாதார த்தை காக்க காவல் துறை ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் வியாபாரிகள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளனர். இனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.










Leave a Reply