பேரணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1361 மது பாட்டில்கள் பறிமுதல்!வேலூர்,ஏப்.18-வேலூர் மாவட்டம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மூன்று நாட்கள் அரசு மதுபான கடைகளான டாஸ்மாக் கடைகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பேரணாம்பட்டு அருகே மத்தூர் பகுதியில் அரசு மதுபான பாட்டில்களை அதிகளவில் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக ரகசிய தகவல்கள் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மத்தூர் பகுதியில் வேளாங்கண்ணி என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1361 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள வேளாங்கண்ணி, குபேந்திரன், யசோதா ஆகிய மூன்று பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1361 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.