வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு குறை தீர்வு மனு நாள்!வேலூர், ஜூலை 10-வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.U. சிவராமன் உத்தரவின் பேரில், 08.07.2026-ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனி (தலைமையிடம்), உதவி காவல் கண்காணிப்பாளர் B.S.தனுஷ் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பொதுமக்கள் குறை தீர்வு மனு நாளில் 45 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கிராம நிர்வாக அலுவலர்கள் 10 பேர் மட்டுமே கலந்து கொண்ட பணியிட மாற்றத்திற்கான நேர்காணல்!வேலூர், ஜூலை 9-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாற்றம் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் நேர்காணல் நடத்தினார். இந்த நேர்காணல் காட்பாடி வட்டத்தில் ஜமாபந்தி முடிந்தவுடன் நடந்தது. ஆனால் இந்த நேர்காணலில் கிராம நிர்வாக அலுவலர்கள் பெரும்பாலும் யாரும் கலந்து கொள்ளவில்லை. கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் அன்பரசன், விநாயகம், இளங்கோவன், சரவணன், வெங்கடேசன் உள்ளிட்ட 10 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். சங்கத்தின் நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டிய இடங்களை தேர்வு செய்து கொள்கின்றனர். குறிப்பாக அவர்கள் தேர்வு செய்த இடங்கள் போக மீதமுள்ள இடங்களில் மற்றவர்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டிய அவலநிலை தொடர்ந்து நிலவுகிறது. இப்படி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு இதற்கு முன்பு காட்பாடி வட்டாட்சியராக இருந்த ஜெகதீஸ்வரன்(எ)ஜெகன் கேட்பதையெல்லாம் செய்து கொடுத்து அவர்களை தவறான பாதையில் அழைத்து சென்றார். அத்துடன் இதேநிலை தற்போதும் தொடர ஆரம்பித்துள்ளது. ஜெகன் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகும் காட்பாடி வட்டாட்சியர் மகேஸ்வரி பணியிலும் குறுக்கீடு செய்த வண்ணம் உள்ளார் என்ற தகவல் காட்டுத்தீ போல வருவாய் துறையில் பரவி வருகிறது. ஜெகன் வெளியில் சென்ற பிறகும் காட்பாடி வட்டத்தில் தனிக்கவனம் செலுத்தி ஆணையிட்டு வருகிறார் என்றே சொல்லலாம். கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடமாற்றத்திலும் இன்றுவரை அதேநிலை தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் சங்க நிர்வாகிகள் தொடர்ந்து மூக்கை நுழைத்து கொள்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக தாராபடவேடு, பழைய காட்பாடி, கழிஞ்சூர், காங்கேயநல்லூர், சேனூர், வஞ்சூர், கரசமங்கலம், வண்டறந்தாங்கல், பிரம்மபுரம், சேவூர் ஆகிய கிராமங்கள் அடங்கும். இந்த இடங்களில் மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் 3 முறை, 4 முறை என்று இங்கு பணியாற்றியவர்களே மீண்டும் அதே இடங்களை குறிவைத்து மற்ற யாருக்கும் இந்த இடங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்து தட்டிப்பறிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். காட்பாடி வட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்களை கலந்து பணியமர்த்த ஈரோட்டில் இருந்து வேலூர் கோட்டாட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள நபர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சக கிராம நிர்வாக அலுவலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். சங்கத்தை தூக்கி குப்பையில் வீசிவிட்டு முறையாக பணியிடமாற்றம் வழங்க கோட்டாட்சியர் முன்வர வேண்டும். இந்த ஆண்டு முறைகேடு ஏதும் நடைபெறாமல் தகுதி வாய்ந்த விஏஓக்களை பணியமர்த்த வேண்டூம் கோட்டாட்சியர். சங்கத்தின் கொட்டத்தை அடக்க வேண்டும் கோட்டாட்சியர். குறிப்பாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் புதிய நபர்களை நியமனம் செய்யப்பட வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். கோட்டாட்சியர் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

‘மாறுவோம் மாற்றுவோம்’அண்ணாமல தொடங்கிய புதுக் கட்சிக்கு செய்யாறில் வரவேற்பு !செய்யாறு, ஜூலை 9 -அண்ணாமலை தொடங்கிய புதுக் கட்சிக்கு, செய்யாறில் புது தொண்டர்கள் உற்சாகத்துடன் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட இவர், தனது உயர்பதியை உதறிவிட்டு, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இவருக்கு மாநில தலைவர் பதவியும் வழங்கி அக்கட்சி அழகு பார்த்தது. தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய மூத்த கட்சிகளை ஆடவிட்டவர்.பொறுப்பு வகித்த இவரது கட்சியிலேயே இவருக்கு எதிராக பொறாமை வெடித்தது. இதையும் மீறி அண்ணாமலை தனது பணிகளை தொடர்ந்து ஆற்றி வந்தார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தல் இவருக்கு வேட்பாளருக்கான ‘டிக்கெட்டை’ கொடுக்க கட்சி மேலிடம் மறுத்துவிட்டது. இதனால், விரக்தி அடைந்த அண்ணாமலை பா.ஜ.க., கட்சியிலிருந்து முழுமையாக விலகி விட்டார். இதற்கான கடிதத்தையும் டெல்லியில் வழங்கினார். இந்த கையோடு அண்ணாமலை கடந்த மாதம் தமிழகத்தில் புது கட்சியை ஒன்றை துவக்கினார்.கட்சி துவங்கிய அதே நாளில், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள், படித்தவர்கள், இளம் பெண்கள் இணைய தல மூலமாக உறுப்பினர்களாக சேர்ந்தனர். செய்யாறில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அண்ணாமலை கட்சியில் இணைந்துள்ளனர். செய்யாறு வெங்கட்ராயன் சேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், இங்குள்ள புதிய உறுப்பினர்களை வழி நடத்தி வருகிறார். அண்ணாமலையின் புதிய கட்சியை குறித்து, பொது மக்கள், வியாபாரிகள், இளைஞர்கள், இளம் பெண்களிடம் ‘மாறுவோம் மாற்றுவோம்’ – ‘போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்’ என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அண்ணாமலையின் புதிய கட்சிக்கென, செய்யாறில் அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.

காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேர்காணல் முடிந்தும் பணியிட மாற்ற உத்தரவு கிடைக்காமல் கடும் அவதி!வேலூர், ஜூலை 8-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு பெற்ற நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுக்கு வேறு பணியிடங்கள் வழங்கக் கோரி விண்ணப்பம் செய்தனர். இப்படி விண்ணப்பம் செய்த அவர்களை வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் நேர்காணல் செய்தார். நேர்காணல் முடிந்த நிலையில் இதுநாள் வரை அதற்கான உத்தரவுகள் வழங்கப்படாமல் கிடப்பிலே உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் பணி நியமனம் செய்யப்படும் இடங்களில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்க வேண்டும். அவர்களுக்குதான் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய உத்தரவு வழங்கப்படும். ஆனால் காட்பாடி வட்டத்தில் ஓராண்டு, 6 மாதங்கள், 2 ஆண்டுகள் என்று குறுகிய காலத்தில் பணி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் வேண்டி கிராம நிர்வாக அலுவலர்கள் விண்ணப்பம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் அவர் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவு வழங்க வேண்டும் என்று கோட்டாட்சியரிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் மனு செய்துவிட்டு காத்துக் கொண்டுள்ளனர். குறிப்பாக நேர்காணல் முடிந்தும் மாற்றுப் பணி வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் அதுதான் உண்மை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் காட்பாடி வட்டத்தில் தாராபடவேடு, கழிஞ்சூர், பழைய காட்பாடி, காங்கேயநல்லூர் ஆகிய இடங்களுக்கு கடுமையான போட்டி கிராம நிர்வாக அலுவலர்களிடையே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு சாரரே திரும்பத் திரும்ப தாராபடவேடு, கழிஞ்சூர், பழைய காட்பாடி, காங்கேயநல்லூர் ஆகிய இடங்களில் மீண்டும் மீண்டும் அதாவது நான்கு முறை, மூன்று முறை என்று பணியாற்றுகின்றனரே தவிர புதிய நபர்கள் யாரையும் அங்கு பணியாற்ற விடுவதில்லை என்ற ஒரு பேச்சும் அடிபடுகிறது. ஆக மொத்தத்தில் இந்த மேற்கண்ட பகுதிகளில் பணியாற்றிய நபர்களை மீண்டும் பணியாற்ற வாய்ப்பு வழங்கக் கூடாது என்று சக கிராம நிர்வாக அலுவலர்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இதில் சங்கங்களும் தங்களது தலையீட்டை பயன்படுத்தி பணியிட மாற்றம் பெற்று விட துடியாய் துடிப்பதும் குறிப்பிடத்தக்கது. வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் இந்த பணியிட மாற்றம் வழங்குவதில் யார் ?யார்? இதற்கு முன்னர் இந்த குறிப்பிட்ட பகுதிகளில் பணியாற்றி விட்டு மீண்டும் அதே இடத்தை குறி வைத்து தனக்கு பணி வழங்க கேட்கின்றனர் என்பதை பார்த்துவிட்டு அவர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும் என்று சக கிராம நிர்வாக அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். நியாயமான பணியிட மாற்றம் வழங்க வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் முன்வர வேண்டும். இந்த விஷயத்தில் யாரும் விமர்சனம் செய்யும் வகையில் நடந்து கொள்ள கூடாது என்று எதிர்பார்க்கின்றனர். இதனை வேலூர் மாவட்ட ஆட்சியராக வந்துள்ள லீலா அலெக்ஸ் மேற்பார்வையிட்டு இதில் வேறு எவ்வித குளறுபடிகளும், பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் பணியிட மாற்றம் வழங்க வேண்டும் என்று சில கிராம நிர்வாக அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது .ஆக மொத்தத்தில் மாவட்ட நிர்வாகம் காட்பாடி வட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களை வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்து நியமிப்பதில் முறையான நடவடிக்கையை எடுக்கிறதா? அல்லது வழக்கம் போல் முறைகேடான பணிகளை தொடர்ந்து செய்யுமா ?என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!வேலூர், ஜூலை 8-வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பி. எஸ். லீலா அலெக்ஸ் திடீரென ஆய்வு மேற்கொண்டார் .இந்த ஆய்வின்போது பிளாட்பாரத்தை அடைத்துக் கொண்டு கடை வைத்திருந்ததை கண்டறிந்து அந்த கடைகளை உடனடியாக அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அதேபோன்று வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்படும் இலவச கழிவறை மற்றும் கட்டணக் கழிவறைகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் பொதுமக்களை சந்தித்து தங்களுக்கு இந்த பேருந்து நிலையத்தில் உள்ள குறைபாடுகள், அசௌகரியங்கள் ஏதாவது உள்ளதா? என்றும் கேட்டு அறிந்து கொண்டார். மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆய்வின்போது வேலூர் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் கண்ணன், வேலூர் வட்டாட்சியர் பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.