பட்டப்பகலில் செம்பராயநல்லூர் ஏரியில் மொரம்பு மண் கடத்தல்!வேலூர், ஜூலை 22-வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சமத்துவபுரம் எதிரில் உள்ள செம்பராயநல்லூர் ஏரியில் கடந்த 16.7,2026 அன்று மொரம்பு மண் பட்டப் பகலில் மண் மாஃபியாக்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். இதுதொடர்பாக திருவலம் வருவாய் ஆய்வாளர் ராம்குமாரிடம் கேட்ட போது நானும் தாசில்தாரும் நேரில் சென்று ஆய்வு செய்தோம் என்று கூறினார். அதன் பிறகு தொலைபேசி வாயிலாக கேட்டபோது எங்களுக்கு சரியாக தெரியவில்லை என்றும், நாங்கள் நேரில் சென்று பார்க்கின்றோம் என்றும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுகிறார். இதில் எது உண்மை என்று தெரியவில்லை. இதை சம்பந்தப்பட்ட கனிம வள அலுவலர்கள் இந்த பகுதியில் நேரில் சென்று கள ஆய்வு செய்ய வேண்டும். அப்போது உண்மை வெட்ட வெளிச்சத்துக்கு வரும். இந்த மண் மாஃபியாக்கள் பின்புலமாக இருப்பது யார்? யார்?. இங்கு எடுக்கும் மொரம்பு மண் யாருக்கு சப்ளை செய்யப்படுகிறது என்ற விவரம் கிடைக்கவில்லை. யார் யாருக்கு இதில் பங்கு போகிறது என்று தெரியவில்லை. திரை மறைவில் என்ன நடக்கின்றது என்று புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை வெளிக்கொண்டு வரவேண்டும். அப்போது தவறு செய்தவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும். இந்த மண் கடத்தலுக்கு துணை போன கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் திடீர் போர்க் கொடி தூக்கியுள்ள னர். தமிழ்நாடு அரசு மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.