செய்யாறில் விடுதலை போராட்ட மாமன்னர் அழகு முத்துக்கோனின்குரு பூஜை விழா கோலாகலம்:அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்பு !செய்யாறு, ஜூலை 15 -தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட ‘மாமன்னர் அழகுமுத்துக்கோனின்’ 269வது பிறந்தநாளையொட்டி, செய்யாறில் குருபூஜை விழா கோலாகலமாக நடந்தது. அரசியல் கட்சியினர், அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு மாமன்னரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.தமிழகத்தைச் சேர்ந்தவர் மாமன்னர் அழகு முத்துக்கோன். இவர் கடந்த ‘200 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னோடி மாமன்னராகத் திகழ்ந்தவர்.இவரது 269வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப் பட்டு வருகிறது. செய்யாறு யாதவர் சங்கத் தலைவர் சுரேஷ், செயலாளர் ராஜா ஆகியோர் விழாவுக்கு தலைமை தாங்கி, மாமன்னர் அழகு முத்துக்கோனுக்கு இங்குள்ள இந்திரா காந்தி சிலை அருகே 269வது குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.இங்கு நிறுவப்பட்டிருந்த மாமன்னரின் திருவுருவப் படத்திற்கு, அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள், பொறுப்பாளர்கள் பேரணியாக வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.முன்னதாக யாதவர் சங்க பொருளாளர் அஜித்குமார், ஒருங்கிணைப்பாளர்களான கோபால், சுதாகர் ஆகியோர் அனைத்து தரப்பு மக்களையும் வரவேற்றனர். விழாவில் செய்யாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் கடந்த ஆண்டு அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றுகள், பண முடிப்பு ஆகியவற்றை விழாக் குழு சார்பில் கௌரவித்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.