விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஹாரன், சைலன்சர் பொருத்திய வாகனங்கள் மீது காட்பாடி போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப் பதிவு, அபராதம் விதிப்பு !வேலூர், ஜூலை 10-வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள், மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர் (சைலன்சர் அதிகமாக ஒலி எழுப்பும் ஒலி பெருக்கி ) பொருத்திய இருசக்கர வாகனங்கள் மற்றும் விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட பிற வாகனங்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனால் சாலைகளில் விபத்து அபாயம் அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கும் கடும் இடையூறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, காட்பாடி போக்குவரத்து பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற சிறப்பு வாகனத் தணிக்கையில், விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்தி இயக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கண்டறியப்பட்ட வாகன ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது. காட்பாடி போக்குவரத்து பிரிவு போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஆட்டோக்களில் வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பல ஆட்டோக்கள் இயங்கும் அசாதாரண நிலை உள்ளது. நகரில் இயக்கப்படும் பல ஆட்டோக்கள் போலீசாரின் ஆட்டோக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஆட்டோக்களின் பக்கம் போலீசார் செல்வதே கிடையாது. குறிப்பாக ஆட்டோக்களில் தான் போதைப் பொருள்கள் கடத்தவும், விபச்சார அழகிகள் அதிக அளவில் பயணிப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் ஆட்டோக்களை போக்குவரத்து பிரிவு போலீசார், சட்டம்-ஒழுங்கு பிரிவு காவல் துறையினரோ மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களோ, வட்டார போக்குவரத்து அலுவலர் கண்டு கொள்வதே இல்லை. ஒரே பதிவு எண்ணில் 10க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வேலூர் மாநகரில் இயக்கப்படுகின்றன. அதுதான் ஒரு புறம் என்றால் வேலூரில் இருந்து இயக்கப்படும் உள்ளூர் ஆட்டோக்கள் 10 என்றால், வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வேலூர் நகருக்குள் தைரியமாக எவ்வித உரிமமும் இன்றி இயக்கப்படும் ஆட்டோக்கள் 100% என்று சொல்லலாம் . ஆந்திர பதிவு எண் கொண்ட ஆட்டோக்கள் தைரியமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு தங்க கோயில் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஹாயாக சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதை தடுத்து நிறுத்த வேண்டிய போக்குவரத்து பிரிவு போலீசார் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்டோக்களை எங்காவது நிறுத்தி சோதனை செய்வதே கிடையாது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சித்தூர் ,திருப்பதி போன்ற ஆந்திர மாநில ஆட்டோக்கள் தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், திருப்பத்தூர் ,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வேலூரில் வந்து ஏதோ ஒரு பதிவு எண்ணை தங்களது ஆட்டோக்களில் பொருத்திக் கொண்டு இங்கே ஆட்டோக்களை பலர் இயக்கி வருகின்றனர். ரயில் நிலையத்தை எடுத்துக் கொண்டால் காட்பாடியில் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளை நச்சரித்து அவர்களை தங்களது ஆட்டோக்களில் ஏற்றாமல் விட மறுக்கின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள். அத்துடன் இத்தனை கிலோ மீட்டர் இவ்வளவுதான் தொகை வசூலிக்க வேண்டும், கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை மறந்து தங்களது வாயில் என்ன வருகிறதோ அந்த தொகையை சொல்லி கறாராக வசூல் செய்து வருகின்றனர் சில ஆட்டோ ஓட்டுநர்கள். வேலூர் செல்வதற்கு ரூபாய் 300, ரூ. 400 என்று கறந்து விடுகின்றனர். இதே போன்று காட்பாடியில் உள்ள விஐடி மாணவர்களை அழைத்துச் செல்ல ரூபாய் 200, ரூ. 300 வசூல் செய்கின்றனர். இப்படி அடாவடி வசூலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள். இது ஒரு புறம் என்றால் காட்பாடி விஐடி பல்கலைக்கழகம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களால் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளன. அங்குள்ள ஆட்டோக்களில் போதைப் பொருள்கள் நடமாட்டம் இருப்பதாக ஒரு ரகசிய தகவல் வெளிவந்து உலா வந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒரு புறம் என்றால் வேலூர் பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து இயக்கப்படும் ஆட்டோக்கள் அடாவடியாக பயணிகள் எந்த ஆட்டோவில் ஏறினாலும் நாங்கள் வரிசையில் நிறுத்தி வைத்திருக்கின்றோம், முதலில் நிற்கும் ஆட்டோவில் தான் நீங்கள் ஏற வேண்டும். உங்களுக்கு விருப்பமான ஆட்டோகளில் ஏறுவதெல்லாம் கிடையாது என்று அருவெறுக்கத்தக்க ஆபாச வார்த்தைகளை சொல்லி ஆட்டோ க்களில் ஏறும் பயணிகளை திட்டுகின்றனர் ஆட்டோ ஓட்டுநர்கள். இது ஒரு புறம் நடந்து கொண்டுள்ளது. இதையும் மீறி திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் என்று கட்சி வாரியாக புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்தங்களை பிரித்து வைத்துக் கொண்டு அதிலும் ஒருபுறம் அட்டகாசம் நடப்பதாக பயணிகள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. இவை எல்லாம் ஒரு அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது. இதை தட்டி கேட்கவோ, தடுக்கவோ யாரும் முன்வரவில்லை. இதுபோன்ற பிரச்சனைகளை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் காவல்துறையினரிடமோ அல்லது போக்குவரத்து பிரிவு போலீசாரிடமோ சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இந்த விஷயங்கள் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்வதே கிடையாது தனிப்பிரிவு போலீசார். நன்கு குறட்டை விட்டு தூங்குகின்றனர் என்றே சொல்லலாம். சொல்ல வேண்டியதை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் காதுகளுக்கு கொண்டு செல்வதில்லை. தேவையற்ற ஒன்றுக்கும் உதவாத காரணங்களை மட்டுமே சொல்கின்றனர் என்றும் ஒருபுறம் தகவல் கசிந்து வந்துள்ளது. ஆக மொத்தத்தில் தனிப்பிரிவு போலீசாரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூண்டோடு மாற்றி விட்டு வேறு புதிய நபர்களை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை பொதுமக்களிடையேயும், சமூக ஆர்வலர்கள் இடையேயும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் இணைந்து குறிப்பாக ஆட்டோக்களை தினந்தோறும் குறைந்தது ஒரு பத்து நாட்களாவது இங்கு சோதனை செய்தால் பல ஆட்டோக்கள் வேலூர் மாநகரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், ஆந்திர மாநிலத்துக்கும் வந்த வழி தெரியாமல் ஓடிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் சோதனை போதாது. தேவையற்ற ஆட்டோக்கள் வேலூர் மாநகரில் இயங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை, ஆட்டோக்களுக்கும் உரிமை இல்லை. அத்துடன் அவர்கள் வைத்துக் கொள்ள வேண்டிய இன்சூரன்ஸ், புகைச் சான்றிதழ் உள்ளிட்ட எதுவும் இல்லாமல் ஏதோ ஒரு போலி எண்களை பதிவு செய்து கொண்டு இந்த ஆட்டோக்களை இங்கு இயக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆட்டோக்கள் பகலில் இயக்கப்பட்டு விட்டு இரவு நேரங்களில் ஆங்காங்கே உள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். மறுநாள் காலையில் வந்து அந்த ஆட்டோக்களை எடுத்து இயக்குகின்றனர். இது ஒருபுறம் ஓடிக் கொண்டுள்ளது இயங்கிக் கொண்டுள்ளது .இந்த பிரச்சனைக்கு இரும்பு கரம் கொண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலரும், வேலூர் மாவட்ட காவல்துறையும் இணைந்து தினமும் அதிரடி சோதனை நடத்தினால் மட்டுமே இந்த ஆட்டோக்களுக்கு ஒரு விடிவு பிறக்கும், முடிவு பிறக்கும். பொது மக்களும், வெளியூர் பயணிகளும், வெளிமாநிலங்கள் மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளும் காப்பாற்றப்படுவார்கள். இந்த செயலை துணிந்து மாவட்ட காவல் துறையும், வட்டார போக்குவரத்து அலுவலரும் செய்வார்களா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.