
நில உரிமையாளரிடம் முறையாக அனுமதி பெறாமல் இசைஞானி இளையராஜாவின் இசை ராஜாங்கம் இன்னிசை நிகழ்ச்சி நடத்தும் உரிமையாளர் மீது பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார்!வேலூர், ஜூன் 13-வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அணைக்கட்டு தாலுக்கா, கந்தனேரி ஊராட்சியில் சுமார் 15 ஏக்கர் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து இசைஞானி இளையராஜாவின் இசை ராஜாங்கம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்த இடத்திற்கு பஞ்சமி நில உரிமையாளரிடம் முறையாக எவ்விதமான அனுமதியையும் பெறாமலும், விளைநிலங்களை சேதப்படுத்தியும், நிலத்தை ஆக்கிரமித்து நடைபெற இருந்த நிகழ்ச்சியை நிறுத்தி வைக்குமாறு அந்தப் பகுதி தலித் சமுதாய பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். அந்தப் புகாரின் பேரில் பள்ளிகொண்டா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் அணைக்கட்டு வட்டாட்சியர் ஆகியோர் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற இருந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த நிலம் தலித் மக்களின் நிலம் என்றும், அவர்களிடம் முறையாக முன் அனுமதியும் பெற்ற பிறகு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அந்த நிலம் அரசு நிலமும் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால் நில உரிமையாளர்களிடம் முறையாக முன் அனுமதி பெற்ற பிறகே நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் பள்ளிகொண்டா ஆய்வாளருக்கு, அணைக்கட்டு வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இன்னிசை ராஜாங்கம் கச்சேரி நடைபெற இருந்த நிகழ்ச்சிக்கான கட்டமைப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் இந்த இசை நிகழ்ச்சி என்று நடைபெறும் என்று ரசிகர்கள் மற்றும் டிக்கெட் முன்பதிவு செய்து ள்ள பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் இந்த இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடக்கும் என்கின்றனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். எது எப்படி போனாலும் ரசிகர்கள் ஏமாற்றம் இன்றி நிகழ்ச்சியை கண்டுகளிக்க வழிவகை செய்தால் சரி என்கின்றனர் சமூக ஆர்வலர்களும் நடுநிலையாளர்களும். இளையராஜா இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறுமா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.










Leave a Reply