
பேரணாம்பட்டு நகரமன்ற கூட்டத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்களை ஒருமையில் பேசும் நகராட்சி ஆணையாளர் மோகன் குமாரை கண்டித்து நகர மன்ற உறுப்பினர்கள் நகர மன்ற கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளிநடப்பு!வேலூர், மே 30-வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகரமன்ற கூட்டம் பல மாதங்களாக நடத்தப்படவில்லை. தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு பிறகு முதல் முறையாக நகரமன்றக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நகர மன்ற கூடத்தில் நகர மன்றக் கூட்டம் நடைபெறாமல் நகர மன்ற தலைவரின் அவையில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் பி. பிரேமா வெற்றிவேல் தலைமை தாங்கினார். நகர மன்ற துணைத் தலைவர்.ஆலியார் ஜூபேர் அஹமத் முன்னிலை வகித்தார். நகராட்சியில் நகர மன்ற கூட்டத்தில் பெண் நகர மன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் நகர மன்ற கூட்டத்தில் பேசுவது தொடர்ந்து வாடிக்கையாக நடந்து வருகின்றது. இதை கண்டிக்க வேண்டிய நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றி வேல், நகர மன்றத் துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர் அஹமதும், நகராட்சி ஆணையாளர் மோகன்குமாரும் இதை கண்டு கொள்ளாமல் அமைதி காத்து வருகின்றனர். நகராட்சி பெண் கவுன்சிலர்களின் கணவர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றனர். மேலும் நகராட்சி ஆணையாளர் மோகன் குமார் நகராட்சியில் நடைபெறும் ஒரு சில குறைகளையும், கோரிக்கைகளையும், பொதுமக்கள் எடுத்துச் சொன்னால் அதை கண்டு கொள்ளவில்லை. தூய்மை பணியாளர்களை நீ வா போ என்று ஒருமையில் பேசுவதாகவும் புகார் கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்திலேயே இது போன்ற அடாவடிகளும் ,அராஜகங்களும் பேரணாம்பட்டு நகராட்சியில் மட்டுமே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிய குழாய் இணைப்புகளை போடும் பொதுமக்களிடம் இருந்து குழாய் இணைப்புக்கான டெபாசிட் தொகையைப் பெற்றுக் கொண்டு அதற்கு ரசீது தராமல் குழாய் இணைப்புகளை நகராட்சி ஆணையாளர் மோகன்குமார் வழங்கி விடுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து வேலூர் மாவட்ட நகராட்சிகளின் அதிகாரியிடம் வாய் மொழியான புகார்களை அளித்தும் (RDM0) ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இன்னமும் சொன்னால் பேரணாம்பட்டு நகராட்சியில் செய்யாத வேலைகளுக்கெல்லாம் ரசீது போட்டு பல லட்சங்களை மேற்கண்ட 3 பேரும் கூட்டு கொள்ளை அடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி தானே நேரடியாக வந்து ஆய்வு செய்து ஆராய்ந்து பார்த்தால் பல தில்லுமுல்லு வேலைகள் நடந்திருப்பது வெட்ட வெளிச்சமாக வெளியில் தெரியவரும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் பேரணாம்பட்டு நகராட்சியை திமுக அல்லாத வேறு ஏதாவது ஒரு கட்சி நிர்வாகம் செய்ய வந்தால் பேரணாம்பட்டு நகராட்சி சீரோடும் சிறப்போடும் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மேலும் பேரணாம்பட்டு நகராட்சியில் நடைபெறும் தில்லுமுல்லு வேலைகளை கண்டித்து ஐந்தாவது வார்டு நகர மன்ற உறுப்பினர். வழக்கறிஞர் சி.அப்துல் ஹமீத் உள்ளிட்ட ஒரு சில நகர மன்ற உறுப்பினர்கள் நகர மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளியே சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.










Leave a Reply