செய்யாறில் கேஸ் சிலிண்டர் வழங்குவதில் அலைகழிப்பு -ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் திடீர் சாலை மறியல் !செய்யாறு, மே 19 -செய்யாறில் கேஸ் சிலிண்டர் வழங்குவதில் அலைகழிப்பு – குளறுபடியால் புகார் ஏற்பட்டுள்ளதாக கூறி வாடிக்கையாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர்.ஈரானில் போர் தொடங்கிய நாள் முதல் செய்யாறில் கடந்த 2 மாதங்களாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ‘தலைவிரித்து’ ஆடுகிறது. இதை சரி செய்ய முடியாமல் கேஸ் விநியோகிஸ்தர்கள் தடுமாறி வருகின்றனர். செய்யாறு நகரில் ‘இண்டேன் கேஸ்’ – ‘பாரத் கேஸ்’ என, 2 கேஸ் விநியோகஸ்தர்கள் இருந்து வருகின்றனர். இவர்களது ஏஜென்சி மூலமாக செய்யாறு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு, தலா 600 சிலிண்டர்கள் விநியோகம் செய்ய வேண்டும்.கேஸ் ‘டெலிவரி பாய்கள்’ பகுதி – பகுதியாக சென்று வாடிக்கை யாளர்களுக்கு – சிலிண்டரை வழங்கி வரும் பணிகளை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக இவர்களது பணி சரிவரவில்லை என, வாடிக்கையாளர்கள் பரவலாக பேசி வருகின்றனர். இது தொடர்பான புகார்களும் கேஸ் விநியோகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டிய கேஸ் விநியோகிஸ்தர்கள் இதுகுறித்து, ‘செவி சாய்க்காமல்’ மெத்தனமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.சில வாடிக்கையாளர்களுக்கு 50 நாட்கள் ஆகியும் கூட சிலிண்டர் வழங்கப்படவில்லை என, தெரிகிறது. தங்களது சிலிண்டர் வீடுகளுக்கும் வந்து சேரவில்லை. நாங்களே கேஸ் குடோன்களுக்கு எடுத்து வந்தாலும் எங்களை பற்றி கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை வாடிக்கையாளர்கள் முன் வைக்கின்றனர். நேற்று காலை 6 மணி அளவில் இண்டேன் கேஸ் குடோன் – பாரத் கேஸ் குடோன் என, இரண்டு இடங்களிலும் தல 30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து சிலிண்டர்களுக்காக காத்திருந்தனர். இரண்டு இடங்களிலும் 10 மணி வரை வாடிக்கையாளர்களை காத்திருந்தனர். அந்தந்த ‘டெலிவரி பாய்கள்’ இந்த வாடிக்கை யாளர்களை கண்டு கொள்ளவில்லை என, கூறப்படுகிறது.இதனால், ஆத்திரமடைந்த 60க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஒன்று திரண்டு செய்யாறு பஸ் நிலையம் அருகே உள்ள ஆற்காடு சாலையில் சிலிண்டர்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். எங்களுக்கு வழங்க வேண்டிய சிலிண்டரை வழங்காமல் அலைகழித்து வரும் விநியோகஸ்தர்கள் மீது, அந்தந்த ஆயில் நிறுவன உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோஷங்களையும் எழுப்பினர். இத்தகவல் அறிந்த செய்யாறு காவல் நிலைய எஸ்.ஐ., வரதராஜன் – தனிப்பிரிவு காவலர் முருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனால், முக்கிய சாலையான இங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.