வேலூரில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த ஆட்டோவில் பேட்டரி திருட்டு: சிஎஸ்ஆர் கூட பதிவு செய்யாத வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார்!வேலூர், ஏப். 26-வேலூர் பிஷப் டேவிட் நகரைச் சேர்ந்தவர் தேவசகாயம் (45 ).இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் பணி முடிந்து கடந்த 20ஆம் தேதி (திங்கட்கிழமை) இரவு 11 மணிக்கு தனது வீட்டின் முன்பு வாடகை ஆட்டோவை நிறுத்தி வைத்துவிட்டு தூங்கச் சென்று விட்டார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்தபோது ஆட்டோவில் இருந்த பேட்டரியை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் தேவசகாயம் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்குச் சென்று குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அந்த புகார் மனுவை பெற்றுக்கொண்ட தெற்கு குற்றப்பிரிவு போலீசார் சிஎஸ்ஆர் கூட வழங்காமல் அவரை அலைகழித்துள்ளனர். இதுநாள் வரை அந்த பேட்டரி திருட்டு போனது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, விசாரணையும் நடத்தவில்லை. சிஎஸ்ஆரும் அவருக்கு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு புகாரை பெற்றால் சிஎஸ்ஆர் தர வேண்டும் என்பது விதி. அந்த விதியை மீறி செயல்படுகின்றனர் தெற்கு காவல் நிலைய போலீசார் என்று சொன்னால் அது மிகையாகாது. இது போன்ற தகவல்கள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் காதுகளில் விழுகிறதா? அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். மாவட்டத்தில் நடக்கும் நிகழ்வுகள், மறைக்கப்படும் உண்மை தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வேலையை பார்க்க நியமிக்கப்பட்ட தனிப்பிரிவு போலீசார் என்ன வேலைதான் பார்க்கின்றனர் என்று தெரியவில்லை. இவர்களும் காவல் நிலையத்தில் சீருடை அணிந்து பணியாற்றுபவர்களுடன் சேர்ந்து அவர்கள் தரும் ‘ப’ வைட்டமினுக்கு ஆசைப்பட்டு எந்த தகவலையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் மறைத்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாக இதில் இருந்து தெரிய வருகிறது. பொதுமக்கள் புகாரை கொடுத்துவிட்டு கிணற்றில் போன்ற கல் போன்று கையில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் அலைந்து திரிந்து கொண்டுள்ளனர். இந்த ஒரு விஷயமே அதற்கு உதாரணமாக கொள்ளலாம். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப் பிரிவு போலீசாரை கூண்டோடு மாற்றிவிட்டு புதிய நபர்களை குறிப்பாக உண்மை தன்மையை கண்டறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்பவர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்களும், பாதிக்கப்பட்ட நபர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இது போன்று தொலைந்த ஆட்டோவின் பேட்டரி கிடைக்குமா? கிடைக்காதா? நடவடிக்கை எடுப்பார்களா? எடுக்க மாட்டார்களா? தெற்கு குற்றப்பிரிவு போலீசார் என்பது சிதம்பர ரகசியமாகவே உள்ளது. வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இனி இதில் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காவல்துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இதுபோன்ற செயல்களால் மெல்ல இழந்து வரச் செய்கின்றது இது போன்ற சம்பவங்கள் என்று சொன்னால் அதுதான் நிதர்சனம்.
Leave a Reply