
குடியாத்தம் தனி தொகுதியை தக்க வைத்துக் கொண்ட அதிமுக வேட்பாளர் பரிதா!வேலூர், ஏப். 22-குடியாத்தம் தொகுதியில், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 7 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற ஜி.பரிதாவே இந்த முறை மீண்டும் களம் காண்கிறார். வெற்றி வாய்ப்பை இழந்தாலும் சற்றும் கவலைப்படாமல், கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் பணி, கட்சிப் பணி, பேரணாம்பட்டு அரிமா சங்கப் பணி என்று பொதுச்சேவையில் ஈடுபட்டதே அவருக்கு பிளஸ் பாயின்ட். செல்லும் இடங்களில் எல்லாம் உற்சாகமாய் வரவேற்கும் மக்கள் அவரை சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்புவோம் என்று உரத்தக் குரலில் ஒருசேர முழங்குகின்றனர்.திமுகவே போட்டியிடும் என்ற நிலையில் கடைசி நேரத்தில் தேமுதிகவுக்கு சீட் கொடுத்ததோடு, வெளியூர் நபரான கே.பி.பிரதாப் வேட்பாளர் என்பதால் காணப்படும் அதிருப்தியும் பரிதாவுக்கு போனஸ் மதிப்பெண்கள் கிடைக்கின்றன. தேர்தல் பணியை தொய்வு இல்லாமல் செய்து வந்த பரிதாவுக்கு இம்முறை வெற்றி நிச்சயம் என்பதே மக்களின் டாக்.குடியாத்தம் ரிசர்வ் தொகுதியில், அதிமுக சார்பில் ஜி.பரிதா, திமுக கூட்டணியில் தேமுதிகவின் கே.பி.பிரதாப், தவெக சார்பில் மியூஸிக் டீச்சர் சிந்து, நாம் தமிழர் சார்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர் இமலன், சசிகலாவின் அஇபுதமமுக சார்பில் தபிதாள் உட்பட பலர் களம் காண்கினறனர்.தோல்வியுற்றாலும் மனம் தளராமல் 5 ஆண்டுகள் மக்கள் பணியும், கடந்த சில மாதங்களில் வேட்பாளராகி விடுவோம் என்று தலைமை அறிவித்த உறுதிமொழியால் தொகுதியை பல முறை ரவுண்ட் வந்துவிட்ட ஜி.பரிதாவுக்கு தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் பரிட்சயம். இதோடு, கிளைக்கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை நேரடியாக அறிமுகமாகிவிட பரிதாவுக்கு செல்லுமிடமெல்லாம் உற்சாக வரவேற்பு என்றால் கேட்கவா வேண்டும்.குடியாத்தம் பொது தொகுதியாக இருந்தபோது 2006 எம்எல்ஏ தேர்தலின்போது, அதிமுக சார்பில் போட்டியிட்ட நகர செயலாளர் ஜே.கே.என்.பழனி தனக்கு எதிராக தனித்துப் போட்டியிட்ட எல்.கே.சுதீஷ் பெற்ற 20 ஆயிரம் வாக்குகளால், தான் 1653 வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் ஜி.லதாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். அன்று அந்த சுதீஷ் எம்.பி.யாகிவிட்ட நிலையில், தனக்கான மாபெரும் அரசியல் வாய்ப்பை இழக்க நேரிட்ட தேமுதிகவை வீழ்த்திவிட வேண்டும் என்று ஜே.கே.என்.பழனியும் பொது முகவராக அதிமுகவின் பரிதாவுக்கு வியூகங்களை வகுத்து கொடுக்கிறார். அதிமுகவின் கஸ்பா மூர்த்தி, எல்.சீனிவாசன், பொகளூர் பிரபாகரன், கள்ளூர் சிவா, வக்கீல் கோவிந்தசாமி என்று பெரிய பட்டாளமே பரிதாவின் வெற்றிக்கு துணை நிற்கிறது.பாமகவின் மாவட்ட செயலாளர் ஜி.கே.ரவி, முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் குமார், நகர செயலாளர் புவனேஸ்வரிபேட்டை குமார் உட்பட நிர்வாகிகள் இளைஞர் படையோடு பரிதாவுக்கு தோள் கொடுக்கின்றனர். பாஜகவின் ஜெகன், புரட்சி பாரதம் கஸ்பா மேகநாதன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் களப் பணியை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தை அதிமுக வேட்பாளர் பரிதா சென்னைக்கே நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இரு மாதங்களுக்கு முன்பு பள்ளிகொண்டாவுக்கு வருகை தந்த தமமுக தலைவர் ஜான்பாண்டியன் அதிமுக கூட்டணியில் போட்டியிடுவோரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தனது கட்சியினருக்கு அளித்த உத்தரவைப் பின்பற்றி, வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் லாவண்யா தினேஷின் பெண்கள் படை தொகுதியை ரவுண்ட் வருகிறது. பரிதாவும் நூதன பிரசாரத்தில் தூள் கிளப்பினார். போண்டா சுடுதல், டீ போட்டு தருதல், குழந்தைகளை அழைத்து மகிழ்தல், உழவர் சந்தை அருகில் உள்ள காய்கனி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து நுகர்வோர் மனதில் தனி இடம் பிடித்தார். இவ்வாறு வாக்காளர்களோடு நெருங்கி பழகும் அணுகுமுறை பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.திமுக சார்பில் கடைசி நேரத்தில் தேமுதிகவுக்கு தொகுதி அளிக்கப்பட்டதாலும், அதிலும் உள்ளூரில் உள்ள குடியாத்தம் ரமணி போன்றோருக்கு சீட் அளிக்காமல், காட்பாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் கே.பி.பிரதாப்புக்கு சீட் வழங்கப்பட்டதாலும் திமுக கூட்டணியினரிடையே அதிருப்தி நிலவுகிறது. சீட் கேட்டு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், எம்எல்ஏ அமலு விஜயன், மாவட்ட துணை செயலாளரும் கல்லூரி முதல்வருமான எம்.பிரதாப்குமார் மற்றும் பலர் தீவிர களப்பணியை ஆற்றுகின்றனர். இருந்தாலும், உள்ளூர் நிர்வாகிகள் இன்னமும் சோர்விலேயே இருக்கின்றனர். காமராஜர் போட்டியிட்ட குடியாத்தம் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடாததால், காங்கிரஸாரிடையே சோகமும் இருக்கிறது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி.சுரேஷ்குமாரும் தனது அதிருப்தியை பேஸ் புக்கிலேயே வெளிப்படுத்தியுள்ளார். மாவட்ட துணை சேர்மன் கிரு்ஷ்ணவேணி, ஒன்றிய காங்கிரஸ் தலைவர்கள் வீராங்கன், சங்கர் போன்றோர் விரக்தியில் இருக்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியினரும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால், விரக்தியில் செஞ்சட்டைகளை அணியவே மறுக்கின்றனர். இதனால் பிரதாப்பின் பிரசாரம் எடுபடவில்லை என்ற வேதனை தொகுதி முழுவதும் எதிரொலிக்கிறது.தவெகவின சார்பில் போட்டியிடும் மியூஸிக் டீச்சர் சிந்துவோ பேரணாம்பட்டு பகுதியில் அறிமுகம் இல்லை. இதனால், குடியாத்தம் நகரத்தையும், சுற்றுப்புற கிராமத்தையுமே சுற்றி சுற்றிவருகிறார். நாம் தமிழர் கட்சியின் ஓய்வு பெற்ற ஆசிரியர் இமலன் சுற்றிசுற்றி வருகிறார்.சசிகலாவின் அஇபுதமமுக கட்சி வேட்பாளர் தபிதாள் , 5 பட்டங்களைப் பெற்றவர், இலவசமாக டியூஷன் சென்டர் நடத்துபவர், சமூக சேவகர் என்று பெயரை பெற்றிருகிறார். இவரிடம் படித்த மாணவர்கள் குடியாத்தம் தொகுதியில் வாட்ஸ் ஆப்புகளில் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். தபிதாளின் மகன் ரித்திக் , குடியாத்தம் நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இருந்தாலும் அவர் தனக்கு கட்சியே முக்கியம் என்று தேமுதிக வேட்பாளர் பிரதாப்புக்கு பிரசாரத்தில் ஈடுபட்டுவருவது தொகுதியில் ஹைலைட்.சசிகலா கட்சியில் போட்டியிட குடியாத்தம் தொகுதியில் பத்து பேருக்கு மேல் சீட் கேட்டும், தபிதாளுக்கு கிடைத்தது. சீட் கேட்டு கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருந்தவர்களிடம் தபிதாள் நேரடியாக அணுகி பேசி, அவர்களை தனக்கு ஆதரவாக பிரசாரத்தில் வைக்கும் முயற்சியில் உள்ளார். இருப்பினும், சசிகலா கட்சியில் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகளோ, பொறுப்பாளர்களோ இல்லாததால், தேர்தல் பணிகளை வகுப்பதில் வேட்பாளர் தபிதாளுக்கு சிரமமாக இருக்கிறது. இருந்தாலும், அவரிடம் படித்த மாணவர்கள், கட்சி நிர்வாகிகள் துணையாக தொகுதியை வலம் வருகின்றனர். பேண்டு வாத்தியம் முழங்க அவரது பிரசாரம் அதிமுக, தேமுதிக வேட்பாளர்களையே அசத்துகிறது. மொத்தத்தில், டில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடியை நெசவாளர்களோடு இணைந்து தயாரித்த மக்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு யாரை அனுப்புவது என்று முடிவு செய்துவிட்டனர். வாக்காளர்களுக்கு தலா ரூபாய் 2500 மற்றும் ரூபாய் ஆயிரம் என்று வேட்பாளர்கள் பணத்தை வாரி இரைத்தாலும் குடியாத்தம் தொகுதியில் இம்முறை வெற்றிக்கனியை பறிப்பது அதிமுக வேட்பாளர் பரிதா என்பதை யாராலும் மாற்ற முடியாது என்பது நிதர்சனம்.










Leave a Reply