வேலூரில் மாவட்ட ஆட்சியர் வாகனத்தை சிறை பிடித்து பொதுமக்கள் திடீர் போராட்டம்!வேலூர், ஜூன் 27-வேலூர் மாவட்ட ஆட்சியர் வாகனத்தை வேலூர் வடக்கு காவல் நிலையத்தின் முன்பாக சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் புதிய மீன் மார்க்கெட் அருகில் மூன்று நாட்களுக்கு முன்பாக சைதாப்பேட்டையில் உள்ள முஸ்லிம் வாலிபர்களுக்கும், கன்சால்பேட்டையில் உள்ள முஸ்லிம் வாலிபருக்கும் இரவு சுமார் 10 மணிக்கு முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரும் சரமாரியாக கத்தியால் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் காவல் துறையினர் ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்ததாகவும், இன்னொரு தரப்பினருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு முன்பாக கன்சால்பேட்டையைச் சேர்ந்த முஸ்லிம் வாலிபர்களும், பெண்களும் சேர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் நடந்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் வாகனத்தை சிறைபிடித்து ஒரு தலைப்பட்சமாக காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று முஸ்லிம் பெண்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரை பார்த்து முறையிட்டு கூச்சலிட்டனர்.அதற்கு மாவட்ட ஆட்சியர் சட்டப்படி சரியான நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.பிறகு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் திடீர் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் அனைவரும் கலந்து சென்றனர்.

பேரணாம்பட்டு பகுதியில் உரிய அனுமதியின்றி இயக்கப்பட்ட 3 ஜேசிபிகளுக்கு அபராதம் விதிப்பு!வேலூர், ஜூன் 27-வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியில் உரிய அனுமதியின்றி மூன்று ஜேசிபிக்கள் இயங்குவதாக குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் துரைசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் துரைசாமி பேரணாம்பட்டு பகுதிக்குச் சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது மூன்று ஜேசிபிக்கள் அனுமதியின்றி இயங்குவது தெரியவந்தது. இதையடுத்து அந்த மூன்று ஜேசிபிக்களுக்கும் ரூபாய் ஒரு லட்சத்து 12 ஆயிரம் தொகையை அபராதமாக விதித்தார். அத்துடன் அந்த மூன்று ஜேசிபிக்களையும் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதை தொடர்ந்து இந்த மூன்று ஜேசிபிக்களின் உரிமையாளர்களும் ரூ. ஒரு லட்சத்து 12 ஆயிரத்தை வேலூர் மாவட்ட போக்குவரத்து அலுவலகத்தில் செலுத்தி விட்டு அந்த மூன்று ஜேசிபி வாகனங்களையும் மீட்டுச் சென்றனர். இந்த சம்பவம் பேரணாம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம்!வேலூர், ஜூன் 27-வேலூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் கஸ்பா ஏஜாஸ் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளரும், மேலிட பொறுப்பாளருமான ஓசூர் நவ்ஷாத் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிதம்பரத்தில் சர்ச்சையற்ற பரப்புரை மேற்கொண்டு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர்மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏவுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.மாநில தலைமை நிர்வாகக் குழு நிறைவேற்றிய தீர்மானங்களின் அடிப்படையில் அடுத்த மூன்று மாதங்களுக்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு அமல்படுத்துவது உள்ளிட்ட பொது தீர்மானங்கள் சில நிறைவேற்றப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவ – மாணவிகள் விடுதிகளில் தங்கிப் படிக்க விண்ணப்பிக்கலாம் :கலெக்டர் சினேகா அழைப்பு !காஞ்சிபுரம், ஜூன் 27 -காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல மாணவ – மாணவிகள் விடுதிகளில் தங்கிப் படிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சினேகா அழைப்பு விடுத்துள்ளார் .இது குறித்து கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான 74 விடுதிகளும், கல்லூரிகளில் மாணவர்களுக்கான 51விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ – மாணவிகள் தங்கிப் படிக்கலாம். கல்லூரிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ – மாணவிகள் அரசு விடுதிகளில் தங்கிப் படிக்கலாம்.விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல், சலுகைகளும் வழங்கப்படுகின்றன.4ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ – மாணவிகளுக்கு 4 இணை சீருடைகளும் வழங்கப்படும்.10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ – மாணவியருக்கு கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு NEET – JEE நுழைவுத் தேர்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும்.விடுதிகளில் சேர விரும்பும் மாணவ – மாணவியர்கள்பெற்றோர் – பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.தகுதியுடைய மாணவ – மாணவியர் விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வழங்கலாம்.கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன’. இவ்வாறு கலெக்டர் சினேகா வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.