வேலூரில் 13 பனை மற்றும் 4 ஈச்ச மரங்கள் தீ வைத்து அழிப்பு:மாவட்ட ஆட்சியர், – மரங்களை அழித்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!வேலூர், ஆக. 15-வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ரங்காபுரம் – காட்பாடி தாலுகா பிரம்மபுரம் பாலாற்றின் குறுக்கே இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் அண்மையில் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், சாலைப் பணிகளை மேற்கொண்ட நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் தரப்பினர், சாலையிலிருந்து சுமார் 100 அடி தொலைவில் இருந்த 13 பனை மரங்கள் மற்றும் 4 ஈச்ச மரங்களை வெட்டி தீ வைத்து அழித்துள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதன் காரணமாக சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து வந்த 13 பனை மரங்களும், 4 ஈச்ச மரங்களும் கருகி சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.பனை மரம் தமிழ்நாட்டின் மாநில மரமாக விளங்குவதுடன், நிலத்தடி நீர் பாதுகாப்பு, மண் அரிப்பு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல ஆண்டுகள் பராமரித்து வளர்க்க வேண்டிய மரங்களை தேவையின்றி அழித்திருப்பது மனிதநேயமற்ற செயல் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கு எதிரான செயலாகவும் கருதப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்புச் சட்டம், 1994 (Tamil Nadu Preservation of Palmyrah Trees Act, 1994), இந்திய வனச் சட்டம், 1927 மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 ஆகிய சட்டங்களின்படி உரிய அனுமதியின்றி பனை மரங்களை வெட்டுதல், சேதப்படுத்துதல் அல்லது அழித்தல் குற்றமாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் இதனைக் கண்டும் காணாமல் முற்றிலுமாக வேடிக்கை பார்த்த கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வேலூர் தாசில்தார் மீதும் கடுமையான நடவடிக்கைகளும், அபராதம் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.எனவே, இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி.எஸ். லீலா அலெக்ஸ் உடனடியாக விசாரணை நடத்தி, மரங்களை அழித்தவர்களை அடையாளம் கண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை ஈடுசெய்யும் வகையில் குறைந்தபட்சம் 100 பனை மரக்கன்றுகள் மற்றும் 50 ஈச்ச மரக்கன்றுகள் நடவு செய்து, இதற்கு நஷ்ட ஈடாக குறைந்தபட்சம் 50 லட்சம் அபராதம் விதித்து அரசு செலுத்த உத்தரவிட வேண்டியும், தற்போது நடும் மரங்களை அவற்றை பராமரிக்க நெடுஞ்சாலைத் துறை மற்றும் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.