ஆணழகன் போட்டியில் மிஸ்டர் காட்பாடியாக பட்டம் வென்றவர் இன்று அல்லல்படும் அவலம்: தமிழ்நாடு அரசு கண்டு கொள்ளுமா?வேலூர், ஜூலை 14-வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 1997ல் காட்பாடி ரயில்வே இன்ஸ்டிடியூட் வளாகத்தில் நடந்த தமிழ்நாடு அளவிலான வேலூர் மாவட்டத்தில் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் முனுசாமி வெற்றி பெற்று ‘மிஸ்டர் காட்பாடி’ என்று பட்டம் வென்றார். ஆனால் இவருக்கு தமிழ்நாடு அரசு எவ்விதமான உதவியும் செய்யவில்லை. விளையாட்டு வீரர் கோட்டாவில் இவருக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் காட்பாடி பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு உடற்பயிற்சி செய்ய பயிற்சி அளித்து வருகிறார். உடற்பயிற்சி கூடத்தில் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வரும் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார் முனுசாமி. ஆனால் சரியான வேலையின்றி குடும்பம் நடத்த சிரமமாக நாளை கழித்து வருகிறார். இளைஞர்கள் நல்வழியில் நடக்க போதை இல்லாத வாழ்க்கை முறையை வாழ தகுந்த அறிவுரைகள் வழங்கி தொண்டு செய்து வருகிறார். அத்துடன் சமூக ஆர்வலராகவும் பொதுமக்களுக்கு தொண்டாற்றி சேவை செய்து வருகிறார். இவருக்கு தமிழ்நாடு அரசு வாழ்வாதாரம் சிறக்க ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. தமிழ்நாடு அரசு முனுசாமிக்கு ஏதாவது முன் வந்து உதவிபுரியுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.