தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் நடைபாதை பணிகளுக்காக 35 டெண்டர்கள் விடப்பட்டன. இந்த டெண்டர்களில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் ச. ஜோசப் விஜய் உத்தரவில் 25 டெண்டர்களும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்துள்ளது. கட்சியின் தலைவரான ச. ஜோசப் விஜய் முதல்வராகியுள்ளார். இந்நிலையில் தான் தேர்தல் தேதிக்கு முன்பாக அவசரஅவசரமாக கொடுக்கப்பட்ட டெண்டர்களை அரசு அதிரடியாக ரத்து செய்து வருகிறது.
ஊழல், முறைகேடு புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு புது தவெக சர்க்கார் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளார் முதல்வர் ச. ஜோசப் விஜய்.
அதன்படி தற்போது சென்னை மாநகராட்சியின் 35 டெண்டர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த டெண்டர்கள் தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாக பிப்ரவரி 19ம் தேதி மேயர் பிரியா ராஜன் சென்னை பெருநகர மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபாதை பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து சென்னை மாநகராட்சியின் சிறப்பு திட்டங்கள் துறையின் சார்பில் பிப்ரவரி 20ம் தேதி 35 பேக்கேஜ்களாக (பிரிவுகள்) டெண்டர் விடப்பபட்டது.
அதன்படி சென்னை அடையாறில் உள்ள சாஸ்திரி நகர், பெசன்ட் நகரில் உள்ள நான்காவது அவென்யூ, ராஜா முத்தையா சாலைவுடன் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், கீழ்ப்பாக்கம் பர்னாபி ரோடு, மைலாப்பூர் டாக்டர் பிஎஸ் சியாசாமி சாலை உள்ளடக்கிய பல இடங்களில் நடைபாதைகள் அமைக்க டெண்டர் விடப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது சில ஒப்பந்ததாரர்கள் டெண்டர் மதிப்பை முன்கூட்டியே நிர்ணயம் செய்தது, திட்டத்துக்கான மதிப்பீட்டை 4 மடங்கு அதிகமாக கணக்கீடு செய்தது, ஏலதின்போது 10 சதவீதம் கூடுதலாக்கியது உள்ளிட்டவற்றால் சென்னை மாநகராட்சிக்கு நஷ்டம் ஏற்படும். இந்நிலையில் தான் 35 டெண்டர்களும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒவ்வொரு டெண்டரும் 2 அல்லது 3 சாலைகளை உள்ளடக்கியதோடு மட்டுமின்றி அதன் மதிப்பு ரூ.8 கோடி முதல் ரூ.9 கோடியாக உள்ளது. மொத்த மதிப்பு என்பது ரூ.284 கோடியாகும்.
ஆனால் உண்மையில் ஒவ்வொரு பேக்கேஜ் பணிகளுக்கும் ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி தான் செலவு வரும் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி செயற்பொறியாளர் ஒருவர் கூறுகையில், ”பொதுவாக நடைபாதை பணிகளுக்கு கொத்து வேலை, கான்கிரீட் சமன்படுத்துதல் உள்ளடக்கிய பணிகள் மட்டுமே தேவை. இதற்கு ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரை தான் செலவு ஆகும்” என்றார். இந்த டெண்டர்களுக்கான பணி ஆணைகள் இன்னும் வழங்கப்படாத நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் முதல்வர் ச. ஜோசப் விஜய் உள்ளார். முதல்வராக இருக்கும் விஜய் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையை தன்வசம் வைத்துள்ளார். தேர்தல் நெருங்கும்போது முந்தைய திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட அனைத்து டெண்டர்களையும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் தான் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர சுமார் 40 பணிகள் மறுஆய்வில் வருகிறதாம்.
இதுபற்றி சென்னை ஒப்பந்தாரர்கள் சங்கத்தின் தலைவர் ராமராவ் கூறுகையில், ”சென்னை நகரில் மட்டும் 400 ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இதனால் ஓபன் டெண்டர் விட்டு இருந்தால் பலரும் பங்கேற்று இருப்பார்கள். இதனால் நிதி சேமிப்பு ஏற்பட்டு இருக்கும். ஆனால் டெண்டர் எடுக்க சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிந்து இருந்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்ற கேள்வி வருகிறது. இதனால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நம்மோடு பகிர்ந்து கொண்டார்.










Leave a Reply