காட்பாடி காங்கேயநல்லூர் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி: கண்டுகொள்ளாத வேலூர் மாநகராட்சி நிர்வாகம்!வேலூர், ஜூன் 15-வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி காங்கேயநல்லூர் ரோடு, அவ்வையார் தெருவில் மழைநீர் வடிய வழியின்றி சில தெருக்களில் குளம் போல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்ல கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாகஇப்பகுதியில் உள்ள கற்பக விநாயகர் கோவில் எதிரே நேற்றுமுன்தினம் இரவு பெய்த கன மழையினால் மழை நீர் குளம் போல் அங்கே தேங்கியுள்ளது. மழைநீர் தங்குதடையின்றி செல்ல வடிகால் வசதி இல்லாத நிலை இங்கு உள்ளது. பொதுமக்கள் படும் பாட்டை காட்பாடி எம் எல் ஏ மருத்துவர் என்ற போதிலும் கண்டும் காணாமல் அலட்சியமாக நடந்து கொள்கிறார். வேலூர் மாநகராட்சி நிர்வாகமும் எம்எல்ஏ வுக்கு ஒரு படி மேலே செயல்படுகிறது. இப்படி போட்டி போட்டு கொண்டு மக்கள் பணியை செய்யாமல் தான் தோன்றித் தனமாக மாநகராட்சி நிர்வாகமும், தொகுதி எம்எல்ஏவும் செயல் படுவது ஏற்புடையதாக இல்லை.இப்படி ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு வைக்கிறார் எம் எல் ஏ மருத்துவர் சுதாகர் என்று சொன்னால் அதுதான் நிதர்சனம்.இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.எனவே, வேலூர் மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு ஔவையார் தெருவில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் இனிவரும் காலங்களில் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முறையான வடிகால் வசதியை அமைத்து பொதுமக்கள் நிம்மதியாக வாழ வழி வகை செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காணும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.