கே. வி. குப்பம் வட்டாட்சியர் மர்ம மரணம்: போலீசார் தீவிர புலன் விசாரணை!வேலூர், மே 12-வேலூர் மாவட்டம், கே. வி. குப்பம் வட்டாட்சியராக கே. பலராமன் (40 )பணியாற்றி வந்தார். இவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.குடியாத்தம் வட்டம், எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன். இவர் வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தேர்தலின் போது கே. வி. குப்பம் வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தேர்தலில் அவர் சிறப்பாக பணியாற்றினார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ( 9ஆம் தேதி) இரவு பலராமன் அவரது உடலில் பலத்த காயங்களுடன் வீட்டில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மர்ம மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பலராமனுக்கு மனைவி சுகன்யா, இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் வருவாய்த்துறையினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.