வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் வேலை தள பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம் கொண்டாட்டம்!வேலூர்,ஏப்.30-வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) நிறுவனத்தின் தொழில்சார் ஆரோக்கிய பிரிவு சார்பில் கடந்த 28ஆம் தேதி வேலைத்தள பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினத்தை நினைவு கூர்ந்தது. இந்த ஆண்டின் கருப்பொருள் ‘ஒலி அபாயம் :விழிப்புணர்வை தடுப்பு’ என்பதாகும். ஒளியின் பல்வேறு அம்சங்கள், அதன் மூலாதாரங்கள், கட்டுப்பாடு, உடல் நல பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உரைகள் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஐ .சி. எம். ஆர். தெற்கு மண்டல தொழில்சார் சுகாதார மையத்தின் பொறுப்பாளர் டாக்டர் பி.ரவிச்சந்திரன், மற்றும் சிஎம்சி இயக்குநர் டாக்டர் பிஜு ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிறுவனத்தின் தொழில்சார் ஆரோக்கிய பிரிவால் எழுதப்பட்ட சுகாதார பணியாளர்களுக்கான தொழிலாளர் ஆரோக்கியத்தின் அடிப்படைகள் என்ற புத்தகம் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டது. பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான தலைப்பு குறித்து போஸ்டர் மற்றும் வாசகம் எழுதும் போட்டிகள் நடத்தப்பட்டன. வேலை தொடர்பான மற்றும் வேலை தொடர்பற்ற சூழல்களில் ஒலியின் தீங்கான விளைவுகள் குறித்து பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் வாரம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வேலை தளத்தில் அதிகமாக காணப்படும் அபாயகரமான காரணிகளில் முக்கியமானது ஒலி ஆகும். ஒலியால் ஏற்படும் செவித்திறன் இழப்பு என்பது மிகவும் பொதுவான தொழில் சார்ந்த நோய்களில் ஒன்றாகும். சுகாதார சேவை அமைப்புகளில் ஒலி என்பது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் தொழில் சார் அபாயம் ஆகும். மருத்துவமனைகளில் உள்ள பல செயல்களும், உபகரணங்களும் சுகாதாரப் பணியாளர்களை இந்த அபாயத்திற்கு உள்ளாக்குகின்றன. அதிக அளவிலான ஒலிக்கு உட்படுவது செவித்திறன் இழப்பை ஏற்படுத்துவதோடு இதய துடிப்பு அதிகரிப்பு, ரத்த அழுத்தம் உயர்வு போன்ற மன அழுத்தம், பதட்டம் மற்றும் தூக்கமின்மை போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். உருவாக்கப்பட்டுள்ள இந்த விழிப்புணர்வு நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களின் ஆரோக்கியமும், பாதுகாப்பும் மேம்பட உதவும் என நம்பப்படுகிறது. இவ்வாறு இந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூர் சிஎம்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜாஸ்பர் செய்திருந்தார்.
Leave a Reply