வேலூர் மாநகராட்சி 3வது வார்டு சி. எம். ஜான் தெரு அருகில் குடிநீருக்கு தவிக்கும் பொதுமக்கள்: கண்டுகொள்ளாத மாநகராட்சி கவுன்சிலர்!வேலூர், ஏப். 26-வேலூர் மாநகராட்சி 3வது வார்டு பர்னீஸ்புரம். இந்த வார்டுக்கு உட்பட்டது சி. எம். ஜான் தெரு. இந்த வீதிக்கு அருகில் மிஷன் காம்பவுண்ட் அமைந்துள்ளது. அதற்கு பக்கத்தில் சர்ச் தெரு ஒன்று உள்ளது. இந்த பகுதியில் மிகவும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பொதுமக்கள், அன்றாடம் காய்ச்சிகள் வாழும் பகுதியாகும். இந்த பகுதியில் குடிநீருக்காக கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர். சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இது குறித்து வேலூர் மாநகராட்சி 3வது வார்டு கவுன்சிலர் திமுகவைச் சேர்ந்த ரவிக்குமாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் அந்த வேண்டுகோளை அலட்சியப்படுத்தியதோடு, தெனாவெட்டாக எனக்கு எப்போது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதுதான் இந்த பகுதிக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருவேன் என்று பதில் அளித்துள்ளார். தண்ணீருக்காக மூன்று தெருக்கள் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை இருப்பதாக பொதுமக்கள் எடுத்துக் கூறியும் அதை காதில் வாங்காமல அலட்சியப் போக்கில் நடந்து கொண்டுள்ளார் கவுன்சிலர் ரவிக்குமார் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. அதே சி.எம்.ஜான் தெருவில் சின்டெக்ஸ் தொட்டி கட்டி குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது. ஆனால் அந்த சின்டெக்ஸ் தொட்டியை யாரும் அதிக அளவில் பயன்படுத்துவதே கிடையாது. குறிப்பாக அந்த பகுதியில் உள்ள மாடுகளை குளிப்பாட்டுவது மற்றும் இயற்கை உபாதைகளை கழித்து விட்டு கால் கழுவுவது மற்றும் அந்த சின்டெக்ஸ் டேங்க் தொட்டியில் உள்ள குழாயில் ஹோசை சொருகி தங்களது வீடுகளுக்குள் வளர்க்கப்படும் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது என்று அநாவசியமாக தண்ணீரை வீணாக்கி வருகின்றனர் சி.எம்.ஜான் தெரு மக்கள் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை. சி.எம்.ஜான் தெருவில் வீட்டுக்கு வீடு மோட்டார் பொருத்தி தண்ணீர் செலவு செய்கின்றனர். அத்துடன் அனைத்து வீடுகளுக்கும் மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகமும் இடைவிடாது வீட்டுக்கு வீடு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இதே பகுதியில் சின்டெக்ஸ் டேங்க் அமைத்துக் கொடுத்துள்ளாரே தவிர தண்ணீரே இல்லாத பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை இந்த கவுன்சிலர் ரவிக்குமார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் என்னை கேட்காமல் பத்திரிகையாளர்களை சந்தித்து புகார் கூறுகிறீர்களா? அவர்களையே தண்ணீர் போட்டு கொடுக்க சொல்லுங்கள் என்று தெனாவெட்டாக பதில் கூறுகிறாராம். இவர் ஒரு மக்கள் பிரதிநிதியா? அல்லது ஒரு சைக்கோவா? என்று தெரியவில்லை என்கின்றனர் பொதுமக்கள். மக்கள் பணி செய்வதாகச் சொல்லி தேர்தலில் நின்று மக்களிடம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்று விட்டு இன்று அதே மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு தெனாவெட்டாக பதிலளிப்பதுடன் இப்போது நான் செய்ய மாட்டேன் என்று அடாவடி பேசுகிறார் இந்த கவுன்சிலர். இது குறித்து இந்த பகுதியில் வாழும் சமூக ஆர்வலர் பாபு என்பவர் கூறுகையில்: இது போன்ற திமிர் பிடித்த கவுன்சிலர்கள் எங்களுக்கு தேவை இல்லை. குறிப்பாக தவித்த வாய்க்கு தண்ணீர் ஊற்றாமல் அலட்சியமாக பதில் கூறுகிறார் இந்த கவுன்சிலர். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களை மிகவும் கேவலமாக நடத்துகிறார். மனிதனை மனிதனாக கூட மதிக்க தெரியாதவர் ஒரு கவுன்சிலரா? என்று கேள்வி எழுப்பியதுடன் தண்ணீர் இல்லாத பகுதிக்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக வேலூர் மாநகராட்சி நிர்வாகம் தண்ணீர் கொடுக்க உடனடியாக வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார். குறிப்பாக பொதுமக்கள் வேண்டுகோளை செவிமடுக்காத இந்த கவுன்சிலர் சமூக ஆர்வலரின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா? என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால் இந்த பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு மிஷன் காம்பவுண்டு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தவும் ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது. நிலைமை மோசமாவதற்குள் வேலூர் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த கோடையை சமாளிக்க தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Leave a Reply