
ரயில் படியில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் தவறி விழுந்து பலி!வேலூர், ஏப். 12-சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (20) .இவர் சேலத்தில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். லோகேஷ் மற்றும் அவரது நண்பர் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த முகமது அலி (18) ஆகிய இருவரும் சென்னையைச் சுற்றிப் பார்ப்பதற்காக மங்களூர் விரைவு ரயிலில் சேலத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டனர்.முன்பக்க பொதுப்பெட்டியில் பயணம் செய்த இருவரும் ரயிலின் படிக்கட்டு ஓரமாக அமர்ந்து தூங்கியபடி பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் காலை ரயில் காட்பாடி மற்றும் சேவூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது எதிர் பாராதவிதமாக லோகேஷ் ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்தார்.இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது நண்பர் முகமது அலி வாலாஜா ரயில் நிலையத்தில் இறங்கி இதுகுறித்து தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காட்பாடி ரயில்வே போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.










Leave a Reply