குடியாத்தம் அடுத்த மோர்தானா போடியப்பனூரில் சுடுகாட்டு பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஆதிதிராவிடர்கள் வட்டாட்சியரிடம் மனு!

வேலூர்,மார்ச் 21-
குடியாத்தம் அடுத்த மோர்தானா போடியப்பனூரில் சுடுகாட்டு பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ள வன்னியர்களிடம் இருந்து வழியை மீட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைத்து தர வேண்டும் என்று ஆதிதிராவிடர்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, மோர்தானா அடுத்த போடி யப்பனூரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவர்கள் சுமார் மூன்று தலைமுறைகளாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு முறையாக பொது சுடுகாடு வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த சுடுகாட்டிற்கு செல்ல வழி இல்லாமல் வன்னியர்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அந்த நிலத்தில் செல்லக்கூடாது என்றும், அப்படி மீறி சென்றால் ஜாதி கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது குறித்து பலமுறை சுடுகாட்டு பாதையில்லாத ஆதிதிராவிடர்கள் வருவாய்த்துறையினரிடம் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர். ஆனால் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அந்த புகார் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சுடுகாடு மற்றும் சுடுகாடு செல்வதற்கு உண்டான வழியையும் ஆக்கிரமிப்பு செய்துள்ள சமூகவிரோதிகளிடமிருந்து இடத்தை மீட்டு ஆதிதிராவிடர்கள் சிரமம் இன்றி சுடுகாட்டுக்குச் செல்ல வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும் என்று புகார் மனுவை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடியாத்தம் வட்டாட்சியர் சந்தோஷ் குமாரிடம் அளித்தனர். இந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட குடியாத்தம் வட்டாட்சியர் சந்தோஷ் குமார் விரைவில் இந்த சுடுகாடு மற்றும் சுடுகாட்டுக்குச் செல்லும் பாதை ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீங்கள் சிரமமின்றி செல்ல வழிவகை செய்து தரப்படும் என்று உறுதி கூறினார். இருந்தும் பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர்கள் இந்த சுடுகாடு மற்றும் சுடுகாட்டுப் பாதை ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றி தராவிட்டால் தற்போது நடைபெற உள்ள 2026 சட்டசபை தேர்தலை புறக்கணிப்பு செய்வது என்று தாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்து விட்டு சென்றனர். இதனால் குடியாத்தம் பகுதியில் திடீர் பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு சுடுகாடும், சுடுகாட்டு பாதையையும் வருவாய்த்துறை உரிய முறையில் மீட்டுத் தருமா? அல்லது மீண்டும் கிடப்பில் போடுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.