வேலூர், பிப். 25-
வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகே முதியவர் ஒருவரை ஏமாற்றி அவரது ஏடிஎம் கார்டை மாற்றிக் கொடுத்து, அவரது கணக்கிலிருந்த ரூ. 20,800 திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்பாடி அடுத்த திருப்பாகுட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜ் (69). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று காலை சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள எஸ்பிஐ (SBI) ஏடிஎம் மையத்திற்குப் பணம் எடுக்க வந்துள்ளார்.
நடராஜூக்குத் தூரப்பார்வை குறைபாடு இருந்ததால், ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள எண்கள் சரியாகத் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவரின் உதவியை அவர் நாடியுள்ளார்.
நூதன முறையில் ஏடிஎம் கார்டு மாற்றம் செய்யப்பட்டது.
உதவி செய்வது போல் நடித்த அந்த மர்ம நபர், நடராஜின் கார்டைப் பெற்று இயந்திரத்தில் செலுத்தியுள்ளார். பின்னர், தான் வைத்திருந்த ஏடிஎம்ஐ 2 ,3 தடவை இயந்திரத்தில் செலுத்தி “இந்தக் கார்டில் பணம் இல்லை” என்று கூறி, நைசாகத் தன்னிடம் இருந்த வேறொரு போலி ஏடிஎம் கார்டை நடராஜிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நழுவியுள்ளார்.
மர்ம நபர் சென்ற அடுத்த 5 நிமிடங்களிலேயே, நடராஜின் செல்போனுக்கு ரூ. 20,800 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி (SMS) வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த நடராஜ் தனது கார்டைச் சரிபார்த்தபோது, அது தன்னுடையது அல்ல என்பதைக் கண்டறிந்தார். அந்த மர்ம நபர் அதே பகுதியில் உள்ள மற்றொரு ஏடிஎம் மையத்திற்குச் சென்று நடராஜின் கார்டைப் பயன்படுத்திப் பணத்தைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட நடராஜ் இதுகுறித்து உடனடியாக காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஏடிஎம் மையங்களில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பரபரப்பான பேருந்து நிறுத்தப் பகுதியிலேயே முதியவரை ஏமாற்றிப் பணம் பறிக்கப்பட்ட இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.











Leave a Reply